சனி, மார்ச் 25, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 215

68. அர்ச்சிஶ்மானர்ச்சித: கும்போ விஶுத்தாத்மா விஶோதன: |

அனிருத்தோSப்ரதிரத: ப்ரத்யும்னோSமிதவிக்ரம: || 

இந்தஅறுபத்தெட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

633. அர்ச்சிஶ்மான், 634. அர்ச்சித:, 635. கும்ப:, 636. விஶுத்தாத்மா, 637. விஶோதன: |

638. அனிருத்த:, 639. அப்ரதிரத:, 640. ப்ரத்யும்ன:, 641. அமிதவிக்ரம: ||

633. அர்ச்சிஶ்மதே நம:

அர்ச்சிஶ்மந்தோ ஒளிவீசுகின்றன 

யதீயேனார்ச்சிஶா அவருடைய ஒளியைப் பெற்றே 

சந்த்ரஸூர்யாதய: திங்கள், கதிரவன் முதலியவை 

ஸ ஏவ முக்ய: சிறந்த ஒளியை உடையவராதலால் 

அர்ச்சிஶ்மான் பகவான் 'அர்ச்சிஶ்மான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திங்களும், கதிரவனும் கூட பகவானிடத்தில் அவரது சிறந்த ஒளியை பெற்றே தாம் ஒளிவீசுகின்றன. அவ்வாறு சிறந்த ஒளி படைத்தவராதலால் பகவான் 'அர்ச்சிஶ்மான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

634. அர்ச்சிதாய நம:

ஸர்வலோகார்ச்சிதைர் அனைத்து உலகங்களிலும் (அதில் உள்ளோரால்) வழிபடப்படும் (அர்ச்சிக்கப்படும்) 

விரிஞ்ச்யாதிபி: ப்ரஹ்மா முதலானோரால் 

அப்யர்ச்சித இதி (தாம்) அர்ச்சிக்கப்படுவதால் 

அர்ச்சித: பகவான் 'அர்ச்சித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உலகங்களிலும் (அதில் உள்ளோரால்) வழிபடப்படும் (அர்ச்சிக்கப்படும்) ப்ரஹ்மா முதலானோராலும் (தாம்) அர்ச்சிக்கப்படுவதால் பகவான் 'அர்ச்சித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

635. கும்பாய நம:

கும்பவதஸ்மின் ஒரு குடத்தைப் போல 

ஸர்வம் அனைத்தும் 

ப்ரதிஶ்டிதமிதி பகவானுக்குள் நிலைபெற்று இருப்பதால் 

கும்ப: பகவான் 'கும்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு குடத்திற்குள் (அதிலுள்ள பதார்த்தம்) நிலைபெற்று இருப்பதைப் போல் பகவானுக்குள் அனைத்தும் நிலைபெற்று இருப்பதால் அவர் 'கும்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

636. விஶுத்தாத்மனே நம:

குணத்ரயா முக்குணங்களுக்கு 

அதீததயா அப்பாற்பட்டு 

விஶுத்தஸ்சாஸாவாத்மேதி தூய்மையான தன்மை (ஆத்மா) உடையவராதலால் 

விஶுத்தாத்மா பகவான் 'விஶுத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டு (அவற்றால் தீண்டப்படாத) தூய்மையான தன்மையை (ஆத்மா) உடையவர். எனவே அவர் 'விஶுத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

637. விஶோதனாய நம:

ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே 

பாபாநாம் (நினைக்கும் அடியவர்களின்) பாவங்களை 

க்ஷபனாத் அழிப்பவராதலால் 

விஶோதன: பகவான் 'விஶோதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை நினைத்த மாத்திரத்திலேயே (நினைக்கும் அடியவர்களின்) பாவங்களை அழிப்பவராதலால் பகவான் 'விஶோதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

638. அநிருத்தாய நம:

சதுர்வ்யூஹேஶு நான்கு வ்யூஹங்களில் 

சதுர்த்தோ வ்யூஹ: நான்காவது வ்யூஹமாக 

அநிருத்த: பகவான் 'அநிருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாஸுதேவ, ஸங்கர்ஶண, ப்ரத்யும்ன, அநிருத்த என்ற நான்கு வ்யூஹங்களில் நான்காவது வ்யூஹமாக பகவான் 'அநிருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ந நிருத்யதே அவரை தடுத்து நிறுத்தவல்லவர் இல்லை 

ஶத்ருபி: எதிரி 

கதாசிதிதி வா எப்பொழுதும் 

அநிருத்த: பகவான் 'அநிருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானை தடுத்து நிறுத்தவல்ல எதிரி என்றுமே இருந்ததில்லை. எனவே, பகவான் 'அநிருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

185வது திருநாமத்தில் அநிருத்த என்ற திருநாமத்திற்கு ஆச்சார்யாள் பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாது. எனவே, அவர் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று உரை அளித்திருந்தார்.

639. அப்ரதிரதாய நம:

ப்ரதிரத: ப்ரதிபக்ஷோSஸ்ய 'ப்ரதிரத:' அதாவது அவரை எதிர்க்கவல்லவர்கள் (எதிரிகள்) 

ந வித்யத இதி காணப்படவில்லை 

அப்ரதிரத: எனவே பகவான் 'அப்ரதிரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை எதிர்க்க வல்லவர்கள் எவருமில்லை. எனவே அவர் 'அப்ரதிரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹிரண்யகஶிபு, இராவணன், கும்பகர்ணன், ஶிஶுபாலன் முதலானோர் பகவானை எதிர்த்தார்களே என்று கேட்கத் தோன்றும். அவர்கள் எவருமே பகவானுக்கு இணையானவர்கள் இல்லை.

மேலும், அவர்கள் உண்மையில் பகவானின் த்வார பாலகர்கள் ஆவர். ஸனத்குமாரரின் சாபத்தால் பகவானை எதிர்த்தனரே அன்றி உண்மையில் அவர்கள் பகவானின் எதிரிகள் இல்லை.

640. ப்ரத்யும்னாய நம:

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த 

த்யும்னம் த்ரவிணம் 'த்யும்னம்' அதாவது செல்வத்தை 

அஸ்யேதி உடையவராதலால் 

ப்ரத்யும்ன: பகவான் 'ப்ரத்யும்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த செல்வத்தை உடையவராதலால் பகவான் 'ப்ரத்யும்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

சதுர்வ்யூஹாத்மா வா நான்கு வ்யூஹங்களில் ஒன்றான 

ப்ரத்யும்ன: 'ப்ரத்யும்னன்' ஆவார்.

வாஸுதேவ, ஸங்கர்ஶண, ப்ரத்யும்ன, அநிருத்த என்ற நான்கு வ்யூஹங்களில் மூன்றாவது வ்யூஹமாக பகவான் 'ப்ரத்யும்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

641. அமிதவிக்ரமாய நம:

அமிதோS(அ)துலிதோ 'அமித:' அதாவது அளவிடமுடியாத 

விக்ரமோSஸ்ய இதி விக்ரமம் அதாவது வல்லமை (அல்லது வீரம்)  உடையவராதலால் 

அமிதவிக்ரம: பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அளவிடமுடியாத வல்லமை (அல்லது வீரம்) உடையவராதலால் பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அஹிம்ஸித மற்றவரை துன்புறுத்தாத 

விக்ரமோ வா வீரத்தை உடையவராதலால் 

அமிதவிக்ரம: பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவரை துன்புறுத்தாத வீரத்தை உடையவராதலால் பகவான் 'அமிதவிக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வீரத்தை மற்றவரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்துவதில்லை. அஸுரர்கள் தர்மத்தை மீறியும், பக்தர்களை துன்புறுத்தியும், பகவானை எதிர்த்ததாலுமே அவரால் துன்புறுத்தப்பட்டனர். தர்மத்தை மீறாத (ப்ரஹலாதன், விபீடணன் முதலிய) அசுரர்களை அவர் துன்புறுத்துவதில்லை.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக