வெள்ளி, ஜூலை 08, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 3 (பிறவியென்னும் பெருங்காடு)

ஸம்ஸார கோர கஹனே சரதோ முராரே 
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்தித்தஸ்ய |
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (3)

ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், கோர - அச்சமூட்டும், கஹனே - இருண்ட காட்டினில், சரதோ - சென்றுகொண்டிருக்கிறேன், முராரே - முரன் என்னும் அரக்கனை அழித்தவரே, மார - (தகாத) காமமென்னும், உக்ர - தீவிரமான, பீகர - அச்சமூட்டும், ம்ருக - விலங்கு, ப்ரவர - கொடிய, ஆர்த்திதஸ்ய - துன்பத்தை விளைவிக்கும், ஆர்த்தஸ்ய - துன்புறுகிறேன், மத்ஸர - பொறாமை போன்ற குணங்கள், நிதாக - தீ, நிபீடிதஸ்ய - என்னை பற்றி இருப்பதால், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் அச்சமூட்டும் இருண்ட காட்டினுள் நான் சென்றுகொண்டிருக்கிறேன். (தகாத) காமமென்னும் கொடிய விலங்குகளாலும், பொறாமை போன்ற காட்டுதீயாலும் நான் மிகவும் துன்புறுத்தப் படுகிறேன். முரன் போன்ற பல அசுரர்களை கொன்றொழித்தவரே, திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

இந்தத் துதியிலிருந்துத் தொடங்கி அடுத்த பல துதிகளில் நாம் இருக்கும் இந்த உலகியல்வாழ்க்கையின் உண்மை நிலையை ஆதிசங்கரர் எடுத்துரைக்கிறார். இங்கு, இந்தப் பிறவியை ஒரு அச்சமூட்டும், இருண்ட காடாக உருவகப்படுத்துகிறார் (அஞ்ஞானம் அல்லது அறியாமையே இந்த இருள்). காடு என்றால் விலங்குகளும், காட்டுத்தீயும் இருக்குமல்லவா? நம்மால் அடக்கமுடியாத தகாத காமமே இந்த காட்டில் உள்ள கொடிய விலங்கு. நாம் மற்றவர் மீது கொண்டிருக்கும் பொறாமையே நம்மை எரிக்கும் காட்டுத்தீ. இந்த இருண்டக் காட்டினுள் இவ்வாறு விலங்குகளிடமிருந்தும், காட்டுத்தீயிலிருந்தும் நம்மைக் காக்க லக்ஷ்மிநரசிம்மரால் மட்டுமே முடியும். அவர் முன்பே (எவ்வாறு காடும், விலங்கும், காட்டுத்தீயும் நம்மை துன்புறுத்துகின்றதோ, அவ்வாறே முன்பு தேவர்களைத் துன்புறுத்திய) முரன் என்ற அரக்கனை அழித்தவர். எவ்வாறு, முன்பு தேவர்களைக் கர்த்தரோ, அவ்வாறே, தனது அடியவர்கள் துன்பமடைந்து, தன்னை சரண் புகுந்தால் அவர் காத்து அருளுவார். அந்த லக்ஷ்மிநரசிம்மர் இந்த பிறவிப்பெருங்கடலிலிருந்து கைக்கொடுத்து மீட்டு அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

வியாழன், ஜூலை 07, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 2 (தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவன்)

ப்ரஹமேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீட கோடி 
சங்கட்டித்தாங்க்ரி கமலாமல காந்தி காந்த |
லக்ஷ்மீலஸத் குச ஸரோருஹ ராஜஹம்ஸ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (2)


ப்ரஹ்ம - பிரமன் (நான்முகக்கடவுள்), இந்த்ர - இந்திரன் (தேவர்களின் தலைவன்), ருத்ர - பரமசிவன், மருத் - மருத் கணங்கள், அர்க்க - கதிரவன், கிரீட - மகுடங்கள், கோடி - கோடிக்கணக்கான, சங்கட்டித - குவிந்து, அங்க்ரி - திருப்பாதங்கள், கமல - தாமரை, அமல - தூய்மையான, காந்தி - ஒளியால், காந்த - மனங்கவர், லக்ஷ்மீலஸத் - திருமகளை அணைத்துக்கொண்டு, குச - தாயாரது திருமார்பாகிய, ஸரோருஹ - தாமரையில், ராஜஹம்ஸ - அன்னப்பறவை போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள்கராவலம்பம் - கைக் கொடுத்து.

பிரமன், இந்திரன்,  பரமசிவன், மருத் கணங்கள், கதிரவன் போன்ற கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்கள் கூடி சேர்ந்து ஒளிவிடுவதால், மேலும் ஒளியூட்டப்பட்ட, தாமரை மலரைப்போன்ற சிவந்த, தூய்மையான, மனங்கவர் திருப்பாதங்களை உடையவரே!!! திருமகளை அணைத்துக்கொண்டு, தாமரை மலர் போன்ற அவரது (தாயாரது) திருமார்பகத்தில் மீது விளையாடும் ஒரு சிறந்த அன்னப்பறவையைப்போல இருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

பகவானின் பெருமைகளை முதல் துதியில் ஒருவாறு கூறிய ஆதிசங்கரர், இந்தத் துதியில் அதை மீண்டும் விரித்துரைக்கிறார். முதல் இரண்டு  அடிகளால், நரசிம்மரே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்கிறார். படைக்கும் கடவுள் பிரமன், அழிக்கும் கடவுள் பரமசிவனார், தேவர்களின் அரசனான இந்திரன், (அவனுக்குத்  துணையாக தேவர்களின் படையில் இருக்கும்) மருத் கணங்கள், இந்த பூமிக்கு ஒளி வழங்கும் கதிரவன் போன்ற மிகச்சிறந்த தேவர்களும் நரசிம்மரை பணிந்து வணங்குவர். அப்பொழுது அந்தக் கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்களிலிருந்து வீசும் ஒளியானது, நரசிம்மரின்  தாமரைப் போன்ற சிவந்த திருப்பாதங்களுக்கு மேலும் ஒளியூட்டும். அத்தகைய தூய்மையான பாதங்களை நாம் பற்றினால் நற்பேறு பெறலாம்.

அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமென்றால் நம் போன்றோர் அவரை அணுக இயலுமா? இதற்கு மூன்றாம் அடியில் விளக்கம் அளிக்கிறார். அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் ஆயினும், நமக்கெல்லாம் தாயான திருமகள் கேள்வன். எவ்வாறு ஒரு அன்னமானது தாமரை மலரில் விளையாடுமோ, அவ்வாறே பகவான் தாயாரான திருமகளுடன் போகம் தூய்ப்பவர். திருமகளை முன்னிட்டு நாம் அவரைப் பணிந்தால் நம்மைக் கைவிடமாட்டார். எனவேதான், இந்த துதி முழுவதிலும் நரசிம்மரை மட்டும் குறிக்காது 'லக்ஷ்மீநரசிம்மரை' வணங்குகிறார் ஆதிசங்கரர்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 1 (லக்ஷ்மிநரசிம்மரே சரணம்!!!)

ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ரபாணே 
போகீந்த்ர போக மணிரஞ்சித புண்யமூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மிநரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)

ஸ்ரீமத் - செல்வம் நிறைந்த, பயோநிதி - பாற்கடலில், நிகேதன -இருக்கின்ற, சக்ரபாணே - (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர - அரவங்களின் அரசன், போகமணி - (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித - ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்யமூர்த்தே - நற்கருமமே வடிவானவரே, யோகீச - யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத - என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி - பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப்பெருங்கடலை, போத - கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி -அருளுங்கள், கராவலம்பம் - கைக் கொடுத்து.

செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கியுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாகமணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலைநின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப்பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்துஅருளுங்கள்!!!

இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார். 

பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும்பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்). 

நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளிவீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.

நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத்தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.

கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணையிட்டு வழிநடத்தும் தலைவராக உள்ளார்.

இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில்தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்துவிடாமல் இருக்க, 'என்றென்றும் நிலைநின்று இருப்பவர்' என்று குறிப்பிடுகிறார்.

தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின்படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.

அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக்கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக்கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து 'லக்ஷ்மிநரசிம்மரின்' அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.

இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப்பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார். இந்த துதி முழுவதும், நம் கர்மவினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச்சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

திங்கள், ஜூலை 04, 2016

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - முன்னுரை

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலைநிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி "ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்" ஆகும். இந்த துதி பிறந்த வரலாற்றை இந்தப் பதிவிலும் அதன் பொருளை பின்வரும் பதிவுகளிலும் காண்போமாக.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் 'கரம்' என்றால் 'கை' என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). 'அவலம்ப' என்றால் 'ஆதாரம்' அல்லது 'தாங்குதல்' என்று பொருள். 'கராவலம்பம்' என்றால் 'நம்மைக் கைக்கொடுத்துத் தாங்குதல்' அல்லது 'நமக்குக் கைக்கொடுத்து உதவுதல்' என்று பொருள் கொள்ளலாம். இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி, பகவான் 'ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை' இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கைக்கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதிசங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இருவேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.


1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் 'சுரேஷ்வராச்சார்யார்' என்று பெயர்பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார். ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபாயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில்பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்தவேண்டும் என்று மனுஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூணவேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்கவொண்ணாத உபயபாரதி, 'கணவனும் மனைவியும் இணைபிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்லவேண்டும்' என்று ஆதிசங்கரரிடம் கூறினாள். இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்லமுடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும்). இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆதிசங்கரர், தான் இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால்வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம்கொண்டாள். தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதிசங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படைவீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர். அதன்படி, வீரர்களும் ஆதிசங்கரரின் உடலுக்குத் தீவைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்துவிட்டது. தமக்கு 'கரங்கள்' (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த 'கராவலம்ப ஸ்தோத்திரம்' என்பது முதல் வரலாறு.
இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப்பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபயபாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதியையும் அதன் பொருளையும் பின்வரும் பதிவுகளில் காண்போம்.

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

வழிப்பறியில் வல்லவர்!!!

ஆலி நாடு! நீர் வளம், நகர் வளம், நற்குடிமக்கள், இறைப்பண்பு என்று அனைத்திலும் செழித்திருக்கும் இடம் அது. அந்த நாட்டின் மன்னர் கலியன். திருமாலின் சார்ங்கம் எனும் வில்லின் அம்சமாகத் தோன்றியவர் இவர். அழகிய முரண் சுவையாக, இந்த வில்லான கலியன் வேல் வீச்சிலும், வாள் வீச்சிலும் சிறந்து விளங்கினார். பின்னாளில் தனது சொல் வீச்சிலும் அனைவரையும் வென்றார் இவர். 

அந்த ஆலி நாட்டில், ஒரு தேவ கன்னிகை, சாபத்தினால் மானிடப் பெண்ணாகப் பிறந்தார். அவர் குமுதவல்லி எனும் பெயருடன் ஒரு வைணவப் பெரியோரால் வளர்க்கப்பட்டு வந்தார். அவரது அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட கலியன் அவரை மணம்புரிய விழைந்தார். குமுதவல்லி தன்னை மணம்புரிய பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றில் ஒன்று தினமும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் - அவ்வாறு ஒரு வருடத்திற்கு செய்யவேண்டும் என்பதே. இதற்கு ஒத்துக்கொண்ட கலியனும் அன்னதானம் செய்யத்தொடங்கினார். சிறிது சிறிதாக அவரது செல்வம் குறையத் தொடங்கியது. தனது பேரரசனிற்குக் கட்ட வேண்டிய கப்பத் தொகையையும் செலவழித்து விட்டார். அன்னதானத்திற்கும், கப்பத்தொகை கட்டுவதற்கும் வழிப்பறியில் ஈடுபடத் தொடங்கினார் கலியன். 

இவரை ஆட்கொண்டு அவரது அவதார நோக்கமாகிய பாடல்களைப் பாட வைக்கத் திருமால் திருவுள்ளம் கொண்டார். ஒரு நாள் இரவு, திருமாலும், திருமகளும் திருமணக்கோலத்தில் வந்தனர். கலியனும் அவரது ஆட்களும் இவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களை அபகரித்தனர். அனைத்தையும் பறித்த பின்பு, கலியன் திருமாலின் திருவடியில் ஒரு கழஞ்சினைக் கண்டார். அதைப் பறிக்க எண்ணி திருமாலின் பாதத்தைப் பற்றினார். எந்த வழியில் பற்றினால் என்ன, பற்றற்றத் தன்மையை கொடுக்க வல்லதல்லவா அந்தப் பற்றற்றவனின் பாதங்கள்!!! கலியனால் அந்தக் கழஞ்சைக் கழற்ற முடியவில்லை. சரி திருடிய வரையில் கொண்டு செல்லலாம் என்றால் அவரால் அந்த நகை மூட்டையையும் தூக்க முடியவில்லை. கோபத்துடன் கலியன் திருமாலைப் பார்த்து "நீர் என்ன மந்திரம் வைத்திருக்கிறீர்?" என்று கேட்டார். இந்த தருணத்தை எதிர்ப்பார்த்திருந்த திருமாலும் "உமது செவியைக் கொடும். அந்த மந்திரத்தைக் கூறுகிறேன்" என்றார். கலியனும் செவிகொடுக்கத் திருமாலே அவருக்கு திருவெட்டெழுத்து மந்திரத்தையும் அதன் பொருளையும் உபதேசித்தார். 

திருமாலால் ஆட்கொள்ளப்பட்ட கலியன் திருமங்கையாழ்வாராக மாறினார். தான் கண்டுகொண்ட நலம் தரும் சொல்லான "நமோ நாராயணாய" என்ற திருவெட்டெழுத்தின் பெருமையை தனது முதல் பத்துப் பாசுரங்களில் கூறினார். பின்னர் ஆடல்மா எனும் தனது குதிரையில் ஏறி திருப்பிரிதி தொடக்கமாக 88 திவ்யதேசங்களுக்கு மங்களாசாசனம் செய்தார். ஆழ்வார்களில் கடைசியாகத் தோன்றினாலும், மிக அதிகமான திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையாழ்வார். மேலும், ஸ்ரீரங்கம் ஆலயத்தின் மதில்களை அமைத்தவரும் இவரேயாவார். திருமங்கையின் தாள்களைப்பணிந்து அவரது பாசுரங்களை வாயாரப் பாடி, மனமார மகிழ்வோம்.

பின் குறிப்பு: தான் ஒரு க்ஷத்ரியன் ஆதலாலும், தன்னை இறைவன் ஆட்கொள்வதற்கு முன் செய்த (வழிப்பறி) முதலிய பாவ செயல்களை நினைத்து வருந்தியும், தனது பல திருமொழிகளுக்கு (இந்த பூமி, மற்றும் அந்த ஸ்ரீவைகுண்டம் ஆகிய நாடுகளை) அரசாள்வதையும், பாவங்கள் கழிவதையுமே பலனாகக் கூறியுள்ளார் (அண்டம் ஆள்வது ஆணை, பாவங்கள் பயிலாவே...).

செவ்வாய், ஜூலை 23, 2013

அரங்கநாதரின் தவம்!!!


இரு காவிரி மத்தியில், அரங்கத்தீவின் மிசை ஒரு இனிய காலைப் பொழுது. காவிரி அன்னை தன் இரு கரங்களாலும் மலர்களையும், அகில், சந்தனம் முதலிய நறுமண திரவியங்களையும் சமர்ப்பித்து அரங்கனின் அடிகளை தொழுதபடி ஓடிக்கொண்டிருக்கும் வேளை. வழக்கம் போல திருப்பாணர் உறையூரிலிருந்து காவிரிக்கரைக்கு வந்து நீராடி அரங்கனை நினைத்துப் பாக்களை தொடுக்கத் துவங்கிவிட்டார். அவருக்கு அரங்கனைக் காண வேண்டுமென்று நெடுநாள் ஆசை. ஆனால், அவரோ சாதி சதிராடிய நாளிலே, அன்று பலரும் கீழ் சாதி என்று நினைத்துக் கொண்டிருந்த பாணர் சாதியில் பிறந்தவர். கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்க எல்லையையே அணுக அவரால் முடியாது. பின்னர் அரங்கனை எங்ஙனம் காண!!

உள்ளே அரங்கனுக்கோ பல நாட்களாக, ஏன் பல வருடங்களாக ஒரே தவிப்பும் ஏக்கமும். இருக்காதா பின்னே! தன் அடியவனான திருப்பாணர் தினமும் தனக்குத் தொடுக்கும் பாமாலையை அணிந்து கொண்டு, அவருக்கு தன் திருமேனி அழகைக் காட்டி அருள வேண்டும் என்று அவா. ஆனால், சாதி பார்க்கும் கூட்டமோ திருப்பாணரைக் கோயில் எல்லையைக் கூடத் தொட விட மறுக்கிறது. அவர் என்று தனது கோயிலுக்குள் வருவார் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார். அந்த நாள் வரும்வரை, தினமும் தன் மனதாலேயே பாணர் சூடும் பாமாலைகளை அணிந்து தன்னைத் தானே அழகு பார்த்துக் கொள்கிறான் அரங்கன். இதெல்லாம் லோகஸாரங்க முனிவருக்கு எப்படித் தெரியும். அவர் தினமும் அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணுமவர். அவருக்குத் தெரிந்ததெல்லாம் அன்றைய நடைமுறை வழக்கங்கள் தான்.

இன்று ஒரு இனிய காலைப் பொழுது என்று சொன்னேன் அல்லவா. ஆம்! இன்று திருப்பாணரும், அரங்கனும் காத்துக்கொண்டிருந்த தருணம் வரப்போகின்ற நன்னாள். என்றைக்கும் இல்லாமல் இன்றைய தினம் என்னவோ தெரியவில்லை திருப்பாணருக்கு அரங்கனின் பாடல்களில் ஒரு இனம் புரியாத மோகம். அவர் அரங்கனின் அழகை மற்றவர் சொல்லித் தான் கேட்டிருக்கிறார். அதை வைத்தேதான் பாக்களையும் இயற்றுவார். இன்றோ அவர் பாக்களில் தன்னை மறந்துவிட்டார். லோகஸாரங்கர் அரங்கனின் திருமஞ்சனத்திற்காக காவிரி நீரைக் கொணர அதன் கரைக்கு வந்தார்.

லோகஸாரங்கர் தனது வழியை மறைத்துக் கொண்டு திருப்பாணர் நிற்பதைக் கண்டார். பல முறை திருப்பாணரை நகரச் சொல்லிப் பார்த்தார். திருப்பாணர் அதையெல்லாம் எங்கே கவனித்தார். திருப்பாணர் இந்த உலகில் இருந்தால் அல்லவா இதையெல்லாம் கேட்க. அவர் மனம் அரங்கனிடமும், அவன் மனம் திருப்பாணரிடமும் அல்லவா உள்ளது. லோகஸாரங்கர் முடிவில் கோபம் பொறுக்க முடியாமல் அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து திருப்பாணரின் நெற்றியில் அடித்து விட்டார். அரங்கனும், திருப்பாணரும், அவரது பாமாலைகளுமாய் இருந்த உலகம் கலைந்து விட்டது.

இப்பொழுது அரங்கனுக்குத் தனது ஏகாந்தம் கலைந்ததால் தாங்க முடியாத வருத்தமும், அதை கலைத்த லோகஸாரங்கர் மீது தாங்க முடியாத கோபமும் ஏற்பட்டது . தனது அடியவனை அடித்த லோகஸாரங்கர் கைகளால் தனக்கு எந்த ஆராதனமும் வேண்டாம் என்று தனது கோயில் கதவங்களை சாத்தி விட்டான். லோகஸாரங்கர் திருமஞ்சனத் தீர்த்தத்தைக் கொண்டு வந்து கோயிலின்னுள்ளே நுழைய முயல்கிறார். ஆனால், அரங்கன் ஸன்னதியின் திருக்கதவங்கள் திறக்கவில்லை. அவர் மனமுடைந்து அரங்கனிடம் கதறுகின்றார். நெடுநேரம் கழித்து அரங்கன் அவரது தவறை ஒரு அசரீரியாக உரைக்கிறான். லோகஸாரங்கர், திருப்பாணரின் பெருமையை உணர்ந்து கொள்கிறார். என்னதான் தவறிழைத்தாலும் அவர் தினமும் அரங்கனுக்குக் கைங்கர்யம் புரிந்தவர் அல்லவா. எனவே, நல்லெண்ணம் பிறந்து, அரங்கனிடம் அவனது அடியவனைத் தன் தோளின்மீது கொண்டு வருவதாகவும், அப்படிக் கொண்டு வந்தால் தயை கூர்ந்து கதவங்களைத் திறக்கும்படியும் அரங்கனிடம் வேண்டிக்கொண்டு காவிரிக் கரைக்கு ஓடினார்.

 அங்கே திருப்பாணரோ தான் பெரிய தவறிழைத்து விட்டதாகக் கருதி அச்சம் தோன்ற உறையூரை நோக்கிக் கிளம்பினார். அங்கே அவரது திருப்பாதத்தில் விழுந்த லோகஸாரங்க முனிவர் அவரிடம் தன்னை மன்னிக்குமாறு கூறி தனது தோளின் மீது ஏறச் சொன்னார். தனது சாதி என்ன, அரங்கனுக்குத் தினமும் கைங்கர்யம் புரியும் முனிவரின் சாதி என்ன!! திருப்பாணரோ தனது பிறப்பைக் கருதி அச்சத்துடன் மறுத்து நின்றார். லோகஸாரங்கர் பல முறை வற்புறுத்தி, இது அரங்கனின் உத்தரவு என்று கூறி திருப்பாணரை வலுக்கட்டாயமாக தனது தோளின் மீது ஏற்றிக்கொண்டு அரங்கனின் ஸன்னிதியை நோக்கி வரத் தொடங்கினார்.

இப்பொழுது அரங்கனுக்கு பெருங்கவலை பீடித்தது. திருப்பாணர் தன்னைக் கண்களால் நேரில் காணாத பொழுதே தன் அழகை பாமாலைகளால் தொடுத்தவர். அவர் மனக்கண்களில் கண்ட அதே அழகுடன் நான் அவருக்கு ஸேவை ஸாதிக்க வேண்டுமே! தன் ஒவ்வொறு அவயவத்தின் அழகையும் நோக்கத் தொடங்கினான் அரங்கன். அவற்றை திருப்பாணரின் பாமாலைகளுடன் ஒப்பிட்டு தான் அழகுடையவனா என்று தன்னைத் தானே பல முறைப் பார்த்துக் கொள்கிறான். இதைக் கண்ட பெரிய பிராட்டியான மஹாலக்ஷ்மிக்கு ஒரே ஆச்சரியம். 'நான் பாற்கடலினின்று பிறந்து அவரை ஸ்வயம்வரத்தில் வரித்தபோது கூட இப்படி தன்னை அலங்கரித்துக் கொள்ளவில்லையே!!'. அரங்கன் "தேவி! திருப்பாணரிடமிருந்து பத்தே பாசுரங்கள் பெறப்போகின்றேன். எனது அழகை இதற்கு முன்னர் இவ்வாறு யாரும் உரைத்ததுமில்லை, இனி உரைக்கப்போவதுமில்லை எனும்படியாக இப்பாசுரங்கள் அமையப் போகின்றன. அதற்குத் தக்கவாறு நான் இருக்க வேண்டாமா?" என்று ஆனந்தம் பொங்கக் கூறினான். பெரிய பிராட்டியும் உடனே அந்த பாசுரங்களைத் தானும் கேட்கத் தயாரானாள்.

கோயில் கதவங்கள் திறக்க, முனிவாஹனரான திருப்பாணர், திருப்பாணாழ்வாராக, அரங்கனின் அழகிலே திளைத்துப் பாசுரங்களைப் பொழியத் தொடங்கினார். தனது பிறப்பைக் கருதாது தன்னையும் அடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய திறத்தைக் கண்டு "அமலன் ஆதிபிரான்" என்று தொடங்கி "பாதாதி கேசமாக" பாமாலை தொடுத்தார். அவனது திருக்கமலப் பாதங்களையும், அரைச்சிவந்த ஆடையையும், எழில் உந்தியையும், உலகையே தன்னுள் அடக்கிய திருஉதரத்தையும் பாடினார் ஆழ்வார். அவனது திருமார்பைப் பாடுங்கால் 'உன்னழகைக்காண நான் என்ன தவம் செய்தனன் கொல்' என்று பாடினார். அப்பொழுது, அரங்கன் திருமார்பை அலங்கரிக்கும் பெரிய பிராட்டியார் "ஆழ்வாரே! அரங்கனைக் காண நீர் தவம் செய்தீரோ இல்லையோ, உம்மைக்காண அவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் சற்று முன் தன்னை அலங்கரித்துக்கொண்ட அவசரத்தை நீர் காணாமல் விட்டீரே"  என்று கூறினார். ஆழ்வாருக்கு அரங்கனின் அழகைப்பாடவா? அவனது எளிமையையும் நீர்மையையும் பாடவா என்று புரியவில்லை. கண்களில் கண்ணீர்த் தாரைப்பெருக அவன் மற்ற அவயவங்களின் அழகைப் பாடியவர் கடைசி பாசுரத்தில் வைகுண்டத்தில் பரவாசுதேவனாக இருப்பதைக் காட்டிலும் தன்னைப்போல் ஒரு எளியவனின் பொருட்டும் நீர்மை காட்டும் அரங்கனின் அர்ச்சாவதாரமே அனைத்திலும் சிறந்தது என்று பொருள் படும்படி "என் அமுதினைக் கண்ட கண்கள் மாற்றொன்றினைக் காணாவே" என்று முடிக்கிறார். ஆக, அமலனாதிபிரான் என்னும் திருப்பாணாழ்வாரின் இப்பத்துப் பாசுரங்களைப் பாடுவோர் ஆழ்வார் கண்டது போலவே அரங்கனின் அழகைக் காண்பார்கள் என்பதே அதன் பலனாக (சொல்லாமல்) சொல்கிறார்.

அமலானிதிபிரானில் ஐந்தாம் பாசுரமாகிய "பாரமாய பழவினைப் பற்றறுத்து.." என தொடங்கும் பாசுரத்தில் "கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்" என்று ஆழ்வார் பாடுகிறார். இதற்கு சாமான்ய அர்த்தம் சொல்லுங்கால் "ஆழ்வார் அரங்கனின் அழகைக் காண தான் என்ன தவம் செய்தேனோ, தெரியவில்லையே" என்று பொருள் கூறுவர். விஷேஷ அர்த்தமாக "தேவர்களும் முனிவர்களும் அவனைக்காண ஊழி ஊழி தோறும் தவம் இருக்க, தனக்கு இப்படி ஒரு பேறு கிடைக்க அரியதொரு தவத்தை தான் செய்திருக்கவேண்டுமென்றும். அதுவும் தன்னடியாக நடக்காமல் அவனருளாலேயே நடந்ததென்றும்" கூறுவர். தூப்புற்பிள்ளை என்ற ஆசார்யரும் இதற்கு வியாக்கியானம் அருளும் பொழுது "இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் உபயகாவேரிமத்தியத்திலே நின்று கொண்டு என்ன கடுந்தவம் புரிந்தானோ?" என்று ஆழ்வார் கூறுவதாக உரைக்கிறார்.

நாம் அவனை அடைய முயற்சிப்பதைவிட, அவன் நம்மை அவனிடம் அடைவித்துக்கொள்ள எடுக்கும் முயற்சியே பல மடங்கு பெரிது என்பது திண்ணம். அரங்கனின் அருட்பார்வை நம்மீது விழட்டும். நமக்கும் நல்வழி பிறக்கும்.

திங்கள், ஜூலை 22, 2013

ஆண்டாள் அருளிய திருப்பாவை!!!

 ஆண்டாள், திருப்பாவை தந்த சுடர்க்கொடி. பூமி பிராட்டி, வராஹ அவதாரத்தில் பகவான் தன்னிடம் முக்திக்கு உரைத்த எளிய வழிகளை (வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, தூமலர்த் தூவித் தொழுது) அழகிய தமிழில் நாமும் அறியும் வண்ணம் நமக்கு கொடுக்க நினைத்தாள். எனவே, விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாக, ஆண்டாளாகத், தோன்றி நமக்கு திருப்பாவையை உரைத்தாள். திருப்பாவை முப்பது பாசுரங்களும் ஒரு ஜீவாத்மா தன்னிலை உணர்ந்து, கண்ணனைப் பணிந்து, அவன் கழலினை அடையும் பயணத்தை விளக்கும்.

முதல் சில பாசுரங்களில் ஆண்டாள் கண்ணனின் (நாராயணனின்) பெருமைகளை கூறி ஜீவாத்மாவின் மனதில் பக்தியை விதைக்கிறாள் (நாராயணனே நமக்கே பறை தருவான்). ஆரம்ப நிலையில், ஒருவர் தனது உலகியல் பலன்களுக்காக கடவுளைத் துதிக்கிறார். அதையொட்டி, ஆண்டாளும் முதலில், நாராயணனைத் துதித்தால், உலகியல் பலன்களான மழை பெய்தல் (தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து), பயிர் விளைதல் (நெல்லோடு கயல் உகள), பசுக்கள் (குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்) போன்ற செல்வ செழிப்புக்கள் நமக்குக் கிட்டும் என்று கூறுகிறாள்.

பகவானை தான் மட்டும் அனுபவியாது, அனைவரும் அனுபவித்துப் பேறு பெற வேண்டும் என்பது ஒவ்வொரு ஆசார்யரின் தீராத அவா. அதையொட்டியே, இவ்வாறு (உலகியல்) நற்பலன்களைக்  கூறியும் பக்தி தோன்றாத ஆத்மாக்களை பின்னர் துயில் எழுப்புகிறாள் (எல்லே இலங்கிளியே! இன்னும் உறங்குதியோ!, எழுந்தேலோர் எம்பாவாய்...). இவ்வாறு கூறியபின் பக்தி தோன்றிவிட்டால் மட்டும் போதுமா? அத்தகைய, ஜீவர்களை பகவானிடம் அழைத்துச் செல்வதும் ஒரு ஆசார்யனின் கடமை அல்லவா? எனவே, பின்னர் சில பாசுரங்களில், அந்த பக்தி தோன்றிய ஆயர்குல பெண்களை (அதாவது ஜீவாத்மாக்களை) அழைத்துக் கொண்டு கண்ணனின் மாளிகைக்குச் செல்கிறாள்.

அங்கே, பகவான் உடனே கிடைத்துவிடுவானா என்ன? பல (தீய) கருமங்களை செய்துவிட்டு வரும் ஜீவர்களுக்கு அவன் உடனே தரிசனம் தந்து விடுவதில்லை. அவனையும், துயில் எழுப்புகிறாள். வெறுமே எழுந்திரு என்று சொல்லாமல், அவனது பெருமைகளை சொல்லி எழுப்புகிறாள் (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே...). அதாவது, என்னை முன்னிட்டு உன்னை சரணடைந்திருக்கும் இந்த ஜீவர்களின் குறைகளை நோக்காமல், நீ கருணை முகமாக கடாக்ஷிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள்.ஆண்டாள் சரணடைந்திருப்பது கண்ணனையாகையால், நப்பின்னை பிராட்டியை துணை கொண்டு அவனது அருள் வேண்டுகிறாள் (நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்...).

 இவ்வாறு கண்ணனின் கடைக்கண் அருள் கிடைத்ததும், அனைவருக்காகவும் மீண்டும் சில உலகியல் பலன்களை வேண்டுகிறாள் (தோடே, செவிப்பூவே.... பால்சோறு மூட நெய் பெய்து...). கடைசியாக தானும், தனது ஆயர் பெண்களும் (அதாவது, ஆண்டாளாகிய இந்த ஆசார்யரை சரணடைந்த ஜீவர்களும்) உண்மையில் கண்ணனை சரணடைந்த காரணத்தை சிற்றஞ்சிறுகாலே பாசுரத்தில் கூறுகிறாள். உன்னை நாங்கள் வந்தடைந்தது இந்த அற்ப உலக பயன்களுகாக அல்ல (இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா...). உன்னையே எங்கள் ஸ்வாமியாகப் பெற்று, உனக்கே அடிமை செய்து, உனது அடியவனாக வேண்டியே நாங்கள் இங்கு வந்தோம். இன்று மட்டுமல்ல, எற்றைக்கும், எழேழ் பிறவிக்கும் உனது அடியவனாகவே நாங்கள் இருக்கும்படி அருள் செய்வாய் என்று வேண்டிக்கொள்கிறாள்.

திருப்பாவை என்ற இந்த அமிர்த ஸாகரம் நம்மை நல்வழிபடுத்தட்டும்!!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!!!