ஞாயிறு, ஜூலை 03, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 209

62. த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஶஜம் பிஶக் |

ஸன்யாஸக்ருச்சம: ஶாந்தோ நிஶ்டா ஶாந்தி: பராயணம் ||

இந்த அறுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

574. த்ரிஸாமா, 575. ஸாமக:, 576. ஸாம, 577. நிர்வாணம், 578.  பேஶஜம், 579. பிஶக் |

580. ஸன்யாஸக்ருத், 581. ஶம:, 582. ஶாந்த:, 583. நிஶ்டா, 584. ஶாந்தி:, 585. பராயணம் ||    

574. ஓம் த்ரிஸாம்னே நம:

தேவவ்ரத தேவவ்ரதம் என்னும் 

ஸமாக்யாதைஸ் பெயருடைய 

த்ரிபி: மூன்று 

ஸாமபி ஸாமங்களால் 

ஸாமகை: ஸாமகானம் செய்பவர்களால் 

ஸ்துத இதி போற்றித் துதிக்கப்படுவதால் 

த்ரிஸாமா பகவான் 'த்ரிஸாமா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.   

தேவவ்ரதம் என்னும் பெயருடைய மூன்று ஸாமங்களால் ஸாமகானம் செய்பவர்களால் போற்றித் துதிக்கப்படுவதால் பகவான் 'த்ரிஸாமா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

575. ஓம் ஸாமகாய நம:

ஸாம ஸாமவேதத்தை 

காயதீதி பாடுவதால் 

ஸாமக: பகவான் 'ஸாமக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாமவேதத்தை பாடுவதால் பகவான் 'ஸாமக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

576. ஓம் ஸாம்னே நம:

'வேதானாம் ஸாமவேதோஸ்மி' (ஸ்ரீமத்பகவத் கீதை 10.22)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: வேதங்களில் யான் ஸாமவேதம்.

இதி பகவத்வசனாத் பகவானின் இந்த பகவத்கீதையின் கூற்றின்படி 

ஸாமவேத: ஸாம ஸாமவேத வடிவாய் இருப்பதால் பகவான் 'ஸாம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் 'வேதங்களில் யான் ஸாமவேதம்'  என்று கூறியுள்ளார். எனவே ஸாமவேத வடிவினாரான பகவான் 'ஸாம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

577. ஓம் நிர்வாணாய நம:

ஸர்வது:க அனைத்துவித துன்பங்களும் 

உபஶம லக்ஷணம் அற்று இருப்பதன் அடையாளமாக 

பரமானந்தரூபம் உயரிய ஆனந்தமே வடிவினராய் இருப்பதால் 

நிர்வாணம் பகவான் 'நிர்வாணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வித துன்பங்களும் (துக்கங்களும்) அற்று இருப்பதன் அடையாளமாக உயரிய ஆனந்தமே வடிவானவராதலால் பகவான் 'நிர்வாணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

578. ஓம் பேஶஜாய நம:

ஸம்ஸார இந்தப் பிறவியென்னும் 

ரோகஸ்ய பிணிக்கு (நோய்க்கு) 

ஒளஶதம் அருமருந்தாய் இருப்பதால் 

பேஶஜம் பகவான் 'பேஶஜம்' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவியென்னும் பிணிக்கு (நோய்க்கு) அருமருந்தாய் இருப்பதால் பகவான் 'பேஶஜம்' எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

579. ஓம் பிஶஜே நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பிணியை 

நிர்மோக்ஷகாரிணீம் போக்கவல்ல அருமருந்தாகிற 

பராம் வித்யாம் மேலான வித்தையை (அறிவை) 

உபதிதேஶ அனைவருக்கும் உபதேசித்தார் 

கீதாஸ்விதி 'ஸ்ரீமத் பகவத்கீதை' என்னும் 

பிஶக் எனவே பகவான் 'பிஶக்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியை போக்கவல்ல அருமந்தாகிற 'ஸ்ரீமத் பகவத்கீதை' என்னும் உயரிய வித்தையை (அறிவை) அனைவருக்கும் போத்தித்தபடியால் (உபதேசித்த படியால்) பகவான் 'பிஶக்' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பிஶக்தம் த்வா பிஶஜா ஶ்ருணோமி'

அனைவரைக் காட்டிலும் சிறந்த மருத்துவரைப் பற்றி கேட்பாயாக

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

580. ஓம் ஸந்யாஸக்ருதே நம:

மோக்ஷார்த்தம் முக்தியை அடையும் பொருட்டு (அதை விழைவோருக்கு) 

சதுர்த்தம் ஆஶ்ரமம் நான்காவது ஆஸ்ரமமான ஸந்யாஸ ஆஸ்ரமத்தை (அதாவது வாழும் வழிமுறையை) 

க்ருதவானிதி உருவாக்கியவராதலால் 

ஸந்யாஸக்ருத் பகவான் 'ஸந்யாஸக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு, அதை அடையும் வழிமுறையாக நான்காவது ஆஸ்ரமமான 'ஸந்யாஸ ஆஸ்ரமத்தை' உருவாக்கியவராதலால் பகவான் 'ஸந்யாஸக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

581. ஓம் ஶமாய நம:

ஸந்யாஸினாம் துறவறம் பூண்டவர்களுக்கு (ஸன்யாஸிகளுக்கு) 

ப்ராதான்யேன முதன்மையான (முக்கியமான) 

ஞானஸாதனம் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக 

ஶமம் (மன) அமைதியை 

ஆசஶ்ட உபதேசித்ததால் 

இதி ஶம: பகவான் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைவோருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமத்தை (துறவறத்தை) ஏற்படுத்தினார் (ஸந்யாஸக்ருத்). அவ்வாறு துறவறம் பூண்டோரின் ஞானத்தை வளர்க்கும் சாதனமாக மன அமைதியை (ஶம) உபதேசித்ததால் அவர் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“யதீநாம் ப்ரஶமோ தர்மோ நியமோ வனவாஸினாம் |

தானமேவ க்ருஹஸ்தானாம் ஶுஶ்ரூபா ப்ரஹ்மசாரிணாம் ||”

துறவிகளுக்கு மன அமைதியும், வனவாசிகளுக்கு கட்டுப்பாடும் (நியமம்), இல்லறத்தோருக்கு தானமும் மற்றும் ப்ரஹ்மச்சாரிகளுக்கு (குரு) சேவையும் தர்மமாகும்.

இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் (வேதங்களில்) கூறப்பட்டுள்ளது.

'தத்கரோதி ததாசஶ்டே' (சுராதிகணவார்த்திகம்)

இதி ணிசி பசாத்யசி க்ருதே ரூபம் ஶம இதி |

இந்த இலக்கண விதியின் படி "ஶம"என்ற சொல் உருவாகிறது.

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும் 

ஶமயிதேதி வா அழிப்பதால் 

ஶம: பகவான் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களையும் (ப்ரளய காலத்திலும், அந்தந்த ஜீவனின் கால முடிவிலும்) அழிப்பதாலும் பகவான் 'ஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

582. ஓம் ஶாந்தாய நம:

விஶயஸுகேஶ்வ(அ)ஸங்கதயா விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) சேராது இருப்பதால் 

ஶாந்த: பகவான் 'ஶாந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஷய சுகங்களோடு (புலனின்பங்களில்) நாட்டமில்லாமல் அவற்றோடு சேராது  இருப்பதால் பகவான் 'ஶாந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

583. ஓம் நிஶ்டாய நம:

ப்ரளயே ப்ரளய காலத்தில் 

நிதராம் முழுமையாக 

தத்ரைவ அவரிடமே 

திஶ்டந்தி உறைவதால் 

பூதாநிதி உயிரினங்கள் (ஜீவராசிகள்) 

நிஶ்டா பகவான் 'நிஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) முழுமையாக பகவானிடம் (லாயமடைந்து) உறைவதால் பகவான் 'நிஶ்டா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

584. ஓம் ஶாந்தயே நம:

ஸமஸ்தாவித்யா (ஸமஸ்த அவித்யா) அனைத்து வகை அறியாமைகளும் 

நிவ்ருத்தி: விலகி இருப்பதே 

ஶாந்தி: 'ஶாந்தி:' என்று அழைக்கப்படுகிறது. 

ஸா ப்ரஹ்மைவ (அந்த அறியாமைகளற்ற நிலையானது) பரப்ரஹ்மத்தின் இயற்கையான தன்மையாகும். எனவே, பரப்ரஹ்மமான பகவான் 'ஶாந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகை அறியாமைகளும் அற்ற தன்மையே 'ஶாந்தி:' என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு, அறியாமை அற்ற நிலையானது பரப்ரஹ்மமான பகவானின் இயற்கையான தன்மையாகும். எனவே அவர் 'ஶாந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

585. ஓம் பராயணாய நம:

பரமுத்க்ருஶ்டமயனம் ஸ்தானம் (பரம் உத்க்ருஶ்டம் அயனம்) அயனம் என்றால் அடையப்படும் இடம் (ஸ்தானம்) என்று பொருள். மிக உயரிய அடையப்படக்கூடிய இடமாக 

புனராவ்ருத்தி மீண்டு வருதல் 

ஶங்காரஹிதம் இதி என்ற ஐயமின்றி இருப்பதால் 

பராயணம் பகவான் 'பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மீண்டு வருதல் என்ற ஐயத்திற்கு இடமின்றி, மிக உயரிய ஸ்தானமாக (அடையக்கூடிய இடமாக) இருப்பதால் பகவான் 'பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புல்லிங்கபக்ஷே பஹுவ்ரீஹி: இந்தத் திருநாமத்தை ஆண்பாலாகக் கருத்துமிடத்தில் எவர் உயரிய ஸ்தானமாக இருப்பவரோ என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக