புதன், ஆகஸ்ட் 24, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 12 (காலனால் நேரும் துன்பங்கள்)

பத்வாகளே யமபடா பஹு தர்ஜயந்த 
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர்யுதம் மாம் |
ஏகாகினம்* பரவசம் சகிதம் தயாளோ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (12)
* - ஏகாகினம் என்பதற்கு பதிலாக ஆகாமினம் என்று சில பதிப்புக்களில் உள்ளது  


பத்வா - மிகுந்த (மிக அதிக அளவில்), களே - கழுத்தை, யமபடா - யமனின் தூதர்கள், பஹு தர்ஜயந்த - பயமுறுத்தியும், திட்டித் துன்புறுத்தியும், கர்ஷந்தி யத்ர - இங்கும், அங்கும் இழுத்து, அலைக்கழித்து, பவபாச - இந்த ஸம்ஸாரத்தில் நான் கொண்டுள்ள பற்றுதல் எனும் கயிற்றால், சதைர்யுதம் - நூற்றுக்கணக்கான, மாம் - என்னை, ஏகாகினம் - (துணையின்றி) தனியே, பரவசம் - மற்றவர்களின் (யம தூதர்களின்) கட்டுப்பாட்டில், சகிதம் - நடுங்குகிறேன், தயாளோ - கருணையே வடிவான, லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.  

காலனின் தூதர்கள், மரணமடையும் தருவாயில், என்னை பற்றுதல் என்னும் கயிற்றினால் கட்டி, திட்டித் துன்புறத்தி, இங்கும் அங்கும் அலைக்கழித்து இழுத்துச் செல்கின்றனர். யம தூதர்களில் கட்டுப்பாட்டில், எவ்வித உதவியும் இன்றி தனித்து விடப்பட்டுள்ள நான், மிகவும் அச்சத்தில் உள்ளேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்த ஸ்லோகத்தை இரு விதமாய் பொருள் கொள்ளலாம். ஒன்று - இந்த ஸம்ஸாரத்தை விட்டு நம் உயிர் பிரியும் தருணத்தில் நாம் படும் துன்பங்களை விவரிப்பது. மற்றொன்று - இந்தப் பிறவியே நமக்கு மரணகாலத்தில் யம தூதர்களால் வரக்கூடியத் துன்பத்தைப் போன்றது.

முதல் பொருள்: 
இந்தப் பிறவியில் நாம்  பற்பல இன்பங்களை அனுபவிக்கிறோம் (அனுபவிப்பதாக எண்ணிக்கொள்கிறோம்). ஆனால் இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்து யமனின் உலகத்தை அடையும் வரை நாம் பற்பல துன்பங்களை அனுபவிக்கிறோம் (யமனின் உலகை அடைந்த பின்னும் துன்பங்கள் தொடரும்). ஆத்ம ஞானம் அடைதலே முக்திக்கு வழி. அவ்வாறு, ஆத்மஞானம் அடையாது அகக்கண்களைத் தொலைத்த நம்மை, யம தூதர்கள், ஸம்ஸாரத்தில் நாம் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பற்றுதல்களைப் போன்ற நூற்றுக்கணக்கான பாசக் கயிற்றுக்களை நம் கழுத்தினில் கட்டி, நம்மை திட்டியும், அங்கும், இங்கும் இழுத்துக் கொண்டு துன்புறுத்தியும் அழைத்துச் செல்வர். உதவிக்கு யாருமின்றி தனியே அந்த யம தூதர்களின் கட்டுபாட்டினில் துன்புறுவோம். முக்தியை அடைந்த ஆத்மாக்கள் இந்த துன்பங்களை அடைவதில்லை. எனவே, கருணையே வடிவான திருமகள் நாதன் லக்ஷ்மி நரசிம்மர் தமக்கு (நமக்கு) இந்த துன்பங்கள் நேராது முக்தியை தந்தருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

மற்றொரு பொருள்: 
இந்தப் பிறவியே நமக்கு யம தூதர்கள் தருமாப் போல் பற்பல இன்னல்களைத் தருகிறது. இந்த ஸம்ஸாரத்தில் நாம் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசைகளும், பற்றுக்களுமே யம தூதர்களும், அவர்களின் பாசக்கயிறுமாகும். இவற்றால் நமது கழுத்து இறுக்கப்பட்டு, இந்த ஆசாபாசங்களினால் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்படுகிறோம். பிறரின் தேவைகளை தீர்க்காத போது வசைமொழிகளையும் கேட்க நேரிடுகிறது. நாம், நம்மை சுற்றி பலர் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் நாம் தனித்தே இருக்கிறோம். நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கின்றோம். ஆனால், இந்த ஆசாபாசங்களின் கட்டுப்பாட்டிலேதான் உழல்கிறோம். இதிலிருந்து விடுபட முக்தி ஒன்றே வழி. அதை அதுவும், பகவானின் கருணையினால் தான் நமக்குக் கிடைக்கும். எனவே, கருணையே வடிவான திருமகள் நாதன் லக்ஷ்மி நரசிம்மர் தமக்கு (நமக்கு) இந்த ஸம்ஸாரத் தளையிலிருந்து முக்தியை தந்தருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக