புதன், ஆகஸ்ட் 31, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - ஃபல ஸ்ருதி (இந்த ஸ்தோத்திரத்தின் பலன்கள்)

லக்ஷ்மிநரசிம்ம சரணாப்ஜ மதுவ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுககரம் புவி சங்கரேன |
ஏதத் படந்தி மனுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத் பத சரோஜம் அகண்ட ரூபம் ||


லக்ஷ்மிநரசிம்ம - லக்ஷ்மிநரசிம்மரின், சரணாப்ஜ (சரண+அப்ஜ) - திருவடித் தாமரையிலிருந்து, மதுவ்ரதேன - தேனை பருக விரும்பும், ஸ்தோத்ரம் க்ருதம் - இந்தத் துதியை இயற்றினேன், ஸுககரம் புவி - உலகனைத்திற்கும் நன்மையை அளிக்கக்கூடிய,சங்கரேன - ஆதிசங்கரரான நான், ஏதத் - இதை, படந்தி - ,படிக்கும், மனுஜா - மனிதர், ஹரிபக்தி யுக்தா: - பகவான் ஹரியிடம் பக்தி கொண்டு, தே யாந்தி - அவர்கள் அடைவார்கள், தத் பத சரோஜம் - பகவானின் திருவடித் தாமரைகளை, அகண்ட - மிகப்பெரிய (இந்த பிரபஞ்சம் அனைத்தையும் வ்யாபிக்கும்), ரூபம் - உருவம்.


பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் திருவடித்தாமரையிலிருந்து வழியும் தேனை நுகரும் வண்டான ஆதிசங்கரரான நான், உலக நன்மைக்காக இயற்றிய இந்தத் துதியை தினமும் ஓதுபவர்களுக்கு, பகவானிடம் பக்தி உண்டாகி (அல்லது பெருகி), இந்த ஸம்ஸாரத்திலிருந்து பகவானால் கைக்கொடுத்துத் தூக்கப்பட்டு, தன்னுருவால் இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் நிறைந்து வ்யாபிக்கும் பகவானின் திருவடித் தாமரைகளை சென்றடைவர்.

எந்த ஒரு துதியின் முடிவிலும் அதனை ஓதுவதால் எற்படும் நற்பலன்களை கூறுவது மரபு. அவ்வாறே, இந்த லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்திரத்தை படிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை இந்த துதியில் குறிப்பிடுகிறார் ஆதிசங்கரர்.  அதற்கு முன் தன்னைப் பற்றியும், இந்தத் துதியை தான் எதற்காக இயற்றினார் என்பதையும் முதலிரண்டு அடிகளில் விளக்குகிறார்.

ஆதிசங்கரர்: ஆசார்யர் தம்மை ஞானியாகவோ, பக்த சிரோண்மணியாகவோ கூறிக்கொள்ளவில்லை. பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து வழியும் தேனை நுகர விரும்பும் ஒரு வண்டாகவே தன்னை விவரித்துக் கொள்கிறார்.

இந்தத் துதியை இயற்றியது எதற்காக? உலகனைத்தின் (உலக மக்கள் அனைவரின்) நன்மைக்காகவே இந்தத் துதி இயற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ஆசார்யர். இந்த துதி முழுவதிலும் ஸம்ஸாரம் என்னும் இந்தப் பிறவியில் நாம் எவ்வாறு வீழ்ந்தோம், அதில் உள்ள துன்பங்கள் எத்தகையவை என்பதை பல வழிகளாலும் விளக்கி, பகவானே நம்மை இந்த ஸம்ஸாரத்திலிருந்து கைக்கொடுத்து தூக்கி அருள வேண்டும் என்றே மீண்டும், மீண்டும் வேண்டிக்கொண்டிருந்தார் ஆதிசங்கரர். பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் அருளால், நாம் இந்த பிறவித் தளையிலிருந்து விடுபடுவதையே இங்கு உலக மக்களின் நன்மை என்று ஆசார்யர். 

இந்தத் துதியை ஓதுவதால் ஏற்படும் நற்பயன்கள்:
இந்த பிறவித் தளையிலிருந்து எவ்வாறு விடுபடுவோம், எங்கு சென்றடைவோம் என்பதை பின்னிரு வரிகளில் விவரிக்கிறார். எவரொருவர் இந்தத் துதியை நம்பிக்கையோடு ஓதுகின்றனரோ, அவர்களுக்கு முதலில் பகவானிடம் பக்தி உண்டாகிறது (இதுவே, இந்தத் துதியை ஓதுவதால் கிடைக்கும் முதல் பயனாகும்). அந்த பக்தி கனிந்து, அதனால் இந்தப் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் தன்னுருவால் வ்யாபித்திருக்கும் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் திருவடித் தாமரைகளை சென்றடைவார்கள் என்று வாழ்த்துகிறார் ஆதிசங்கரர் (இதுவே, இந்தத் துதியை ஓதுவதனால் ஏற்படும் முடிவான பயனாகும்).

இந்தத் துதியை வெறுமனே ஓதாது ஜகத்குருவான ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதரை வணங்கி ஓத வேண்டும். குருவருள் இன்றித் திருவருள் கிடைக்காது. எனவே, நாமும் ஆச்சார்யரின் தாள் பற்றி, அவர் இயற்றிய இந்த துதியை தினமும் ஓதிப் பயன் பெறுவோமாக!!!

ஸ்ரீகுருப்யோ நம: |
ஸ்ரீகுரு சரணாரவிந்தாப்யாம் நம: |
அஸ்மத் குரவே ஸ்ரீசங்கராசார்ய பர்யாய நம: |

குரு பரம்பரை ஸ்லோகம்:
ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்|

ஆதிசங்கரரைப் போற்றும் ஸ்லோகம்:
ஸ்ருதி ஸ்ம்ரிதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம்! லோக சங்கரம்!!
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக