ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 13 (பகவானின் திருநாமங்கள் - நாமாவளி)

லக்ஷ்மீபதே! கமலநாப! சுரேஷ! விஷ்ணோ!
வைகுண்ட்ட! க்ருஷ்ண! மதுசூதன! புஷ்கராக்ஷ! |
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தன! வாஸுதேவ!
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம்* ||

* - "தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்" 
(ஒரு சில பதிப்புக்களில் கடைசி வரி இவ்வாறு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது)


திருமகள் கேள்வனே! உந்தித் தாமரை உடையோனே! தேவர்களின் தலைவரே! எங்கும் நிறை பரம்பொருளே! வைகுண்டத்தில் உறைவோனே! கார்மேகக் கண்ணனே! மது என்ற அசுரனை அழித்து தேவர்களைக் காத்தவரே! செந்தாமரைக் கண்ணனே! ப்ரஹ்மத்தை உணர்ந்தோரின் உற்ற தோழரே! அழகிய திருமுடி உடையவரே! தீயோரை அழிப்பவரே (அடியவருக்கு நேரும் தீங்கினை போக்குபவரே)! எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே! திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!

லக்ஷ்மீபதே - திருமாமகள் கேள்வரே, கமலநாப - தாமரையைப் போன்ற திருவயிற்றை உடையவரே (அல்லது, தனது உந்தியிலிருந்து உதித்தத் தாமரையில் நான்முகனைப் படைத்தவரே), சுரேஷ - தேவர்களின் (அடியவர்களின்) தலைவரே, விஷ்ணோ - எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவரே, வைகுண்ட்ட - வைகுண்டத்தைத் தமது இருப்பிடமாக உடையவரே, க்ருஷ்ண - கார்மேகக் கண்ணனே, மதுசூதன - மது என்ற அசுரனை வதைத்தவரே, புஷ்கராக்ஷ - தாமரை இதழ் போன்ற அழகிய திருக்கண்கள் உடையவரே, ப்ரஹ்மண்ய - ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்களுக்கு உற்றத் தோழரே, கேசவ - அழகிய திருமுடியை உடையவரே (அல்லது, கேசி என்னும் அசுரனை அழித்தவரே), ஜனார்தன - தீய மனிதர்களை அழிப்பவரே (அல்லது, மனிதர்களிடம் உள்ள தீயதை அழிப்பவரே), வாஸுதேவ - அனைத்து உயிர்களுக்குள்ளும் நிறைந்து வசிப்பவர், லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து. 

கடைசி வரியின் மாற்றுப் பதிப்பின் விளக்கம்:
தேவேச - தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமே, தேஹி - அருளுங்கள், க்ருபணஸ்ய - தங்களின் கருணையின் வடிவாக, கராவலம்பம் - கைக்கொடுத்து.

ஸம்ஸாரமென்னும் இப்பிறவியில் நமக்கு நேரும் துன்பங்கள் அனைத்தையும் மற்றும் இந்தப் பிறவியே ஒரு துன்பமென்பதையும் விவரித்த ஆதிசங்கர பகவத்பாதர் இந்தத் துதியில் லக்ஷ்மி நரசிம்மரை அவரது பல திருப்பெயர்களை இட்டழைத்து, நான் கூறவேண்டிய அனைத்தையும் கூறிவிட்டேன். இனி, தமக்கு (நமக்கு) வேறு சரண் இல்லை என்று உணர்த்துகிறார். பல்லாலும், கைகளாலும் தனது புடைவையைப் பிடித்துக்கொண்டிருந்த திரௌபதி முடிவில் அனைத்தையும் விட்டு, கைகளை மேலே உயர்த்தி "த்வாரக நிலையாச்யுதா கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷ மாம் சரணாகதம்" என்று கூறியதுபோலவே இந்த ஸ்லோகமும் உள்ளது என்றால் அது மிகையாகாது (அவ்வாறு, அவள் கை தூக்கிய உடனே அவளது புடவை முடிவின்றி சுரந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்).

பகவான் திருமகள் கேள்வன் (லக்ஷ்மிபதி). எவ்வாறு ஒரு தாயின் பரிவான வார்த்தைகளால் கட்டுண்ட தந்தை தமது குழந்தையின் தவறுகளைப் பொறுத்துக் கொள்கிறாரோ அவ்வாறே பகவானும், திருமகள் நமக்காகப் பரிந்துரைக்க, அதனை ஏற்று நம்மைக் காக்கிறார். அவர் தனது உந்தித் தாமரையில் நான்முகனையும், அவர் மூலம் இவ்வுலகனைத்தையும் படைத்தவர் (கமலநாபர்). படைத்த அவருக்கு நம்மைக் காத்து, இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து எளிதில் விடுவிக்க இயலும். அவர் நல்லோர்களின் தலைவர் (சுர+ஈச = சுரேஷ), எங்கும் உறைபவர் (விஷ்ணு). 

வைகுண்ட - வைகுண்ட நாதர். இந்தத் திருநாமத்திற்கு பல பொருட்கள் உண்டு. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 405வது திருநாமம் 'வைகுண்ட'. இதற்கு உரை எழுதியுள்ள ஆதிசங்கரர் "விவிதா குண்டா கதே: ப்ரதிஹதி:', அதாவது பக்தர்களில் (அவர்களது ஆன்மீகப்) பாதையில் வரும் தடைகளை நீக்குபவர் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பொருளும் இந்த துதிக்கு நன்றாகப் பொருந்துகிறது. இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து நாம் முக்தியை நோக்கி முன்னேறும் வழியில் வரும் தடைகளையெல்லாம் பகவான் தகர்த்து விடுகிறார்.

அவரே, கிருஷ்ணனாக அவதரித்தார். கிருஷ்ணாவதாரத்தில் பகவான், நண்பன், பகைவன் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நற்கதியை அளித்துள்ளார். காமத்தால் கோபியரும், பயத்தால் கம்சனும், வெறுப்பால் (த்வேஷத்தால்) சிசுபாலன் முதலியவர்களும், உறவுமுறையால் யாதவர்களும், நட்பால் பாண்டவர்களும், பக்தியால் நாரதர் முதலியோரும் பகவானைப் பற்றியே நினைத்து நற்கதி அடைகின்றனர் (ஸ்ரீமத் பாகவதம் 7.1.31). 

மது என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காத்து, மதுசூதனன் என்ற பெயர் பெற்றவர். தனது பக்தர்களின் துன்பங்களையும் போக்கி நம்மை காப்பார். அவர் தாமரைக் கண்களோடும் (புஷ்கராக்ஷர்), அழகிய திருமுடியோடும் (கேசவன்), ப்ரஹ்மத்தைத் தேடும் முமுக்ஷுக்களுக்கு உற்ற தோழராய் இருப்பவர் (ப்ரஹ்மண்யர்), அடியவர்களின் துன்பங்களை அழிப்பவர் (ஜனார்தனர்), அனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்து, நிறைந்திருப்பவர் (வாஸுதேவர்) - எனவே, அவருக்கு நாம் படும் துன்பங்கள் அனைத்தும் தெரியும்.

திருமாமகளோடு என்றும் இணைபிரியாதிருக்கும் லக்ஷ்மிநரசிம்மர் தமக்கு (நமக்கு) கைக்கொடுத்து இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து தம்மை (நம்மை) விடுவித்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார் ஆதிசங்கரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக