வெள்ளி, ஏப்ரல் 09, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 154

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |

214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ||

இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.  

215. ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும் 

ப்ரபுத்தஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால் 

அநிமிஶ: பகவான் 'அநிமிஶ:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் 'அநிமிஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் 'விழிப்புடன் இருத்தல்', 'அறிவொளியோடு இருத்தல்' என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

 

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும் 

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும் 

அநிமிஶ: பகவான் 'அநிமிஶ:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் 'அநிமிஶ:' (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் 'அநிமிஶ:' (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் 'வைகை' என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார். பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். 'அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்' கூறிவிட்டு மறைந்தார். அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார். முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார். இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

216. ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை

வைஜயந்த்யாக்யாம் 'வைஜயந்தி' என்ற பெயருடைய 

ஸ்ரஜம் மாலையை 

நித்யம் என்றும் (எக்காலத்திலும்

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்

ஸ்ரக்வீ பகவான் 'ஸ்ரக்வீ'' (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான 'வைஜயந்தி' என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் 'ஸ்ரக்வீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள் - இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம் - எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

217. ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா 'வாச' என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும் 

பதி: அவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்

வாசஸ்பதி: 'வாசஸ்பதி:' என்று அழைக்கப்படுகிறார் 

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும் 

புத்திரஸ்யேத்யுதாரதீ: அறிவைப் பெற்றிருப்பதால் 'உதாரதீ' என்று அழைக்கப்படுகிறார் 

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் 'வாசஸ்பதிருதாரதீ:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வாச' என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் 'அறிவின் தலைவர்' என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் 'உதாரதீ' என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் 'வாசஸ்பதிருதாரதீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் 'வாசஸ்பதி', 'உதாரதீ' அகியவை இணைந்து 'வாசஸ்பதிருதாரதீ' என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக