25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: ||
இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
228. ஓம் ஆவர்த்தனாய நம:
ஆவர்த்தயிதும் ஸம்ஸார சக்ரம் ஶீலமஸ்யேதி ஆவர்த்தன:
பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால், பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
229. ஓம் நிவ்ருத்தாத்மனே நம:
ஸம்ஸாரபந்தான் நிவ்ருத்த ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி நிவ்ருத்தாத்மா
இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும், இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
230. ஓம் ஸம்வருதாய நம:
ஆச்சாதிகயா அவித்யயா ஸம்வ்ருதத்வாத் ஸம்வ்ருத:
நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு, அறியாமையால் (அஞ்ஞானத்தால்) மூடியுள்ள படியால் அவர் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
231. ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:
ஸம்யக் ப்ரமர்த்தயதீதி ருத்ரகாலாத்யாபிர் விபூதிபிர் இதி ஸம்ப்ரமர்த்தன:
பகவான் ருத்ரன், காலன் (காலம்) ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும், அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும், அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்) அழிக்கிறார். எனவே, அவர் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
232. ஓம் அஹ: ஸம்வர்த்தகாய நம:
ஸம்யகஹ்னாம் ப்ரவர்த்தநாத் ஸூர்ய: அஹ: ஸம்வர்த்தக:
பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
233. ஓம் வஹ்னயே நம:
ஹவிர் வஹநாத் வஹ்னி:
யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின் உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
234. ஓம் அனிலாய நம:
அனிலய: அனில:
(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அநாதித்வாத் அனில:
பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். காற்றிற்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. எனவே, காற்றின் வடிவில் இருக்கும் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அநாதானாத்வா அனில:.
பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது. எனவே, பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அநநாத்வா அனில:
(மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
235. ஓம் தரணீதராய நம:
சேஶதிக்கஜாதி ரூபேண வராஹரூபேண ச தரணீம் தத்த இதி தரணீதர:
பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார். மேலும், பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார். எனவே, பகவான் 'தரணீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக