வெள்ளி, மார்ச் 23, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 14


இதானீம் ப்ரதம ப்ரஶ்னஸ் யோத்தரமாஹ (கிமேகம் தைவதம் லோகே) -

இப்பொழுது "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" முதல் கேள்விக்கு விடையளிக்கிறார்.

பவித்ரானாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||

எவரொருவர் பவித்ரமான (புனிதமான) பொருட்களை காட்டிலும் புனிதமானவரோ, மங்களத்தை (சுகத்தை) அடையும் வழியாகவும் அதை தந்தருள்பவராகவும் மங்களமே உருவெடுத்தது போல பரமானந்த வடிவினராய் இருப்பவரோ, தனது பரமமான ஒளியாலே அனைத்து தேவர்களுக்கும் தெய்வமாக இருப்பவரோ, அழிவற்றவரோ, அனைத்தும் (அனைவரும், அனைத்து ஜீவராசிகளும்) தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவரோ, அவரே (அந்த நாராயணனே) முழு முதற் கடவுளாவார்.


பவித்ரானாம் பவித்ரம் பாவநானாம் தீர்த்தாதீனாம் பவித்ரம் | யார் பவித்ரமான (புனிதமான) பொருட்களை காட்டிலும் புனிதமானவரோ, அதாவது அனைவரையும் புனிதபடுத்தகூடிய புண்ணிய தீர்த்தங்கள் முதலானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்| 

ஏன் பகவானை புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர் என்கிறோம்? அதற்கு ஆச்சார்யாள் இரண்டு காரணங்களை அளிக்கிறார். ஒன்று, தன்னை த்யானிப்பவர், தரிசிப்பவர், வழிபடுவோர், நினைப்போர் ஆகிய அனைவரின் பாவங்களையும் அடியோடு அழிக்கிறார். இரண்டாவது, நமது கர்ம வினைகளை  அதன் வேரான அறியாமையோடு (அஞ்ஞானம்) அழிக்கிறார்.

பரமஸ்து புமான் பரமபுருஶனான பரமாத்மா த்யாதோ தன்னை த்யானிப்பவர் த்ருஷ்ட: தரிசிப்பவர் கீர்த்தித: (அவரது புகழை) பாடுபவர் ஸ்துத: துதிப்பவர் ஸம்பூஜித: பூஜிப்பவர் ஸ்ம்ருத: ஸ்மரிப்பவர் (அவரை நினைப்பவர்) ப்ரணத: மற்றும் வணங்குபவர்களின் பாப்மன: ஸர்வாநுன்மூலயதீதி அனைத்து பாவங்களையும் அடியோடு அழிக்கிறார் பரமம் பவித்ரம் எனவே அவர் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவர்.

ஸம்ஸாரபந்தஹேதுபூதம் (பிறப்பு இறப்பென்னும் இந்த) ஸம்சார பந்தம் உருவாவதற்கு காரணமாயுள்ள புண்யா(அ)புண்யாத்மகம் கர்ம புண்ய பாப கர்மங்கள் தத்காரணம் சாஞானம் (ச அஞ்ஞானம்) மற்றும் அந்த கர்மங்கள் உருவாவதற்குக் காரணமாயுள்ள அறியாமை (அஞ்ஞானம்) ஸர்வம் ஆகிய அனைத்தையும்  நாஷயதி ஸ்வயாதாத்ம்யஞானேனேதி தனது ஸ்வரூப ஞானத்தின் மூலம் அழிப்பதினால் வா பவித்ரானாம் பவித்ரம் அவர் புனிதமானவைகளைக் காட்டிலும் புனிதமானவராவார்.

இனி பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார் ஆதிசங்கரர். பற்பல மேற்கோள்கள் இருப்பதால் அவற்றை பல பகுதிகளாக பிரித்துப் படித்துப் பயன் பெறுவோமாக.

ரூபமாரோக்யமர்தாம்ச்ச போகான்சைவானுஷங்கிகான் |
ததாதி த்யாயதோ நித்யமபவர்கப்ரதோ ஹரி: ||
பகவான் ஸ்ரீ ஹரியானவர் தன்னை த்யானிப்பவர்களுக்கு முக்தியை அளிப்பதோடல்லாமல், அழகு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் இடைவிடாத உலக இன்பங்களையும் அளிக்கிறார்.

சிந்த்யமான: ஸமஸ்தானாம் க்லேஷானாம் ஹானிதோ ஹி ய:|
ஸமுத்ஸ்ருஜ்யாகிலம் சிந்த்யம் சோSச்யுத: கிம் ந சிந்த்யதே ||
எவரொருவர் தன்னை த்யானிப்பவர்களின் அனைத்து துன்பங்களையும் அழிக்கின்றாரோ, மற்ற சிந்தனைகளையெல்லாம் தவிர்த்து, அந்த அச்யுதரை மட்டும் ஏன் சிந்திக்க கூடாது?

த்யாயேன்நாராயணம் தேவம் ஸ்நானாதிஷு ச கர்மஷு |
ப்ராயச்சித்தம் ஹி ஸர்வஸ்ய துஷ்க்ருதஸ்யேதி வை ஸ்ருதி: || (ஸ்ரீ கருட புராணம் 1.230.28)
ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஸ்ருதிகளும் இவ்வாறு கூறுகின்றன: குளித்தல் முதலான அனைத்து (நித்ய) கர்மங்களையும் செய்யும் பொழுது பகவான் ஸ்ரீ நாராயணனை த்யானிக்க வேண்டும். இதுவே, நாம் அன்றாடம் செய்யும் தீய / பாப செயல்களுக்கு பரிகாரமாகும்.

ஸம்ஸாரசர்ப்பசந்தஷ்ட நஷ்டசேஷ்டைகபேஷஜம் |
கிருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஷ்ருத்வா முக்தோ பவேன்னர: ||
ஸம்ஸாரம் என்னும் பாம்பு தீண்டி மயக்கமுற்றிருக்கும் மனிதருக்கு ஒரே மருந்தானது ‘கிருஷ்ண’ என்னும் விஶ்ணுவின் திருநாமமாகும். இதை கேட்ட மாத்திரத்தில் ஒரு மனிதன் (ஸம்ஸாரமென்னும் பாம்பின் விஷத்திலிருந்து) விடுபடுகின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக