இன்று தை அமாவாசை (22 ஜனவரி 2012). இன்றும், ஆடி அமாவாசையிலும் எங்கள் குல தெய்வமான திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். அந்த பூஜையை முடித்துவிட்டு இன்றையை இடுகையை தொடங்குகிறேன். இந்த நன்னாளில் திருஎவ்வுள் என்ற திருவள்ளூரின் ஸ்தல புராணத்தையும், வீரராகவரின் பெருமைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
திருவள்ளூர் வீரராகவர் மூலவர் |
ஸ்தல பெயர்: திருஎவ்வுள்
பெருமாள் பெயர்: எவ்வுள் கிடந்தான் என்னும் ஸ்ரீ வைத்திய வீரராகவர்
தாயார் பெயர்: கனகவல்லி, வஸுமதி
தீர்த்தம்: ஹ்ருத்தாபநாசினி
விமானம்: விஜய கோடி விமானம்
ஸ்தல புராணம்:
இந்த ஸ்தலத்தில் சாலிஹோத்ர மகரிஷி பகவானை ஆராதித்து வந்தார். அவர் வருடம் முழுதும் பகவானை வழிபடுவார். வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே உண்பார் (அந்த நாள் தை அமாவாசை என்று கூறுவர்). ஒரு அமாவாசை அன்று அவர் உணவு உண்பதற்கு முன் ஒரு முதியவர் அவரிடம் உணவு கேட்டார். வந்தவருக்கு இல்லை என்று கூறாமல் தன்னிடம் இருந்த உணவு அனைத்தையும் அந்த முதியவருக்கு வழங்கி விட்டு மீண்டும் ஒரு வருடம் ஆராதனத்தில் கழித்தார். அடுத்த வருடமும் அமாவாசை அன்று அதே முதியவர் வந்து உணவு கேட்க, இருந்தது அனைத்தையும் மீண்டும் வழங்கினார் சாலிஹோத்ர முனிவர். அந்த முதியவர் உணவு உண்ட பிறகு, ஓய்வு எடுக்க "எவ்வுள்" என்று வினவினார் (அதாவது நான் எந்த உள்ளில் படுக்க? என்று கேட்டார்). சாலிஹோத்ர முனிவரும் தனது ஆஸ்ரமத்தில் இடம் காட்டினார். பின்னர் முதியவராக வந்த பகவான் தனது சுய ரூபத்தை முனிவருக்கு காட்டி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சாலிஹோத்ர முனிவரும், தங்கள் இதே கோலத்தில் இங்கேயே பள்ளி கொண்டு அடியவருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டார். அந்த சாலிஹோத்ர மகிரிஷியின் ஆஸ்ரமமே திருஎவ்வுள் ஸ்தலம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் திருஎவ்வுளூர் என்பது திருவள்ளுராக மருவியது. பகவானும் வீர சயனத்தில் பள்ளி கொண்டு, சாலிஹோத்ர மகரிஷியை தனது அருகிலேயே வைத்துகொண்டு அருள் பாலிக்கிறார்.
உற்சவர் ஸ்ரீவீரராகவர் |
பின்னர் இராஜா தர்மசேனனின் புதல்வியாக வஸுமதி என்ற பெயரில் தோன்றிய மகாலக்ஷ்மியை இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு இங்கேயே (மாமனார் வீட்டிலேயே) வசிப்பதாக வாக்கு கொடுத்து, அதன் படி இங்கே எழுந்தருளி இருப்பதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.
தீர்த்த மஹிமை:
இத்தலத்தின் தீர்த்தம் "ஹ்ருத்தாபநாசினி" என்று அழைக்க படுகிறது. நமது பாவங்களினால் மனதில் எழும் தாபங்களையும் தீர்க்க வல்லது இந்த தீர்த்தம். தக்ஷனை அழித்த சிவபெருமான், தனது பிரம்மஹத்தி தோஷத்தை இந்த தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை வணங்கி தீர்த்துக்கொண்டதாக புராணம். இந்த தீர்த்தத்தின் கரையில் "தீர்தேஸ்வரர்" என்ற பெயரில் ஒரு சிவஸ்தலமும் உள்ளது. பாரத போர் முடிந்து பாண்டவர்களும் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது தாபம் தீர பெற்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
பாசுரங்கள்:
இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும் பாடி உள்ளனர். திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். அதில் அவர் பகவானின் பெருமைகளை இராமனாகவும், அவனது எளிமையை கண்ணனாகவும் பாடி உள்ளார்.
காசை ஆடை மூடி ஓடி காதல் செய்தானவன் ஊர்
நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்
வெயினன்ன தோள் மடவார் வெண்ணை உண்டான் இவனென்று
ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே!!
காஷாயம் மூலம் (காசை ஆடை) தன்னை மூடிக்கொண்டு சீதை மேல் தவறான காதல் கொண்டு ஓடி வந்த இராவணின் ஊர் நாசமாக போகும் வண்ணம் போர் புரிந்தான் இராமன். அந்த பரம்பொருளே, ஆய்ச்சிமார்களால் வெண்ணை திருடன் என்று அழைக்கும் வண்ணம் எளியவனாகவும் உள்ளான் (ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்திலே).
இன்னொரு பாசுரத்தில்,
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூதாகி மன்னர்காகி பெரு நிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே!!
இராமானாக ஹனுமான் மூலமாக இராவணனிற்கு தூது அனுப்பிய பகவான், தன்னை அண்டி வந்த பாண்டவர்க்காக, தானே தூதனை சென்றான் (கௌரவர்கள் அவனை கிருஷ்ணன் என்று கூட கூறவில்லையாம் - பாண்டவர் தூதன் வந்திருக்கிறான் என்றார்களாம்). இன்று கூட காஞ்சிபுரத்தில், திருப்பாடகம் என்னும் திவ்ய தேசத்தில், பகவான் பாண்டவர் தூதன் என்னும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார்.
தவறு இழைத்தால், தவறு செய்தவனின் ஊரையும் அழிக்க வல்ல பரம்பொருள், தனது அடியவர்களின் பக்திக்கு இரங்கி எளியவனாக வருகிறான், ஏச்சுக்கள் கேட்கிறான், அனைத்தையும் பொறுக்கிறான். இதன் அர்த்தம், நாம் இராவணனாக இல்லாமல் கோபியர்கள், கோபர்கள் போல தூய மனதுடன் அவனை நினைத்தால், அவன் நமக்காக இரங்கி, நம் அளவிற்கும் இறங்கி வருகிறான்.
வைத்திய வீரராகவர்:
இத்தலத்தில் பகவான், நமது நோய்களை போக்கும் வைத்தியராக இருக்கிறார். இங்கே, உப்பு மிளகு கொட்டுதல், ஹ்ருத்தாபனாசினியில் வெல்லம் கரைத்தல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக அடியவர்களால் செய்ய படுகிறது. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தீராத வயிற்று வலியால் துன்பப்பட்டார். பின்பு வீரராகவ சுவாமியை வணங்கி தன் வயிற்று நோய் தீர்ந்து, சுவாமிக்கு பத்து பாடல்கள் பாடியுள்ளார்.
எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனுக்கு நடந்த உண்மை நிகழ்ச்சி: அவனுக்கு கைக்கு அடியில் ஒரு கட்டி வந்து, பனியன் கூட அணிய முடியாமல் இருந்தான். பல சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் போனது. அவனது உறவினர் ஒருவர் கூறியபடி, திருவள்ளூர் வந்து, வேண்டி கொண்டான். ஒன்று இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவனது கட்டி மறைந்து விட்டது.
இந்த தை அமாவாசை நன்னாளில், வீரராகவர் நமது உடல் நோய் மட்டும் அல்லாது, காமம், கோபம் முதலிய மன நோய்களையும் அழிக்க வேண்டுவோம்!!!