சனி, ஜூன் 25, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 208

61. ஸுதன்வா கண்டபரஶுர்தாருணோ த்ரவிணப்ரத: |

திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||

இந்த அறுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

567. ஸுதன்வா, 568. கண்டபரஶு: (அகண்டபரஶு:), 569. தாருண:, 570. த்ரவிணப்ரத: |

571. திவ:ஸ்ப்ருக், 572. ஸர்வத்ருக்வ்யாஸ:, 573. வாசஸ்பதிரயோநிஜ: ||   

567. ஸுதன்வனே நம:


ஶோபனமிந்த்ரியாதிமயம் அழகானதும், இந்த்ரியங்களின் (உட்புலன், வெளிப்புலன் ஆகியவற்றின்) வடிவானதுமான

ஶார்ங்கம் ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய

தனுரஸ்யாஸ்தீதி வில்லை ஏந்தியிருப்பதால்

ஸுதன்வா பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


அழகானதும், (கண், காது, செவி, மனம் போன்ற) இந்த்ரியங்களின் வடிவானதுமான ‘ஶார்ங்கம்’ எனும் பெயருடைய வில்லை (தனது கைகளில்) ஏந்தியிருப்பதால் பகவான் ‘ஸுதன்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


568. கண்டபரஶுவே நம: (அகண்டபரஶுவே நம:

ஶத்ரூணாம் எதிரிகளை

கண்டனாத் (வெட்டி) அழிப்பதால்

கண்ட: ‘கண்ட:’ என்று அழைக்கின்றனர்

பரஶுரஸ்ய கோடரியை

ஜாமத்க்ன்யா பகவான் பரசுராமரின் கையிலுள்ள

க்ருதேரிதி அந்தக் கோடரியை ஏந்தியிருப்பதால்

கண்டபரஶு: பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


தனது பரசுராம அவதாரத்தில், எதிரிகளை வெட்டி அழிப்பதால் ‘கண்ட:’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் கோடரியை ஏந்தியிருப்பதால் பகவான் ‘கண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


அகண்ட: எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத

பரஶுரஸ்யேதி வா கோடரியை கையில் ஏந்திருப்பதால்

அகண்டபரஶு: பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


அல்லது, எவராலும் வெல்ல (அல்லது துண்டாட) இயலாத கோடரியை கையில் ஏந்திருப்பதால் பகவான் ‘அகண்டபரஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


 


பகவான் பரசுராமரின் வரலாறு: ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக பகவான் ‘ராம’ என்ற திருநாமத்தோடு அவர்களின் நான்காவது புதல்வராக அவதரித்தார். தந்தையின் சொல்லிற்கு இணங்கி தனது தாயாரையும், தமையன்களையும் கொன்று, பின்னர் தந்தையிடம் பிரார்த்தித்து அவர்களை உயிர்பித்தார். தந்தையின் கட்டளைக்கேற்ப பகவான் பரமசிவனை நோக்கித் தவமிருந்து பரசு எனும் கோடரி ஆயுதத்தை பெற்றார் (எனவே அவர் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்படுகிறார்). இதனிடையே ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வரும் கார்த்தவீர்யாஜுனனை, ஜமதக்னி முனிவர் தன்னிடம் உள்ள நந்தினி பசுவின் துணையோடு உபசரிக்கிறார். நந்தினியை கார்த்தவீர்யாஜுனன் கேட்க, கொடுக்க மறுக்கும் ஜமதக்னி முனிவரை அந்த அரசன் கொல்கிறான். இதைக் கேட்ட பரசுராமர் அவனோடு போர் தொடுத்து அவனை அழிக்கிறார். பின்னர் முனிவர்களின் ஆசியோடு தந்தையையும் உயிர்பிக்கிறார். மற்றொரு முறை பரசுராமர் இல்லாத சமயத்தில் கார்த்தவீர்யனின் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரை கொன்று, ஆஸ்ரமத்தையும் அழித்தனர். தனது தாயாரின் புலம்பலைக் கேட்ட பரசுராமர் 21 தலைமுறைகள் க்ஷத்ரியர்களைக் கொல்வதாக சபதம் ஏற்று, அவ்வாறே கொன்று, அந்த உதிரத்தில் தனது தந்தைக்கு ஈமக் கடன்களை செய்கிறார். இராமாவதாரத்தில் பகவான் இராமரை சந்தித்து தனது சக்திகளையும், விஶ்ணு வில்லையும் அவரிடம் அளிக்கிறார். பின்னர் மஹாபாரத காலத்தில் பீஶ்மருக்கும், கர்ணனுக்கும் வெவ்வேறு காலங்களில் குருவாக இருந்து அஸ்த்ர வித்தைகளை கற்றுத் தருகிறார். இவரின் மற்ற பெயர்கள், ஜாமதக்ன்யர் (ஜமதக்னியின் புதல்வர்), பார்கவ இராமர் (ப்ருகு குலத்தில் தோன்றியதால்). பின்னர் க்ஷத்ரியர் இல்லாத இந்த நிலங்களை கஸ்யப மஹரிஷிக்கு அளித்துவிட்டு, தனக்காக மேற்கு கடற்கரையோரம் வருணனிடம் பிரார்த்தித்து நிலத்தைப் பெற்றுக் கொள்கிறார். இந்த நிலப்பரப்பே இன்றைக்கு கேரளம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சிரஞ்சீவியாக மஹேந்திர மலையில் தவமிருக்கிறார்.


569. தாருணாய நம:

ஸன்மார்க நல்வழியின் (அறவழியின்)

விரோதீனாம் எதிரிகளுக்கு

தாருணத்வாத் அச்சமூட்டுபவராக இருப்பதால்

தாருண: பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


அறவழியின் (அறவழியில் நடப்போருக்கு) எதிரிகளுக்கு தாம் அச்சமூட்டுபவராக இருப்பதால் பகவான் ‘தாருண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


570. த்ரவிணப்ரதாய நம:

த்ரவிணம் செல்வத்தை

வாஞ்சிதம் விழையும்

பக்தேப்ய: அடியவர்களுக்கு

ப்ரததாதீதி (அவர்கள் வேண்டும்) செல்வத்தை அளிப்பதால்

த்ரவிணப்ரத: பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


செல்வத்தை விழையும் அடியவர்களுக்கு, அவர்கள் விழையும் செல்வத்தை அளிப்பதால் பகவான் ‘த்ரவிணப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.


571. திவஸ்ப்ருஶே நம:

திவ: ஆகாயத்தை (அல்லது ஸ்வர்க்கத்தை)

ஸ்பர்ஶனாத் தீண்டுவதால் (தொடுவதால்)

திவ:ஸ்ப்ருக் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.


ஆகாயத்தை (ஸ்வர்க்கத்தை) தொடுவதால் பகவான் ‘திவ:ஸ்ப்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.


572. ஸர்வத்ருக்வ்யாஸாய நம:

ஸர்வத்ருஶாம் ஸர்வஞானானாம் 'ஸர்வத்ருக்' அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்)

விஸ்தாரக்ருத் விரிவாக எடுத்துரைத்த

வ்யாஸ: ஸர்வத்ருக்வ்யாஸ: பகவான் வேத வ்யாஸரே 'ஸர்வத்ருக்வ்யாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.


'ஸர்வத்ருக்' அதாவது அனைத்து வகை ஞானங்களையும் (அனைத்து வகை ஞானங்களைப் பற்றியும்) விரிவாக எடுத்துரைத்த பகவான் வேத வ்யாஸரே 'ஸர்வத்ருக்வ்யாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவானே வ்யாஸராக அவதரித்தார் என்பதை நாம் முன்பே ‘க்ருஷ்ண:’ என்ற (55௦ வது) திருநாமத்தில் பார்த்தோம்.


அதவா அல்லது

ஸர்வா ச ஸா அனைத்துமாய் இருப்பதாலும்

த்ருக் சேதி அனைத்தையும் அறிவதாலும்

ஸர்வத்ருக் ஸர்வாகாரம் ஞானம் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். ஸர்வஸ்ய அனைவரின்

த்ருஶ்டித்வாத் வா பார்வையாகவும் இருப்பதால்

ஸர்வத்ருக் பகவான் 'ஸர்வத்ருக்' என்று அழைக்கப்படுகிறார். 

அல்லது, அனைத்துமாய் இருப்பதாலும் அனைத்தையும் அறிவதாலும் அனைத்தையும் அறியும் ஞான வடிவாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். அனைவரின் பார்வையாகவும் (அனைத்தையும் பார்ப்பவராக) இருப்பதாலும் பகவான் 'ஸர்வத்ருக்' என்று அழைக்கப்படுகிறார். 

ரிக்வேதாதி ரிக் வேதம் முதலாய்

விபாகேன சதுர்த்தா வேதா வ்யஸ்தா: க்ருதா: வேதங்களை நான்காக வகுத்தார்

ஆத்யோ வேத முதலாம் வேதமான ரிக் வேதத்தை

ஏகவிம்ஶதிதா க்ருத: 21 பிரிவுகளாகவும்

த்விதீய இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை

ஏகோத்தரஶததா க்ருத: 101 பிரிவுகளாகவும்

ஸாமவேத: ஸாமவேதத்தை

ஸஹஸ்ரதா க்ருத: 1000 பிரிவுகளாகவும்

அதர்வவேதோ அதர்வவேதத்தை

நவதா ஶாகாபேதென க்ருத: ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார்.

ஏவம் அன்யானி இவ்வாறு மற்ற

புராணானி புராணங்களையும்

வ்யஸ்தான்யனேனேதி பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால்

வ்யாஸ: ப்ரஹ்மா நான்முகக் கடவுளான ப்ரஹ்மா 'வ்யாஸ:' என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் 'வ்யாஸ:' என்று அழைக்கப்படுகிறார்).


ரிக் வேதம் முதலாய் வேதங்களை நான்காக வகுத்தார். முதலாம் வேதமான ரிக் வேதத்தை 21 பிரிவுகளாகவும், இரண்டாவது வேதமான யஜுர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், ஸாமவேதத்தை 1000 பிரிவுகளாகவும், அதர்வவேதத்தை ஒன்பது பிரிவுகளாகவும் பிரித்தார். இவ்வாறு மேலும் மற்ற (பதினெண்) புராணங்களையும் பல்வேறு பிரிவுகளாக பிரித்தபடியால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா 'வ்யாஸ:' என்று அழைக்கப்படுகிறார் (ப்ரஹ்மாவின் வடிவான பகவான் 'வ்யாஸ:' என்று அழைக்கப்படுகிறார்).

இவ்வாறு 'ஸர்வத்ருக்', 'வ்யாஸ:' ஆகிய பதங்களுக்கு வேறு பொருள்களையும் ஆச்சார்யாள் அளிக்கிறார். ஆயினும், இந்த இரண்டு பதங்களும் ஒன்று சேர்ந்த 'ஸர்வத்ருக்வ்யாஸ:' என்ற ஒரே திருநாமமாகவே இதை கணக்கில் கொள்ள வேண்டும்.


573. வாசஸ்பதயே(அ)யோனிஜாய நம:

வாசஸ்பதிரயோனிஜ: பகவான் 'வாசஸ்பதிரயோனிஜ:' என்று அழைக்கப்படுகிறார்.

வாசோ வித்யாயா: 'வாச:' என்றால் வித்தை அல்லது கல்வி என்று பொருள் பதி: அதன் அதிபதியாக இருப்பதால்

வாசஸ்பதி: 'வாசஸ்பதி:' என்றும்

ஜனன்யாம் ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து

ந ஜாயத இதி பிறவாதபடியால்

அயோனிஜ: 'அயோனிஜ:' என்றும் அழைக்கப்படுகிறார்.

இதி இது

ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான

ஏகம் நாம ஒரே திருநாமமாகும்.  


வாக்கிற்கு (கல்விக்கு) அதிபதியாக இருப்பதால் 'வாசஸ்பதி:' என்றும், ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறவாத படியால் 'அயோனிஜ:' என்றும் பகவான் அழைக்கப்படுகிறார். இந்த இரண்டு பதங்களும் சேர்ந்து ஒரே திருநாமமாக 'வாசஸ்பதிரயோனிஜ:' என்று பகவான் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!