செவ்வாய், ஆகஸ்ட் 10, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 188

41. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

373. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |

378. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

 373. ஓம் உத்பவாய நம:

ப்ரபஞ்சோத்பத்தி இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு 

உபாதான காரணத்வாத் மூலப்பொருளாய் இருப்பதால் 

உத்பவ: பகவான் 'உத்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

(குடத்திற்கு மண் போல) இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு மூலப்பொருளாய் (உபாதான காரணம்) இருப்பதால் பகவான் 'உத்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

374. ஓம் ஷோபணாய நம:

ஸர்ககாலே ப்ரபஞ்சத்தின் தோற்றத்தில் 

ப்ரக்ருதிம் புருஶம் ப்ரக்ருதி மற்றும் புருஷனுக்குள் 

ப்ரவிஶ்ய உட்புகுந்து 

ஷோபயாமாஸேதி அந்த ப்ரக்ருதி, புருஷர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார் 

ஷோபண: எனவே பகவான் 'ஷோபண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ப்ரக்ருதியினுள்ளும் (மாறக்கூடிய இயற்கை), புருஷனுக்குள்ளும் (மாற்றமில்லாத ஜீவாத்மா) புகுந்து அவர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார். எனவே அவர் 'ஷோபண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாங்கிய யோகத்தின்படி இந்தப் ப்ரபஞ்சமானது ப்ரக்ருதி (மூலப்பொருள்) மற்றும் புருஷனின் இணைப்பால் உண்டாகிறது. இவை தனித்திருந்தால் பிரளயம், ஒன்றிணையும் பொழுது படைப்பு.

ப்ரக்ருதிம் புருஶம் சைவ ப்ரவிஶ்யாத்மேச்சயா ஹரி: |

ப்ரவிஶ்ய ஷோபயாமாஸ ஸர்க்ககாலே வ்யயாவ்யயௌ || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.29)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அழிவற்றவரான பரமாத்மா ஹரி இந்தப் ப்ரபஞ்சத்தை படைக்கும் காலத்தில் தனது சுய விருப்பாலே மாறுதலை அடையக்கூடியதான ப்ரக்ருதிக்குள்ளும், மாறுதலற்ற ஆத்மாவிற்குள்ளும் (புருஷனுக்குள்ளும்) உட்புகுந்து அவர்களை (படைப்புத் தொழிலில் இயங்கும்படி) தூண்டினார்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

375. ஓம் தேவாய நம:

யதோ தீவ்யதி க்ரீடயதி ஸர்காதிபி: எவர் படைத்தல் முதலான தொழில்களை விளையாட்டாய் (லீலையாக) செய்கின்றாரோ 

தேவ: அந்த பகவான் (ஸ்ரீ ஹரி) 'தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய செயல்களை விளையாட்டாக (லீலையாக) புரிகிறார். எனவே, அவர் 'தேவன்' என்று அழைக்கப்படுகிறார்.

'அலகிலா விளையாட்டுடையார்...' - கம்ப இராமாயணம் கடவுள் வாழ்த்துப் பாயிரம்

தேவ: என்ற சொல் 'திவ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. 'திவ்' என்பதற்கு வடமொழியில் க்ரீடா (விளையாட்டு), விஜிகீஶ (வெற்றியை விழைதல்), வ்யவஹார (செயல்  புரிதல், இயக்குதல்), த்யுதி (ஒளி விடுதல்), ஸ்தூய (துதிக்கப்பெறுதல்) மற்றும் கச்சதி (செல்லுதல்) ஆகிய பல பொருள்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் வைத்து ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு உரை எழுதியுள்ளார். 

விஜிகீஶதேS(அ)ஸுராதீன் அசுரர்களை வெற்றி கொள்கிறார் 

தேவ: எனவே பகவான் 'தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அசுரர்களை வெல்கிறார். எனவே, அவர் 'தேவன்' என்று அழைக்கப்படுகிறார். 

வ்யவஹரதி ஸர்வபூதேஶு அனைத்துயிர்களையும் இயக்குகிறார் (செயல் புரியத் தூண்டுகிறார்) 

தேவ: எனவே பகவான் 'தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்துயிர்களையும் இயக்குகிறார். எனவே, அவர் 'தேவன்' என்று அழைக்கப்படுகிறார். 

ஆத்மதயா த்யோததே அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார் 

தேவ: எனவே பகவான் 'தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார். எனவே, அவர் 'தேவன்' என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தூயதே ஸ்துத்யை: பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார் 

தேவ: எனவே பகவான் 'தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார். எனவே, அவர் 'தேவன்' என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வத்ர கச்சதி தஸ்மாத் எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார் 

தேவ: எனவே பகவான் 'தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார். எனவே, அவர் 'தேவன்' என்று அழைக்கப்படுகிறார்.

‘ஏகோ தேவ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் ஒருவரே தேவனாவார்

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ' தேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்). 

376. ஓம் ஸ்ரீகர்ப்பாய நம:

ஸ்ரீர்விபூதிர் 'ஸ்ரீ' என்றால் செல்வம் 

யஸ்யோதராந்தரே அவருடைய திருவயிற்றில் 

ஜகத்ரூபா இந்தப் ப்ரபஞ்சமாகிய 

யஸ்ய கர்ப்பே ஸ்திதா கர்ப்பத்தினுள் இருக்கிறது 

ஸ்ரீகர்ப்ப: எனவே பகவான் 'ஸ்ரீகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ்ரீ' எனப்படும் ப்ரபஞ்சமாகிய செல்வம் பகவானது திருவயிற்றில் கர்ப்பமாய் இருக்கிறது (ப்ரளய காலத்தில்). எனவே, பகவான் 'ஸ்ரீகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

377. ஓம் பரமேஶ்வராய நம:

பரமஸ்சாஸா மிகவும் மேலானவர் 

ஈஶானஶீலஸ்சேதி ஆளுமையுடையவர் 

பரமேஶ்வர: எனவே பகவான் 'பரமேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் மேலானவர் மற்றும் ஆளுமையுடையவராதலால் பகவான் 'பரமேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸமம் ஸர்வேஶு பூதேஶு திஶ்டந்தம் பரமேஶ்வரம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 13.27)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேஸ்வரன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும். 

378. ஓம் கரணாய நம:

ஜகதுத்பத்தௌ இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு 

ஸாதகதமம் மிகச்சிறந்த சாதனமாய் (கருவியாய்) இருப்பதால் 

கரணம் பகவான் 'கரணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்குக் மிகச்சிறந்த கருவியாய் இருப்பதால் பகவான் 'கரணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதகம் என்றால் கருவி. ஸாதக தமம் என்றால் மேலான (மிகச்சிறந்த) கருவி என்று பொருள் 

379. ஓம் காரணாய நம:

உபாதானம் (இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும் 

நிமித்தம் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால் 

காரணம் பகவான் 'காரணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால் பகவான் 'காரணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்ற திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், திருநாமம் வெவ்வேறாயிருப்பதால் புனருக்தி தோஷம் இல்லை. 

380. ஓம் கர்த்ரே நம:

கர்த்தா பகவான் 'கர்த்தா' என்று அழைக்கப்படுகிறார் 

ஸ்வதந்த்ர: ஏனெனில், அவர் (ப்ரபஞ்சத்தின் படைப்பு முதலான செயல்களை) தன்னிச்சையால் சுதந்திரமாய் புரிகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலிய செயல்களை தன்னிச்சையாய், சுதந்திரமாய் புரிகிறார். எனவே அவர் 'கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

381. ஓம் விகர்த்ரே நம:

விசித்ரம் பலவிதமான (ஆச்சர்யமான) புவனம் உலகங்களைப் 

க்ரியதே இதி படைப்பதனால் 

விகர்த்தா 'விகர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஸ ஏவ பகவான் விஶ்ணு: அந்த பகவான் விஶ்ணு ஒருவரே.

பற்பல ஆச்சர்யமான உலகங்களைப் படைப்பதனால் பகவான் விஶ்ணுவே 'விகர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

382. ஓம் கஹனாய நம:

ஸ்வரூபம் அவருடைய தன்மை 

ஸாமர்த்யம் திறமை 

சேஶ்டிதம் வா செயல்கள் ஆகியவற்றை 

தஸ்ய ஞாதும் ந ஶக்யத இதி ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது 

கஹன: எனவே பகவான் 'கஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுடைய தன்மை, திறமை மற்றும் செயல்களை ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் 'கஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

383. ஓம் குஹாய நம:

கூஹதே ஸம்வ்ருணோதி 'குஹ' அதாவது மறைக்கிறார் 

ஸ்வரூபாதி தன்னுடைய தன்மை முதலானவற்றை 

நிஜமாயயேதி தன்னுடைய மாயையினால் 

குஹ: எனவே பகவான் 'குஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய தன்மை முதலானவற்றை தன் மாயையினால் மறைத்து வைக்கிறார். எனவே அவர் 'குஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: யோகமாயையால் மறைக்கப்பட்டு நான் எல்லோருக்கும் காட்சி அளிப்பதில்லை.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.