வியாழன், அக்டோபர் 28, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 195

48. யக்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ய க்ரது ஸத்ரம் ஸதாம்கதி: |

ஸர்வதர்ஶீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஞானமுத்தமம் ||

இந்த நாற்பத்தெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

445. யக்ஞ:, 446. இஜ்ய, 447. மஹேஜ்ய, 448. க்ரது:, 449. ஸத்ரம், 450. ஸதாம்கதி: |

451. ஸர்வதர்ஶீ, 452. விமுக்தாத்மா, 453. ஸர்வஜ்ஞ:, 454. ஞானமுத்தமம் ||  

445. ஓம் யக்ஞாய நம:

ஸர்வயக்ஞ அனைத்து வேள்விகளின் 

ஸ்வரூபத்வாத் வடிவாக திகழ்வதால் 

யக்ஞ: பகவான் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து வேள்விகளின் வடிவாக இருக்கிறார். எனவே அவர் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

துஶ்டிகாரகோ (அனைத்து தேவர்களுக்கும்) திருப்தியை (இன்பத்தை) 

யக்ஞாகாரேண வேள்விகளின் வடிவாய் இருந்து 

ப்ரவர்த்தத வளர்க்கிறார் 

இதி வா யக்ஞ: எனவே, பகவான் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் வேள்விகளின் வடிவில் அனைத்து தேவர்களுக்கும் மகிழ்ச்சியை வளர்க்கிறார். எனவே அவர் 'யக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு:’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவே வேள்வியாவார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

446. ஓம் இஜ்யாய நம:

யஶ்டவ்யோப்யயம் ஏவ இதி (அந்த யக்ஞங்களின் மூலம்) வழிபடப்படுபவரும் பகவான் ஒருவரே 

இஜ்ய: எனவே, அவர் 'இஜ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் யக்ஞங்களின் வடிவாக உள்ளது மட்டுமன்றி, அந்த யக்ஞங்களால் வழிபடப்படுபவராகவும் உள்ளார். எனவே அவர் 'இஜ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஏவ என்ற சொல் யக்ஞங்களால் பகவான் ஒருவர் மட்டுமே வழிபடப்படுகிறார், மற்றோர் யவரும் அல்லர் என்பதை குறிக்கிறது.

யே யஜந்தி மகை: புண்யைர்தேவதாதீன்பித்ருனபி |

ஆத்மானமாத்மனா நித்யம் விஶ்ணுமேவ யஜந்தி தே || || (ஸ்ரீ ஹரி வம்சம்)

ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவர் புண்ணியமான வேள்விகளால் தேவர்களையும், முன்னோர்களையும் (பித்ருக்கள்) வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைத்திற்கும் (தமது, அந்த தேவர்கள் மற்றும் பித்ருக்களின்) உள்ளுறை ஆத்மாவான பகவான் ஸ்ரீவிஶ்ணுவையே (அந்த வேள்விகளின் மூலம்) வழிபடுகின்றனர்.

இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது. 

447. ஓம் மஹேஜ்யாய நம:

ஸர்வாஸு அனைத்து 

தேவதாஸு தேவர்களை 

யஶ்டவ்யாஸு வழிபடப்படும் 

ப்ரகர்ஶேண மிகவும் சிறப்பாக (மிக உயர்வாக) 

யஶ்டவ்யோ வழிபடப்படுகிறார் 

மோக்ஷஃபலதாத்ருத்வாத் முக்தியை பலனாக அளிக்கவல்லவராகையால் 

இதி மஹேஜ்ய: எனவே, பகவான் 'மஹேஜ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

குறிப்பிட்ட பலனை வேண்டி வேள்விகளால் பற்பல தேவர்கள் வழிபடப்படுகின்றனர். ஆயினும், எவராலும் முக்தியை பலனாக அளிக்க இயலாது. அதை அளிக்கவல்ல பகவானை அனைவரும் மிகவும் சிறப்பாக வழிபடுகின்றனர். எனவே, பகவான் 'மஹேஜ்ய:' (அனைவரைக் காட்டிலும் சிறப்பாக வழிபடப்படுகிறார்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை அளிக்க வல்லவராதலால் வழிபடப்படும் அனைத்து தேவர்களைக் காட்டிலும் பகவானே உயர்ந்தவர். எனவே அவர் மஹா (உயர்ந்த) + இஜ்ய: (வழிபடப்படுபவர்) = மஹேஜ்ய:

448. ஓம் க்ரதவே நம:

யூபஸஹிதோ யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் 

யக்ஞ: வேள்விக்கு 

க்ரது: 'க்ரது' என்று பெயர். அந்த 'க்ரது' வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'க்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யூபஸ்தம்பத்தை நாட்டி நடத்தப்படும் வேள்விக்கு 'க்ரது' என்று பெயர். அந்த 'க்ரது' வேள்வியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'க்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

449. ஓம் ஸத்ராய நம:

ஆஸத்யுபைதி சோதனாலக்ஷணம் விதிவடிவான தர்மத்தை அடைபவர்களை 

ஸத்ரம் 'ஸத்ரம்' என்று அழைப்பர். அவர்களின் உள்ளுறை ஆன்மாவான பகவானும் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விதிவடிவான தர்மத்தை அடைபவரின் உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் பகவான் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸதஸ் ஸத்புருஶர்களான யோகிகளை அல்லது 'ஸத்' என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தை 

த்ராயத காப்பதால் 

இதி வா ஸத்ரம் பகவான் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்புருஶர்களான யோகிகளையும், 'ஸத்' என்று அழைக்கப்படும் இந்த காரிய வடிவான ப்ரபஞ்சத்தையும் காப்பதால் பகவான் 'ஸத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

450. ஓம் ஸதாம்கதயே நம:

ஸதாம் முமுகஷூணாம் 'ஸத்' அதாவது முக்தியை விழைவோருக்கு 

நான்யா கதிரிதி ஒரே புகலிடமாக இருப்பதால் 

ஸதாம் கதி: பகவான் 'ஸதாம் கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைவோருக்கு ஒரே புகலிடமாக இருப்பதால் பகவான் 'ஸதாம் கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்யா = ந + அன்யா

451. ஓம் ஸர்வதர்ஶினே நம:

ஸர்வேஶாம் அனைத்து 

ப்ராணினாம் உயிரினங்களின் 

க்ருதாக்ருதம் செய்யும் (அல்லது செய்யாது விடும்) செயல்கள் ஸர்வம் அனைத்தையும் 

பஶ்யதி அறிகிறார் (காண்கிறார்) 

ஸ்வாபாவிகேன போதேனேதி தனது இயற்கையான தன்மையால் (வேறொன்றின் உதவியின்றி) 

ஸர்வதர்ஶீ எனவே பகவான் 'ஸர்வதர்ஶீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து உயிரினங்களின் செயல்களையும் அறிகிறார் (காண்கிறார்). எனவே அவர் 'ஸர்வதர்ஶீ' என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

க்ருதாக்ருதம் = செய்யத்தகுந்ததை செய்தல், செய்யவேண்டியதை செய்யாமலிருத்தல், செய்யத் தகாத செயல்களை செய்யாதிருத்தல் மற்றும் செய்யத் தகாத செயல்களை செய்தல் ஆகிய அனைத்தையும் பகவான் அறிகிறார். 

452. ஓம் விமுக்தாத்மனே நம:

ஸ்வபாவேன இயற்கையாகவே 

விமுக்த ஆத்மா அவருடைய ஆத்மா பற்றற்று இருப்பதால் 

யஸ்யேதி விமுக்தாத்மா பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இயற்கையாகவே பற்றற்ற ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விமுக்தஸ்சாஸாவாத்மா பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் 

சேதி வா விமுக்தாத்மா பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பற்றற்றவராகவும் அனைவரின் ஆத்மாவாகவும் இருப்பதால் பகவான் 'விமுக்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள் 350) 

453. ஓம் ஸர்வஜ்ஞாய நம:

ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார் 

ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார் 

ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் 'ஸர்வஜ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் 'ஸர்வஜ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை 

454. ஓம் ஞானமுத்தமாய நம:

ஞானமுத்தமம் 'ஞானம் உத்தமம்' என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த 

அஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாத 

ஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியது 

ஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததான 

ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு 'ஞானமுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு 'ஞானமுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.   

ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

வெள்ளி, அக்டோபர் 22, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 194

47. அநிர்விண்ண: ஸ்தவிஶ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |

நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||

இந்த நாற்பத்தேழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

435. அநிர்விண்ண:, 436. ஸ்தவிஶ்ட:, 437. அபூ: (பூ:), 438. தர்மயூப:, 439. மஹாமக: |

440. நக்ஷத்ரநேமி:, 441. நக்ஷத்ரீ, 442. க்ஷம:, 443. க்ஷாம:, 444. ஸமீஹன: || 

435. ஓம் அநிர்விண்ணாய நம:

ஆப்தகாமத்வாத் தன்னிறைவு பெற்றவரானபடியால் 

நிர்வேதோஸ்ய வெறுப்புக்கள் (த்வேஶங்கள்) 

ந வித்யத இதி அவரிடம் காணப்படுவதில்லை 

அநிர்விண்ண: எனவே பகவான் 'அநிர்விண்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவர். மேலும், இதனால், தன்னிறைவு பெற்றவரானபடியால் அவரிடம் வெறுப்புக்களோ, உதாசீனமோ காணப்படுவதில்லை. எனவே அவர் 'அநிர்விண்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

436. ஓம் ஸ்தவிஶ்டாய நம:

வைராஜரூபேண விராட் வடிவத்தில் 

ஸ்தித: இருப்பதால் 

ஸ்தவிஶ்ட: பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரபஞ்சம் முழுவதையும் வ்யாபிக்கும்) விராட் வடிவத்தில் இருப்பதால் பகவான் 'ஸ்தவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அக்னிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ (முண்டக உபநிஶத் 2.1.4)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த விராட்டினுடைய (விராட் புருஷனாக பரந்து விரிந்துள்ள பரப்ரஹ்மத்தின்) தலை ஸ்வர்கலோகமாகும். கதிரவனும், முழுமதியும் அதன் கண்கள்.

அக்னிர்மூர்தா என்ற இடத்தில், அக்னியை ஸ்வர்கலோகம் என்றே பொருளுரைத்திருக்கின்றனர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

 437. ஓம் அபுவே நம:

அஜன்மா பிறப்பற்றவராதலால் 

அபூ: பகவான் 'அபூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பற்றவராதலால் பகவான் 'அபூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை "அபூ:" என்றோ அல்லது "பூ:" என்றோ பதம் பிரிக்கலாம். ஆச்சார்யாள் இரண்டு பதங்களுக்கும் உரை அளித்துள்ளார். எனினும், நாமாவளிக் க்ரமத்தில் "அபூ:" என்று அர்ச்சிப்பதே வழக்கத்தில் உள்ளது.

ஓம் புவே நம:

அதவா அல்லது 

பவதீதி அனைத்துமாய் இருப்பதால் 

பூ: பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (அனைத்துமாய்) இருப்பதால் பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பூ ஸத்தாயாம்' பூ என்ற வேர்ச்சொல்லிற்கு 'ஸத்' அதாவது இருப்பது என்று பொருள் (அந்த பொருளில் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்) இத்யஸ்ய ஸம்பதாதித்வாத் க்விப் இது ஸம்பதாதி கணத்தில் 'க்விப்' என்ற விகுதி சேர்ந்துள்ளது. 

மஹீ வா பூமியை (பூ என்று அழைப்பர்) 

பூ: எனவே, பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூமியை 'பூ' என்று அழைப்பார்கள். எனவே, பகவான் 'பூ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

438. ஓம் தர்மயூபாய நம:

யூபே வேள்வியின் யூபஸ்தம்பத்தில் 

பஶுவத் அந்த வேள்வியில் பலி கொடுக்கப்படும் மிருகத்தை (எவ்வாறு கட்டி வைத்துள்ளனரோ அவ்வாறே) 

தத்ஸமாராதன ஆத்மகா பகவானுக்கு திருப்தியளிக்கும் 

தர்மாஸ்தத்ர தர்மமானது 

பத்யந்த இதி பகவானிடம் கட்டிவைக்கப்பட்டுள்ளது 

தர்மயூப: எனவே, பகவான் 'தர்மயூப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வாறு வேள்வியில் பலியிடப்படவுள்ள மிருகம் அந்த வேள்வியின் யூபஸ்தம்பத்தில் கட்டிவைக்கப்படுமோ, அவ்வாறே பகவானை திருப்திப்படுத்தும் தர்மமானது அவரிடம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பகவான் 'தர்மயூப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

439. ஓம் மஹாமகாய நம:

யஸ்மின் அர்ப்பிதா எவருக்கு அர்ப்பணித்து 

மகா யஞா 'மகா' அதாவது வேள்வியானது 

நிர்வாண லக்ஷண ஃபலம் நிர்வாணமாகிய முக்தியை 

ப்ரயச்சந்தோ அளிக்கின்றன 

மஹாந்தோ ஜாயந்தே எனவே அவை சிறப்பானதாக அறியப்படுகின்றன 

மஹாமக: எனவே பகவான் 'மஹாமக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அர்ப்பணித்து செய்யப்படும் வேள்வியானது (மகா) மிகச்சிறந்த (மஹா) பலனாகிய முக்தியை அளிக்கின்றன. எனவே பகவான் மஹாமக: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹா (மிகச்சிறந்த) + மகா (வேள்வி) = மஹாமக:

440. ஓம் நக்ஷத்ரநேமயே நம:

நக்ஷத்ரதாரகை: ஸார்த்தம் சந்த்ரஸூர்யாதயோ க்ரஹா: |

வாயுபாஶமயைர்பந்தைர் நிர்பத்தா த்ருவஸம்ஞிதே ||

அனைத்து விண்மீன்கள், கோள்களுடன் கூட கதிரவன், வெண்மதி ஆகிய அனைத்தும் காற்றென்னும் கயிற்றால் துருவ நட்சத்திரத்துடன் கட்டப்பட்டுள்ளன. 

ஸ ஜ்யோதிஶாம் சக்ரம் (மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் 

ப்ராமயம்ஸ் தாராமயஸ்ய நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் 

ஶிஶுமாரஸ்ய ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் 

புச்சதேஶே வால்பகுதியில் 

வ்யவஸ்திதோ த்ருவ: துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. 

தஸ்ய ஶிஶுமாரஸ்ய அந்த ஶிஶுமார மண்டலத்தின் 

ஹ்ருதயே இதயப் பகுதியில் 

ஜ்யோதிஸ்சக்ரஸ்ய விண்கோள்களின் வட்டத்தின் 

நேமிவத் விளிம்பில் 

ப்ரவர்த்தக: அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் 

ஸ்திதோ நிலைபெற்றிருக்கும் 

விஶ்ணுரிதி பகவான் விஶ்ணு 

நக்ஷத்ரநேமி: 'நக்ஷத்ரநேமி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்சொன்ன கூற்றின்படி) அனைத்து விண்கோள் வட்டங்களும் நக்ஷத்திரங்களுடன் சுற்றி வரும் ஶிஶுமார (சுறாமீனின் வடிவில் உள்ள) மண்டலத்தின் வால்பகுதியில் துருவ நட்சத்திரம் நிலைபெற்றுள்ளது. அந்த ஶிஶுமார மண்டலத்தின் இதயப் பகுதியில் விண்கோள்களின் வட்டத்தின் விளிம்பில் அவற்றை (அந்த விண்கோள்களை) செலுத்துபவராய் நிலைபெற்றிருக்கும் பகவான் விஶ்ணு 'நக்ஷத்ரநேமி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

ஶிஶுமாரவர்ணனே ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் 'விஶ்ணுர்ஹ்ருதயம்' பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் 

இதி ஸ்வாத்யாயப்ராஹ்மணே ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் 

ஶ்ரூயதே கூறப்பட்டுள்ளது.

ஸ்வாத்யாய ப்ராஹ்மணத்தில் ஶிஶுமார மண்டலத்தின் வர்ணனையில் பகவான் விஶ்ணுவே (அதன்) இதயம் என்று கூறப்பட்டுள்ளது. 

441. ஓம் நக்ஷத்ரிணே நம:

சந்த்ரரூபேண முழுமதியின் வடிவினராய் இருப்பதால் 

நக்ஷத்ரீ பகவான் 'நக்ஷத்ரீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமதியின் வடிவினராய் இருப்பதால் பகவான் 'நக்ஷத்ரீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நக்ஷத்ராணாம் அஹம் ஶஶி:' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: நக்ஷத்திரங்களில் (நான்) சந்திரன்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார். 

442. ஓம் க்ஷமாய நம:

ஸமஸ்தகார்யேஶு அனைத்துவித செயல்களிலும் 

ஸமர்த்த: திறமை மிக்கவராதலால் 

க்ஷம: பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துவித செயல்களிலும் திறமை மிக்கவராதலால் பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்ஷமத இதி வா பொறுமை மிக்கவராதலால் 

க்ஷம: பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொறுமை மிக்கவராதலால் பகவான் 'க்ஷம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க்ஷமயா ப்ருதிவீ ஸம:' (வால்மீகி இராமாயணம் 1.1.18)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் இராமர்) பொறுமையில் பூமிக்கு இணையானவர்.

இதி வால்மீகிவசனாத் | இவ்வாறு வால்மீகி முனிவர் இராமாயணத்தில் கூறியுள்ளார். 

443. ஓம் க்ஷாமாய நம:

ஸர்வவிகாரேஶு அனைத்து விகாரங்களும் 

க்ஷபிதேஶு அழியும் பொழுது 

ஸ்வாத்மநாவஸ்தி இதி தனது இயற்கையான தன்மையோடு நிலைபெற்றிருப்பதால் 

க்ஷாம: பகவான் 'க்ஷாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் இங்கு படைக்கப்பட்ட அனைத்து விகாரங்களும் அழியும் பொழுது தனது இயற்கையான தன்மையோடு பகவான் நிலைபெற்றிருப்பதால் அவர் 'க்ஷாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க்ஷாயோ ம:' (பாணினி சூத்ரம் 8.2.53)

இதி நிஶ்டாதகாரஸ்ய மகாராதேஶ:  | மேற்கண்ட பாணினி ஸூத்ரத்தின் படி முடிவிலுள்ள 'த'காரம் 'ம' காரமாய் திரிந்துள்ளது. 

444. ஓம் ஸமீஹனாய நம:

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் படைப்பு முதலிய காரியங்களுக்காக 

ஸம்யக் நல்ல (மங்களகரமான) 

ஈஹத இதி ஆசை (அல்லது விருப்பம்) கொள்வதால் 

ஸமீஹன: பகவான் 'ஸமீஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய நற்காரியங்களுக்காக ('நான் பலவாறாக படைப்பேன்' என்பது போன்ற) மங்களகரமான ஆசை (விருப்பம்) கொள்கிறார். எனவே அவர் 'ஸமீஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருஶ்ட்யாத்யர்த்தம் = ஸ்ருஶ்டி + ஆதி + அர்த்தம். ஸம்யக் (நல்ல, மங்களகரமான) + ஈஹத (ஆசை) = ஸமீஹன

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!