சனி, மே 20, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 220

73. ஸ்த்வய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |

பூர்ண: பூராயிதா புண்ய: புண்யகீர்த்திரனாமய: || 

இந்த எழுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

679. ஸ்த்வய:, 680. ஸ்தவப்ரிய:, 681. ஸ்தோத்ரம், 682. ஸ்துதி:, 683. ஸ்தோதா, 684. ரணப்ரிய: |

685. பூர்ண:, 686. பூராயிதா, 687. புண்ய:, 688. புண்யகீர்த்தி:, 689. அனாமய: ||

679. ஸ்தவ்யாய நம:

ஸர்வை: அனைவராலும் 

ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் 

ந ஸ்தோதா கஸ்யசித் தான் ஒருவரையும் (ஒருபொழுதும்) துதிப்பதில்லை 

இதி ஸ்தவ்ய: எனவே பகவான் 'ஸ்தவ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் அனைவராலும் துதிக்கப்படுகிறார். அனைவரைக்காட்டிலும் சிறந்தவர் ஆதலால் அவருக்கு பிறரைத் துதிக்கவேண்டிய அவசியம்  இல்லை. எனவே, அவர் 'ஸ்தவ்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

680. ஸ்தவப்ரியாய நம:

அத ஏவ மேற்கூறிய விளக்கத்தினாலேயே 

ஸ்தவப்ரிய: பகவான் 'ஸ்தவப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அனைவரும் துதிக்கின்றனர். எனவே அவர் 'ஸ்தவப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

681. ஸ்தோத்ராய நம:

யேன ஸ்தூயதே எதனால் துதிக்கின்றோமோ 

தத் ஸ்தோத்ரம் அது 'ஸ்தோத்ரம்' என்று அழைக்கப்படும் 

குண ஸங்கீர்த்தனாத்மகம் (பகவானின்) திருக்குணங்களைப் போற்றும் 

தத்தரிரேவேதி (தத் ஹரிர் ஏவேதி) அதுவும் (அந்தத் துதியும்) பகவான் ஹரியே. எனவே, அவர் 'ஸ்தோத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவானின் திருக்குணங்களைப் போற்றும் துதியே ஸ்தோத்ரம் என்று அழைக்கப்படும். அந்த துதியும் பகவான் ஹரியே அன்றி வேறில்லை. எனவே, அவர் 'ஸ்தோத்ரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானும் அவரது குணங்களும் வேறில்லை. அவ்வாறே, அந்த குணங்களைப் போற்றும் ஸ்தோத்ரமும் அவரின்றி வேறில்லை. 

682. ஸ்துதயே நம:

ஸ்துதி: 'ஸ்துதி' என்றால் 

ஸ்தவனக்ரிய: துதிக்கும் செயல். மேற்கூறியது போல, துதிக்கும் செயலும் பகவான் ஹரியே. எனவே அவர் 'ஸ்துதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.    

துதிக்கும் செயல் ஸ்துதி என்று அழைக்கப்படும். மேற்கூறியது போல, துதிக்கும் செயலும் பகவான் ஹரியே. எனவே அவர் 'ஸ்துதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

683. ஸ்தோத்ரே நம:

ஸ்தோதா துதிப்பவரும் 

அபி ஸ ஏவ அந்த பகவானே. எனவே அவர் 'ஸ்தோதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரஹ்ம பாவனையில்) அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கும் பரப்ரஹ்மமான பகவானே துதிப்பவராகவும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸ்தோதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

679வது திருநாமத்தில் பிறரைத் துதிக்காதவர் என்று கூறிவிட்டு, இங்கு ஸ்தோதா என்றும் கூறுகிறோமே என்ற கேள்வி எழலாம். அங்கு பகவான் தனக்காக ஒன்று வேண்டி பிறரைத் துதிப்பதில்லை என்று பொருள் கொள்ள  வேண்டும். இங்கோ, அனைத்தும் ப்ரஹ்ம மயம். துதியும் அவரே, துதிக்கும் செயலும் அவரே, துதிக்கப்படுபவரும் அவரே, துதிப்பவரும் அவரே. அனைத்தும் பரப்ரஹ்மம் என்று பொருள் கொள்ளவேண்டும். 

684. ரணப்ரியாய நம:

ப்ரியோ விரும்புகிறார் 

ரணோ யஸ்ய யத: போரிட 

பஞ்ச மஹாயுதானி ஐந்து ஆயுதங்களை 

தத்தே ஏந்தி 

ஸததம் எப்பொழுதும் 

லோகரக்ஷணார்தமதோ ப்ரபஞ்சத்தை (அதிலுள்ளோரை) காக்கும் பொருட்டு 

ரணபிரிய: எனவே பகவான் 'ரணபிரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (ஸுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, கௌமோதகம் என்னும் கதை, நந்தகம் என்னும் வாள் மற்றும் ஸார்ங்கம் என்னும் வில் ஆகிய) ஐந்து ஆயுதங்களைத் தாங்கி, எப்பொழுதும் ப்ரபஞ்சத்தைக் காக்கும் பொருட்டு (தீயவர்களோடு) போரிட விரும்புகிறார். எனவே அவர் 'ரணபிரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

685. பூர்ணாய நம:

ஸகலை: அனைத்து 

காமை: ஆசைகளும் 

ஸகலாபி: அனைத்து 

ஶக்திபிஸ்ச வல்லமைகளும் 

ஸம்பன்ன நிறைவாய் உடையவர் 

இதி பூர்ண: எனவே பகவான் 'பூர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஆசைகளும் நிறைவேறப்பெற்றவர். அனைத்து வல்லமைகளும் நிறைவாய் உடையவர். எனவே அவர் 'பூர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

686. பூரயித்ரே நம:

ந கேவலம் பூர்ண ஏவ அவர் மட்டும் முழுமையானவராய் இருப்பதன்றி 

பூரயிதா பகவான் 'பூரயிதா' என்று அழைக்கப்படுகிறார் 

ஸர்வைஶாம் அனைவருக்கும் 

ஸம்பத்பி: வளங்களை அளித்து (அவர்களையும் பூரணமாக்குகிறார்).

பகவான் தானும் அனைத்து வகையிலும் முழுமை பெற்றவர். அனைவருக்கும் அவரவரது கர்மங்களுக்கு ஏற்ப வளங்களை அளித்து அவர்களையும் முழுமை பெற வைக்கிறார். எனவே அவர் 'பூரயிதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

687. புண்யாய நம:

ஸ்ம்ருதிமாத்ரேண தன்னை நினைத்த மாத்திரத்தில் 

கல்மஶாணி பாபங்களைப் 

க்ஷயதீதி அழிக்கிறார் (போக்குகிறார்) 

புண்ய: எனவே பகவான் 'புண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னை நினைத்த மாத்திரத்தில் (அவ்வாறு எண்ணுவோரின்) பாபங்களைப் அழிக்கிறார் (போக்குகிறார்). எனவே பகவான் 'புண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

688. புண்யகீர்த்தயே நம:

புண்யா புண்ணியத்தைத் தரவல்ல 

கீர்த்திரஸ்ய யத: புகழை உடையவர் எவரோ 

புண்யமாவஹத்யஸ்ய புண்ணியத்தை அளிக்கிறது (பாவங்களை அழிக்கிறது) 

கீர்த்திர்ந்ருணாமிதி அவரது புகழைப் பாடுவோருக்கு 

புண்யகீர்த்தி: பகவான் 'புண்யகீர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் புகழ், அதைப் பாடுவோரின் பாவங்களை அழித்து புண்ணியத்தை அளிக்கவல்லது. அத்தகைய புண்ணியத்தை அளிக்கவல்ல புகழை (கீர்த்தியை) உடையவராதலால் பகவான் 'புண்யகீர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

689. அநாமயாய நம:

ஆந்தரைர் உள் 

பாஹ்யைர் வெளி 

வ்யாதிபி: நோய்கள் 

கர்மஜைர் கர்மத்தினால் உண்டாகும் 

ந பீட்யத இதி பீடிக்கப்படுவதில்லை 

அநாமய: எனவே பகவான் 'அநாமய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கர்மத்தினால் உண்டாகும் (தலைவலி, ஜுரம் முதலிய) வெளி நோய்களாலும், (காமம், க்ரோதம் போன்ற) உள் நோய்களாலும் பகவான் பீடிக்கப்படுவதில்லை. எனவே அவர் 'அநாமய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீக்ருஶ்ணார்ப்பணம் !!!