ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ஸ்லோகமும் அதிலுள்ள திருநாமங்களும் அவற்றின் பொருளும்.
2. பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய: புருஶ: ஸாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||
10. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி: |
13. அவ்யய: 14. புருஶ: 15. ஸாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர: ||
2. பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய: புருஶ: ஸாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||
10. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி: |
13. அவ்யய: 14. புருஶ: 15. ஸாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர: ||
10. ஓம் பூதாத்மனே நம:
பூத ஆத்மா யஸ்ய பூதாத்மா கர்மதாராயோ வா
ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர் போன்ற திருநாமங்களைக் கூறும்பொழுது அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவரோ என்ற ஐயத்தை தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால் பீஷ்மாச்சார்யார்) போக்குகிறார். பகவான் ஸ்ரீ விஶ்ணு தூய்மையானவர், அனைவருக்கும் உள்ளுறையும் ஆத்மாவானவர். அவர் படைப்பது முதலான அனைத்து செயல்களையும் தம் கடமையாகக் கருதிச் செய்கிறார். எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘பூதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
11. ஓம் பரமாத்மனே நம:
பரமஸ்சாஸாவாத்மா சேதி பரமாத்மா கார்ய காரண விலக்ஷணோ நித்ய சுத்த முக்த ஸ்வபாவ:
அனைத்திற்கும் மேம்பட்ட ஆத்மாவாக இருப்பதனால் பகவான் 'பரமாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தூய்மையாகவும், அறிவுடையவராகவும், பற்றுதலின்றியும் இருப்பதை தமக்கு இயற்கையாக உடையவர்.
12. ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
முக்தானாம் பரமா ப்ரக்ருஷ்டா கதிர்கந்த்வ்யா தேவதா புனராவ்ருத்த்ய (அ)ஸம்பவாத்தத்கதஸ்யேதி முக்தானாம் பரமா கதி:
எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலானஇலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
13. ஓம் அவ்யயாய நம:
ந வ்யேதி நாஸ்ய வ்யயோ விநாஶோ விகாரோ வா வித்யத இதி அவ்யய:
பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் அவர் 'அவ்யய:' (அழிவற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
14. ஓம் புருஶாய நம:
'புருஶ:' என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை "புனருக்தி" தோஷமாக கருத இயலாது.
புரம் ஶரீரம் தஸ்மின் ஶேதே புருஶ:
பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் ஆஸீத் புரா பூர்வமேவேதி விக்ரஹம் க்ருத்வா வ்யுத்பாதித: புருஶ:
அல்லது, அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு, புரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் 'புருஶ' என்ற சொல் கிடைக்கும். இதன் பொருள், அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதவா புருஶு பூரிஶு உத்கர்ஶஶாலிஶு ஸத்வேஶு ஸீததீதி புருஶ:
அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டு, பல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புரூனி ஃபலானி ஸனோதி ததாதீதி வா புருஶ:
புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டு, கேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புரூனி புவனானி ஸம்ஹாரஸமயே ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா
புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டு, அழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் "புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பூர்ணத்வாத் பூரணாத்வா ஸதனாத்வா புருஶ:
தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் பகவான்"புருஶ:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
15. ஓம் ஸாக்ஷிணே நம:
ஸாஷாத் அவ்யவதானேன ஸ்வரூப போதேன ஈக்ஷதே பஶ்யதி ஸர்வமிதி ஸாக்ஷி
வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயே) அனைத்தையும் (அனைவரையும்) உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்) பகவான் "ஸாக்ஷி" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
16. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:
க்ஷேத்ரம் சரீரம் ஜானாதீதி க்ஷேத்ரஜ்ஞ்ய
இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் "க்ஷேத்ரஜ்ஞ" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
17. ஓம் அக்ஷராய நம:
ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷர: பரமாத்மா
எவருக்கு, 'க்ஷரம்' அதாவது அழிவு (அல்லது தேய்வு) இல்லையோ, அந்த பரமாத்மா "அக்ஷர:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.