செவ்வாய், நவம்பர் 16, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 197

50. ஸ்வாபனஸ்ஸ்வவஶோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் |

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேஶ்வர: ||

இந்த ஐம்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

465. ஸ்வாபன:, 466. ஸ்வவஶ:, 467. வ்யாபீ, 468. நைகாத்மா, 469. நைககர்மக்ருத் |

470. வத்ஸர:, 471. வத்ஸல:, 472. வத்ஸீ, 473. ரத்னகர்ப்ப:, 474. தனேஶ்வர: ||

465. ஓம் ஸ்வாபனாய நம:

ப்ராணின: அனைத்து உயிரினங்களையும் 

ஸ்வாபயன் கனவில் உழல வைக்கிறார் 

ஆத்மஸம்போதி ஆத்மாவைப் பற்றிய அறிவிலிருந்து (ஆத்மஞானத்திலிருந்து) அவைகளை 

விதுரான் விலக்கி வைக்கிறார் 

மாயயா குர்வன் மாயையின் மூலமாக 

ஸ்வாபன: எனவே பகவான் 'ஸ்வாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மாயையின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் ஆத்மஞானத்திலிருந்து விலக்கி வைத்து கனவினில் (கனவைப் போன்ற இந்த பிறவிப்பெருங்கடலில்) உழலவைக்கிறார். எனவே அவர் 'ஸ்வாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

466. ஓம் ஸ்வவஶாய நம:

ஸ்வதந்த்ர: இந்த சுதந்திரமாக இருக்கிறார் 

ஸ்வவஶ: பகவான் 'ஸ்வவஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்து 

ஸ்திதி காத்து 

லயஹேதுத்வாத் அழித்தல் ஆகியவற்றிற்கு காரணமாய் இருப்பதால்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குக் காரணமாய் இருக்கிறார். எனவே அவர் சுதந்திரமானவர் (அவருக்கு எவரது உதவியும் தேவையில்லை). எனவே அவர் 'ஸ்வவஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வவஶ: என்றால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று பொருள். அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் பகவான் சுதந்திரமானவர். தனக்கு ஒரு காரணமற்றவர். எனவே, அவர் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் (ஸ்வவஶ:). 

467. ஓம் வ்யாபினே நம:

ஆகாஶவத் ஆகாயத்தைப் போன்று 

ஸர்வகதத்வாத் அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிப்பதால் 

வ்யாபீ பகவான் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆகாயம் எவ்வாறு இந்த உலகத்தை சூழ்ந்து வ்யாபிக்கிறதோ, அவ்வாறே பகவான் (அந்த ஆகாயம் உட்பட) அனைத்தையும் பரந்து, சூழ்ந்து வ்யாபிக்கிறார். எனவே, அவர் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஆகாஶவத்ஸர்வகதஸ்ச நித்ய:'

(அந்தப் பரப்ரஹ்மமானது) ஆகாயத்தைப் போன்று வ்யாபிக்கிறது, என்றும் உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதால் 

ஸர்வகார்யனாம் அனைத்து காரியங்களையும் 

வ்யாபனாத்வா வ்யாபிப்பதால் 

வ்யாபீ பகவான் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மூலகாரணமாய் இருப்பதன் மூலம் பகவான் (காரியங்களாக) அனைத்தையும் வ்யாபிக்கிறார். எனவே அவர் 'வ்யாபீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

468. ஓம் நைகாத்மனே நம:

ஜகதுத்பத்யாதிஶு இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான செயல்களை ஆற்றும்பொழுது 

ஆவீர்பூத தோன்றி 

நிமித்தஶக்திபிர் குறிப்பிட்ட சக்திகளுடன் 

விபூதிபிர் தனது அதிசய சக்தியால் உருவங்களை தரித்து 

அநேகதா பற்பல 

திஶ்டன் விளங்குவதால் 

நைகாத்மா பகவான் 'நைகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் ஆகிய செயல்களை ஆற்றும்பொழுது, அந்தந்த காரியங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சக்திகளுடன் பற்பல உருவங்களை தமது அதிசய சக்தியால் தரிக்கிறார். எனவே, அவர் 'நைகாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகாத்மா என்றால் ந+ஏக+ஆத்மா, அதாவது பற்பல ஆத்மாக்கள் என்று பொருள்படும். பகவானே இவ்வாறு பற்பல ஆத்மாக்களாக உருவம் தரிக்கிறார். 

469. ஓம் நைககர்மக்ருதே நம:

ஜகதுத்பத்தி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் 

ஸம்பத்தி பாதுகாத்து வளர்த்தல் 

விபத்தி ஸம்ஹாரம் செய்தல் 

ப்ரப்ருதே முதலான பற்பல 

கர்மாணி செயல்களை 

கரோதீதி செய்வதால் 

நைககர்மக்ருத் பகவான் 'நைககர்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்து வளர்த்தல், (தகுந்த சமயத்தில்) அழித்தல் ஆகிய பற்பல செயல்களை செய்கிறார். எனவே அவர் 'நைககர்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைககர்மக்ருத் என்ற சொல் ந+ஏக+கர்ம+க்ருத் என்று பிரிந்து, பற்பல செயல்களை செய்பவர் என்று பொருள் தரும். 

470. ஓம் வத்ஸராய நம:

வஸதி வசிக்கின்றன (இருக்கின்றன) 

அத்ர இங்கு (காணப்படும்) 

அகிலமிதி அனைத்து உலகங்களும் (ப்ரபஞ்சம்) 

வத்ஸர: எனவே பகவான் 'வத்ஸர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு காணப்படும் ப்ரபஞ்சம் அனைத்தும் அவருக்குள்ளே வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே பகவான் 'வத்ஸர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

471. ஓம் வத்ஸலாய நம:

பக்த தனது அடியவர்களிடம் 

ஸ்னேஹித்வாத் அளவுகடந்த அன்போடு இருக்கிறார் 

வத்ஸல: எனவே பகவான் 'வத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஒரு தாய்ப் பசு எவ்வாறு தன் கன்றிடம் அன்பு காட்டுமோ அவ்வாறே) பகவான் தனது அடியவர்களிடம் அளவுகடந்த அன்போடு இருக்கிறார். எனவே அவர் 'வத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாய்ப் பசுவின் அன்பு: பசுவானது தூய்மையை விரும்பும் பிராணியாகும். புல்லில் அசுத்தம் இருப்பின் பசியிருந்தாலும் அந்த புல்லை பசுவானது உண்ணாது. ஆனால், அதே பசுவானது தனது கன்றுக்குட்டி ஒரு அசுத்தத்தில் வீழ்ந்தால் தனது நாவால் நக்கி அதை தூய்மையாக்கும். அவ்வாறே, பகவானும் சுயநலமின்றி, இந்த அசுத்தமான ஸம்ஸாரத்தில் மீண்டும் மீண்டும் அவதரித்து நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.

'வத்ஸாம்ஸாப்யாம் காமபலே' (பாணினி ஸூத்ரம் 5.2.98)

இதி லச்ப்ரத்யய: | இந்த பாணினி ஸூத்ரத்தின் படி 'வத்ஸ' என்ற சொல்லிற்கு 'ல' எனும் விகுதி சேர்ந்து 'வத்ஸல' என்ற வார்த்தை உண்டாகிறது.

472. ஓம் வத்ஸினே நம:

வத்ஸானாம் கன்றுகளை 

பாலனாத் மேய்ப்பவராதலால் 

வத்ஸீ பகவான் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கன்றுகளை மேய்த்துப் பாதுகாப்பவராதலால் பகவான் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஜகத்பிதுஸ்தஸ்ய இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையானபடியால் 

வத்ஸபூதா: ப்ரஜா அனைத்து உயிரினங்களும் அவரின் பிள்ளைகளாவோம் 

இதி வா வத்ஸீ பகவான் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே இந்தப் ப்ரபஞ்சத்தின் தந்தையாவார். அனைத்து உயிரினங்களும் அவரது பிள்ளைகள். எனவே அவர் 'வத்ஸீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வத்ஸ என்ற சொல்லிற்கு கன்றுகள், குழந்தைகள் ஆகிய பொருள்கள் உண்டு. இவை இரண்டைக் கொண்டும் ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார். 

473. ஓம் ரத்னகர்ப்பாய நம:

ரத்னானி வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் 

கர்பபூதாநி அஸ்யேதி தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள 

ஸமுத்ரோ கடல் (கடலின் வடிவாக இருப்பதால்) 

ரத்னகர்ப்ப: பகவான் 'ரத்னகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வைரம் முதலான அனைத்து வகை விலைமதிப்பில்லா கற்களையும் தனது கர்ப்பத்தில் (தன்னுள்ளே) தாங்கியுள்ள கடலின் வடிவாக இருப்பதால் பகவான் 'ரத்னகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

474. ஓம் தனேஶ்வராய நம:

தனானாம் அனைத்து செல்வங்களுக்கும் 

ஈஶ்வர: உரிமையாளராக (ஸ்வாமியாக) இருப்பதால் 

தனேஶ்வர: பகவான் 'தனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து செல்வங்களுக்கும் உரிமையாளர் பகவானே. எனவே அவர் 'தனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலில் காணப்படும் வைரம் முதலானவை மட்டுமல்ல. அனைத்து செல்வங்களும் பகவானுடையதுதான்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

புதன், நவம்பர் 03, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 196

49. ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஶ: ஸுகத: ஸுஹ்ருத் |

மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: ||

இந்தநாற்பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

455. ஸுவ்ரத:, 456. ஸுமுக:, 457. ஸூக்ஷ்ம:, 458. ஸுகோஶ:, 459. ஸுகத:, 460. ஸுஹ்ருத் |

461. மனோஹர:, 462. ஜிதக்ரோத:, 463. வீரபாஹு:, 464. விதாரண: ||

455. ஓம் ஸுவ்ரதாய நம:

ஶோபனம் மங்களகரமான 

வ்ரதமஸ்யேதி விரதத்தை உடையவராதலால் 

ஸுவ்ரத: பகவான் 'ஸுவ்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அடியவர்களைக் காப்பதான) மங்களகரமான விரதத்தை உடையவராதலால் பகவான் 'ஸுவ்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மிதி ச யாசதே |

அபயம் ஸர்வபூதேப்யோ தாதாம்யேதத் வ்ரதம் மம’ || (வால்மீகி இராமாயணம் 6.18.33)

வால்மீகி இராமாயணம் யுத்த காண்டத்தில், விபீஶண சரணாகதியின் பொழுது பகவான் ஸ்ரீராமர் கூறியது: ஒருமுறை 'நான் உன்னுடையவன்' என்று எவரொருவர் என்னை சரணடைகின்றனரோ அவர்களை நான் அனைவரிடமிருந்தும் (அனைத்து துன்பங்களிலிருந்தும்) காப்பேன். இதுவே எனது நோன்பாகும் (விரதமாகும்). 

456. ஓம் ஸுமுகாய நம:

ஶோபனம் மிக அழகியதான 

முகமஸ்யேதி திருமுகத்தை உடையவராதலால் 

ஸுமுக: பகவான் 'ஸுமுக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் அழகிய திருமுகத்தை உடையவராதலால் பகவான் 'ஸுமுக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரஸன்னவதனம் சாருபத்மபத்ராயதேக்ஷணம்' (ஸ்ரீவிஷ்ணு புராணம் 6.7.80)

ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான்) மலர்ந்த முகமும், அழகிய தாமரை இதழ்களைப் போன்ற திருக்கண்களும் (உடையவர்). 

வனவாஸஸுமுகத்வாத் வா வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்ததால் 

தாஶரதீ ராம: தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர் 

ஸுமுக: 'ஸுமுக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வனவாசம் செய்யும்படி கட்டளையிட்ட பொழுதும் கூட மிகவும் மலர்ந்த முகத்துடன் இருந்த தசரதனின் புதல்வரான பகவான் ஸ்ரீராமர் 'ஸுமுக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ்வபிதுர்வசனம் ஸ்ரீமானபிஶேகாத் பரம் ப்ரியம் |

மனஸா பூர்வமாஸாத்ய வாசா ப்ரதிக்ருஹீதவான் ||'  (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீராமர் தன்னுடைய தந்தையின் (வனவாசத்திற்கு செல்லும்படியான) கட்டளையை, தன்னுடைய பட்டாபிஷேக செய்தியைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு மனதில் ஏற்றுக்கொண்டார். பின்னர் வாக்கிலும் அவ்வாறே கூறினார்.

'இமானி து மஹாரண்யே விஹ்ருத்ய நவ பஞ்ச ச |

வர்ஶாணி பரமப்ரீத: ஸ்தாஸ்யாமி வசனே தவ ||' (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.24.17)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமர் கூறுகிறார்: இந்த பதினான்கு ஆண்டுகளை நான் மகிழ்ச்சியுடன் வனத்தில் கழித்துவிட்டு தங்களின் கட்டளையை நிறைவேற்றுவேன்.

'ந வனம் கந்துகாமஸ்ய த்யஜதஸ்ச வஸுந்தராம் |

ஸர்வலோகாதிகஸ்யேவ மனோ ராமஸ்ய விவ்யதே || (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 2.19.33)

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது: வனத்திற்கு செல்வதோ, இராஜ்யத்தை இழப்பதோ பகவான் ஸ்ரீராமரின் மனதை சற்றும் சலனப்படுத்தவில்லை. அவர், இந்த உலகின் இன்ப, துன்பங்களை கடந்த ஒரு மஹாஞானியின் நிலையில் இருந்தார்.

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (கம்பராமாயணம்)

இதி ராமாயணே | இவ்வாறு ஸ்ரீமத் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஸர்வ அனைத்து 

வித்யோபதேஶேன வா (வேதம் முதலான) வித்யைகளையும் உபதேசிப்பவராதலால் 

ஸுமுக: பகவான் 'ஸுமுக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைவருக்கும் பரம குருவாவார். வேதம் முதலான அனைத்து  வித்தைகளையும் உபதேசிப்பவராதலால் பகவான் 'ஸுமுக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யோ ப்ரஹ்மாம் விததாதி பூர்வம்

யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை |

ஹ தேவமாத்மபுத்திப்ரகாஶம்

முமுக்ஷுர்வை ரணமஹம் ப்ரபத்யே || (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதலில் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தாரோ (அளித்தாரோ), எவர் நமது ஆத்மஞானத்தை ஒளியூட்ட வல்லவரோ, அந்த தெய்வத்தை முக்தியை விரும்பும் நான் சரணடைகிறேன்.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

457. ஓம் ஸூக்ஷ்மாய நம:

ஶப்தாதி 'ஒலி' முதலிய 

ஸ்தூலகாரண ஸ்தூல (பருப்பொருள் உருவாவதற்கான) காரணங்கள் 

ரஹிதத்வாத் அற்றவராக இருப்பதால்(லும்) 

ஶப்தாதயோ ஒலி முதலான மூல தத்துவங்களே 

ஹ்யாகாஶாதீனாம் ஆகாயம் தொடங்கி 

உத்தரோத்தர ஒன்றின்பின் ஒன்றாக (காற்று, தீ, நீர், பூமி) 

ஸ்தூலத்வ காரணானி பஞ்சபூதங்களாகிய பருப்பொருட்கள் உருவாக காரணமாக இருப்பதால், 

தத்பாவாத் அவற்றின் தாக்கங்கள் அற்றவராக இருப்பதால் 

ஸூக்ஷ்ம: பகவான் 'ஸூக்ஷ்ம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒலியிலிருந்தே ஆகாயம் பிறக்கிறது. ஆகாயத்திலிருந்து பஞ்சபூதங்களும் (அவற்றிலிருந்து அனைத்து) பருப்பொருட்களும் உருவாகின்றன. ஒலியே அனைத்து பருப்பொருட்களும் உருவாகக் காரணமாகும். அந்த ஒலி முதலான மூல தத்துவங்களின் தாக்கம் இல்லாதவராதலால் பகவான் 'ஸூக்ஷ்ம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பருப்பொருட்கள் (ஸ்தூலம்) உருவாவதற்கான காரணங்களின் தாக்கம் அற்றவர் பகவான். எனவே அவர் என்றுமே ஸூக்ஷ்மமானவர்.

'ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்' (முண்டக உபநிஶத் 1.1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மம்) அனைத்தையும் வ்யாபிப்பது, மிகவும் நுண்ணியமானது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

458. ஓம் ஸுகோஶாய நம:

ஶோபனோ மங்களகரமான 

கோஶோ ஒலி (அல்லது முழக்கத்தை) உடையவராதலால் 

வேதாத்மகோSஸ்யேதி நான்மறைகளின் வடிவான 

ஸுகோஶ: பகவான் 'ஸுகோஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்மறைகளின் வடிவான மங்களகரமான ஒலியை (முழக்கத்தை) உடையவராதலால் பகவான் 'ஸுகோஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மேககம்பீர இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான 

கோஶத்வாத் குரலை உடையவராதலால் 

ஸுகோஶ: பகவான் 'ஸுகோஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இடிமுழக்கத்தைப் போன்ற கம்பீரமான குரலை உடையவராதலால் பகவான் 'ஸுகோஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

459. ஓம் ஸுகதாய நம:

ஸத்வ்ருத்தானாம் நன்னெறியை வழுவாது நடப்போருக்கு 

ஸுகம் ததாதி இன்பத்தை அளிப்பதனால் 

ஸுகத: பகவான் 'ஸுகத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நன்னெறியை வழுவாது நடப்போருக்கு இன்பத்தை அளிப்பதனால் பகவான் 'ஸுகத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அஸத்வ்ருத்தானாம் நன்னெறியை மீறுவோருக்கு (அதை பிழைப்போருக்கு) 

ஸுகம் இன்பத்தை 

த்யதி கண்டயதீதி 'த்யதி' அதாவது அழிக்கிறார் 

ஸுகத: எனவே, பகவான் 'ஸுகத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நன்னெறியை மீறுவோரின் (அதை பிழைப்போருக்கு) இன்பத்தை அழிக்கிறார். எனவே, பகவான் 'ஸுகத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்லாதன், விபீஶணன் ஆகியோருக்கு இன்பத்தை அளிக்கிறார். ஹிரண்யகசிபு, இராவணன் ஆகியோரின் இன்பத்தை அழிக்கிறார்.

460. ஓம் ஸுஹ்ருதாய நம:

ப்ரத்யுபகார கைமாறு 

நிரபேக்ஷதய எதிர்பாராது 

உபகாரித்வாத் தான் அனைவருக்கும் உதவி புரிகிறார் 

ஸுஹ்ருத் எனவே, பகவான் 'ஸுஹ்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கைமாறு எதிர்பாராது அனைவருக்கும் உதவி புரிகிறார். எனவே, பகவான் 'ஸுஹ்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

461. ஓம் மனோஹராய நம:

நிரதிஶய முழுமையான (அளவிடமுடியாத) 

ஆனந்தரூபத்வாத் இன்பமே வடிவானவராய் 

மனோ ஹரதீதி காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால் 

மனோஹர: பகவான் 'மனோஹர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முழுமையான, அளவிடமுடியாத ஆனந்த வடிவினராய் காண்பவரின் மனதை கவர்பவராக இருப்பதால் பகவான் 'மனோஹர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி' (சாந்தோக்ய உபநிஶத் 3.23.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (என்றும் உள்ளதான அந்த) பரப்ரஹ்மத்திடம் காணப்படும் இன்பமே இன்பமாகும். மற்ற (அழியக்கூடிய, மாறக்கூடிய) இன்பங்கள் அனைத்தும் கீழானதாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

462. ஓம் ஜிதக்ரோதாய நம:

ஜித: வெற்றி கொண்டுள்ளார் 

க்ரோதோ கோபத்தை 

யேன எவரொருவர் 

ஸ ஜிதக்ரோத: அவர் (பகவான்) 'ஜிதக்ரோத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்; 

வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை 

ஸ்தாபனார்த்தம் நிலைநிறுத்துவதற்காகவே 

ஸுராரீன் ஹந்தி (தேவர்களின் பகைவர்களான) அஸுரர்களை அழிக்கிறார் 

ந து கோபவஶாதிதி கோபத்தின் வசப்பட்டு அல்ல.

பகவான் கோபத்தை வென்றவர். தேவர்களின் பகைவர்களான அஸுரர்களைக் கூட அவர் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வரைமுறைகளை நிலைநிறுத்துவதற்காகவே அழிக்கிறாரே ஒழிய கோபாவேசப்பட்டு அல்ல. எனவே, பகவான் 'ஜிதக்ரோத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

463. ஓம் வீரபாஹவே நம:

த்ரிதஶ முப்பத்து முக்கோடி தேவர்களின் 

ஶத்ரூன் பகைவர்களை (அஸுரர்களை) நிக்னன் அழித்து 

வேதமர்யாதா வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை 

ஸ்தாபயன் நிலைநிறுத்தவல்ல 

விக்ரமஶாலி  சக்திபடைத்த (பலம்பொருந்திய) 

பாஹுரஸ்யேதி திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால் 

வீரபாஹு: பகவான் 'வீரபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் பகைவர்களை (அஸுரர்களை) அழித்து வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நிலைநிறுத்தவல்ல சக்திபடைத்த (பலம்பொருந்திய) திருக்கைகளை (அல்லது திருத்தோள்களை) உடையவராதலால் பகவான் 'வீரபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

464. ஓம் விதாரணாய நம:

அதார்மிகான் அறத்திற்கு புறம்பாக செல்வோரை 

விதாரயாதி வெட்டித் துண்டாடுவதால் 

இதி விதாரண: பகவான் 'விதாரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்திற்கு புறம்பாக செல்வோரை வெட்டித் துண்டாடுவதால் பகவான் 'விதாரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த மூன்று திருநாமங்களையும் ஒரு கோர்வையாக நாம் புரிந்து கொள்ளலாம். பகவான் அறத்திற்குப் புறம்பானோரை (அஸுரர்களை) அழிக்கிறார் (விதாரண:). அவரது புஜபலத்தைக் கொண்டு அழிக்கிறார் (வீரபாஹு:). அதையும் அவர் கோபம் மேலிடச் செய்வதில்லை. வேதங்களின் விதிமுறைகளை நிலைநிறுத்தவே செய்கிறார் (ஜிதக்ரோத:).

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!