வெள்ளி, டிசம்பர் 17, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 199

52. கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேஶ்வர: |

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஶோ தேவப்ருத்குரு: ||

இந்த ஐம்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

486. கபஸ்திநேமி:, 487. ஸத்வஸ்த:, 488. ஸிம்ஹ:, 489. பூதமஹேஶ்வர: |

490. ஆதிதேவ:, 491. மஹாதேவ:, 492. தேவேஶ:, 493. தேவப்ருத்குரு: ||

486. ஓம் கபஸ்திநேமயே நம:

கபஸ்திசக்ரஸ்ய மத்யே 'கபஸ்தி' என்றழைக்கப்படும் சூரியமண்டலத்தின் நடுவே 

ஸூர்யாத்மனா கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக (அந்த கதிரவனே உருவாக) 

ஸ்தித இதி வீற்றிருப்பதால் 

கபஸ்திநேமி: பகவான் 'கபஸ்திநேமி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியமண்டலத்தின் நடுவே அந்த கதிரவனாக (கதிரவனின் உள்ளுறை ஆத்மாவாக) வீற்றிருப்பதால் பகவான் 'கபஸ்திநேமி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சூரியனை சூரியநாராயணராக வழிபடுவது நம் வழக்கத்தில் உள்ளது.

487. ஓம் ஸத்வஸ்தாய நம:

ஸத்வம் குணம் சத்வ குணம் 

ப்ரகாஶகம் ஒளிமயமான 

ப்ராதான்யேன மேலோங்க 

அதிதிஶ்டதி விளங்குவதால் 

ஸத்வஸ்த: பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளிமயமான சத்வ குணம் மேலோங்க விளங்குவதால் பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

ஸர்வப்ராணிஶு அனைத்து உயிரினங்களுக்குள்ளும் 

திஶ்டதீதி வா (உள்ளுறைந்து) வசிப்பதால் 

ஸத்வஸ்த: பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் (உள்ளுறைந்து) வசிப்பதால் பகவான் 'ஸத்வஸ்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

488. ஓம் ஸிம்ஹாய நம:

விக்ரமஶாலித்வாத் வீரம் பொருந்தியவராதலால் 

ஸிம்ஹவத் (காட்டுக்கு அரசனான) சிங்கத்தைப் போன்று 

ஸிம்ஹ: பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காட்டிற்கு அரசனான சிங்கத்தைப் போன்று வீரம் பொருந்தியவராதலால் பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ந்ருஶப்தலோபேன ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயரில் 'ந்ரு' என்ற சொல் மறைந்து 

'ஸத்யபாமா பாமா' இதிவத்வா சத்யபாமாவை (சத்ய என்பதை விடுத்து) பொதுவாக பாமா என்றழைப்பது போல 

ஸிம்ஹ: பகவான் 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சத்யபாமா என்ற பெயரை, ‘சத்ய’ என்ற சப்தத்தை மறைத்து பொதுவாக பாமா என்று அழைப்பதைப் போல, ‘ந்ருஸிம்ஹ’ என்ற பெயருடைய பகவான் 'ந்ரு' என்ற சப்தம் மறைந்து 'ஸிம்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

489. ஓம் பூதமஹேஶ்வராய நம:

பூதானாம் அனைத்து உயிரினங்களின் 

மஹான் ஒப்புயர்வற்ற 

ஈஶ்வர: இறைவன் (ஆள்பவர்) ஆனபடியால் 

பூதமஹேஶ்வர: பகவான் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே அனைவரின் (அனைத்து உயிரினங்களின்) ஒப்புயர்வற்ற இறைவனாவார். எனவே, அவர் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பூதேன ஸத்யேன 'பூ' என்றால் ஸத்யம் அதாவது என்றும் உள்ளவர் 

ஸ ஏவ பரமோ அவர் ஒருவரே மேலான 

மஹான் ஒப்புயர்வற்ற 

ஈஶ்வர தனிப்பெரும் தெய்வம் 

இதி வா பூதமஹேஶ்வர: எனவே, பகவான் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மையே உருவானவர், என்றும் உள்ளவர். ஒப்புயர்வற்ற தனிப்பெரும் தெய்வம் பகவான் ஒருவரே. எனவே, அவர் 'பூதமஹேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூ ஸத்தாயாம்’. ‘பூ’ என்ற தாதுவிற்கு (வேர்ச்சொல்லிற்கு) 'ஸத்' என்று ஒரு பொருள் உள்ளது. ஸத் என்றால் இருப்பது. எனவேதான் என்றும் மாறாத உண்மையை 'ஸத்யம்' என்று கூறுகிறோம். இதன் அடிப்படையில், என்றும் இருப்பவரான பகவான் ஒருவரே மேலான பரம்பொருள். எனவே, அவரே 'பூதமஹேஶ்வரன்' என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

490. ஓம் ஆதிதேவாய நம:

ஸர்வபூதானி அனைத்து உயிரினங்களுக்கும் 

ஆதீயந்தேனேன மூல காரணமாய் இருப்பதால் 

இதி ஆதி: பகவான் 'ஆதி' என்று அழைக்கப்படுகிறார். 

ஆதிஸ்சாஸௌ இவ்வாறு 'ஆதியாகவும்' 

தேவஸ்ச இதி 'தேவனாகவும்' இருப்பதால் 

ஆதிதேவ: பகவான் 'ஆதிதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மூல காரணமாய் இருக்கிறார். எனவே, அவர் 'ஆதியாவார்'. இவ்வாறு ஆதியாகவும் தேவனாகவும் இருப்பதால் பகவான் 'ஆதிதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

491. ஓம் மஹாதேவாய நம:

ஸர்வான் அனைத்து 

பாவான் பற்றுதல்களையும் 

பரித்யஜ்ய விடுத்து 

ஆத்மஞானயோக தனது ஆத்மஞான யோகமென்னும் 

ஐஶ்வர்யே செல்வத்தால் 

மஹதி தனது பெருமை 

மஹியதே மென்மேலும் வளரப் பெற்றவராதலால் 

தஸ்மாத் உச்யதே அவரை (பகவானை) அழைக்கின்றனர் 

மஹாதேவ: 'மஹாதேவ' என்ற திருநாமத்தால்.

பகவான் அனைத்து பற்றுதல்களையும் விடுத்து தன்னைப் பற்றிய ஆத்மஞானயோகமென்னும் செல்வத்தால் தனது பெருமை மென்மேலும் வளரப் பெற்றவர். எனவே அவரை 'மஹாதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

492. ஓம் தேவேஶாய நம:

ப்ராதான்யேன அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய நிலையில் இருப்பதால் 

தேவானாம் பகவான் அனைத்து தேவர்களுக்கும் 

ஈஶோ தலைவராவார் 

தேவேஶ: எனவே அவர் 'தேவேஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களைக் காட்டிலும் விஞ்சிய (உயர்ந்த) நிலையில் இருப்பதால் பகவான் அனைத்து தேவர்களுக்கும் தலைவராவார். எனவே அவர் 'தேவேஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

493. ஓம் தேவப்ருத்குரவே நம:

தேவான் அனைத்து தேவர்களையும் 

பிபர்தீதி பாதுகாப்பதால் 

தேவப்ருத் ஶக்ர: 'ஶக்ரனான' இந்திரன் 'தேவப்ருத்' என்று அழைக்கப்படுகிறார். 

தஸ்யாபி அந்த இந்திரனையும் 

ஶாஸிதேதி கட்டளையிட்டு வழிநடுத்தவதால் 

தேவப்ருத்குரு: பகவான் 'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களைப் பாதுகாக்கும் இந்திரன் 'தேவப்ருத்' என்று அழைக்கப்படுகிறார். அந்த இந்திரனையும் ஒரு குருவைப்போல கட்டளையிட்டு, வழிநடுத்துவதால் பகவான் 'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானே தேவகுரு ப்ருஹஸ்பதியின் வடிவில் இந்திரனை வழிநடத்துகிறார் என்றும் கொள்ளலாம் 

தேவானாம் தேவர்களைக் பரனாத் தாங்குகிறார் (காக்கிறார்) 

ஸர்வவித்யானாம் அனைத்து வித்தைகளையும் 

நிகரணாத்வா அறிந்துள்ளார் ஆதலால் 

தேவப்ருத்குரு: பகவான் 'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் தேவர்களைக் காக்கிறார் (தேவப்ருத்) . மற்றும் அனைத்து வித்தைகளையும் அறிந்துள்ளார் (குரு). எனவே அவர்  'தேவப்ருத்குரு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிகரணாத் என்றால் விழுங்குதல் குடித்தல் என்று பொருள். இங்கு அனைத்து வித்தைகளையும் கரைத்துக் குடித்தவர் என்று பொருள் கொள்ளலாம்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

ஞாயிறு, டிசம்பர் 12, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 198

51. தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம் |

அவிக்ஞாதா ஸஹஸ்ராம்ஶுர் விதாதா க்ருதலக்ஷண: ||

இந்த ஐம்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

475. தர்மகுப், 476. தர்மக்ருத், 477. தர்மீ, 478. ஸத், 479. அஸத், 480. க்ஷரம், 481. அக்ஷரம் |

482. அவிக்ஞாதா, 483. ஸஹஸ்ராம்ஶு:, 484. விதாதா, 485. க்ருதலக்ஷண: ||

475. ஓம் தர்மகுபே நம:

தர்ம அறத்தை 

கோபயதீதி பரிபாலிக்கிறார் (காக்கிறார்) 

தர்மகுப் எனவே பகவான் 'தர்மகுப்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பரிபாலித்துக் காப்பவராதலால் பகவான் 'தர்மகுப்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே' (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: அறத்தை நிலைநிறுத்த நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

476. ஓம் தர்மக்ருதே நம:

தர்மா(அ)தர்ம விஹீனோபி அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும் 

தர்மமர்யாதாஸ்தாபநார்த்தம் அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு 

தர்மமேவ அறச்செயல்களை மட்டுமே 

கரோதீதி (தான்) செய்கிறார் 

தர்மக்ருத் எனவே, பகவான் 'தர்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், அறம் அல்லாதது (அதர்மம்) ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருப்பினும், அறத்தின் பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டு, அறச்செயல்களை மட்டுமே புரிகிறார் (தான் செய்கிறார்). எனவே, பகவான் 'தர்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

477. ஓம் தர்மினே நம:

தர்மான் அறத்தை 

தாராயதீதி தாங்குவதால் 

தர்மீ பகவான் 'தர்மீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தை தாங்குகிறார். எனவே அவர் 'தர்மீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உதாரணமாக: அறத்தை நிலைநிறுத்துதல், அறவழியில் நடத்தல், அறச்செயல்களையே புரிதல்.

478. ஓம் ஸதே நம:

அவிததம் (என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான 

பரம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான 

ஸத் பகவான் 'ஸத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

(என்றும், எப்பொழுதும், எல்லாக்காலத்தும் மாறாத) உண்மையான, பரப்ரஹ்மமான பகவான் 'ஸத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸதேவ ஸோம்யேதம்' (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ ஸௌம்யா!!! இதுவே (பரப்ரஹ்மமே அனைத்திற்கும்) முதலில் இருந்தது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

479. ஓம் அஸதே நம:

அபரம் ப்ரஹ்ம (காரியத்தின் விளைவாக) இங்கு எல்லாமாய் தோற்றமளிக்கும் 'அபர' ப்ரஹ்மமான பகவான் 

அஸத் 'அஸத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சமாய் தோற்றமளிக்கும் காரிய ப்ரஹ்மமே (பகவானே) 'அஸத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்' (சாந்தோக்ய உபநிஶத் 6.2.4)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த பேதங்கள் (வேற்றுமைகள்) எல்லாம் (ஒரே பொருளைக் குறிக்கும்) வெவ்வேறு பெயர்களே. எனவே, அவை பெயரளவிலேயே என்று உணர்க.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

480. ஓம் க்ஷராய நம:

ஸர்வானி பூதாநி இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும் 

க்ஷரம் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் 'க்ஷரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்குக் காணப்படும் அனைத்து உயிரினங்களும் அழியக்கூடியவை. எனவே, அவ்வாறு தோற்றமளிக்கும் பகவான் 'க்ஷரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

481. ஓம் அக்ஷராய நம:

கூடஸ்த: என்றும் மாறாத பரம்பொருளே 

அக்ஷரம் 'அக்ஷரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

என்றும் மாறாத பரம்பொருளே 'அக்ஷரம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க்ஷர ஸர்வானி பூதாநி கூடஸ்தோSக்ஷர உச்யதே' (ஸ்ரீமத் பகவத்கீதை 15.16)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: க்ஷர புருஶன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே (பரம்பொருளான பகவானே) அக்ஷர (மாற்றமில்லாத, அழிவில்லாத) புருஶன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

ஆச்சார்யாள் 'க்ஷர', 'அக்ஷர' ஆகிய இந்த இரண்டு திருநாமங்களையும் ஒரே வாக்கியமாக பொருளுரைத்திருக்கிறார். இரண்டு திருநாமங்களுக்கும் சேர்த்து இந்த ஸ்ரீமத்பகவத் கீதை வாக்கியத்தை மேற்கோள் காட்டியுள்ளார். இங்கு நான் இதை இரண்டு நாமங்களாகப் பிரித்து அளித்திருக்கிறேன்.

482. ஓம் அவிஞ்ஞாத்ரே நம:

ஆத்மனி ஆத்மாவிற்கு 

கர்த்ருத்வாதி செயல் புரிகிறது போன்ற 

விகல்பவிஞ்ஞானம் அறியாமை 

கல்பிதமிதி கற்பனையாகும் 

தத்வாஸனா (இந்த அறியாமையால்) விளையும் முன்வினையால் ஏற்படும் மனப்பதிவுகள் 

அவகுண்டிதோ திரையிட்டிருக்கும் 

ஜீவோ ஜீவாத்மாவை 

விஞ்ஞாதா என்று அழைக்கின்றனர். 

தத்விலக்ஷணோ (அந்த ஜீவாத்மாவிலிருந்து) வேறுபட்டவரான 

விஶ்ணு: பகவான் ஸ்ரீ மஹாவிஶ்ணு 

அவிஞ்ஞாதா 'அவிஞ்ஞாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஆத்மாவிற்கு செயல்புரிதல் என்றுமே இல்லை. அறியாமையால் அவ்வாறு தமக்கு செயல் (மற்றும் செயல்வினை) இருப்பதாக ஒரு ஜீவாத்மா தவறாக கற்பனை செய்துகொள்கிறார். இதனால் கர்மவினையும், முற்பிறவி கர்மங்களின் வாசனை (மனப்பதிவும்) அந்த ஜீவாத்மாவை (அதன் உண்மையான தன்மையை அறியவொட்டாது) திரையிட்டு மறைக்கிறது. எனவே ஜீவாத்மாவை 'விஞ்ஞாதா' என்று அழைக்கின்றனர். இவ்வாறு அறியாமையோ, கர்மா வாசனையோ இல்லாது, அந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணு 'அவிஞ்ஞாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

483. ஓம் ஸஹஸ்ராம்ஶவே நம:

ஆதித்யாதிகதா கதிரவன் முதலான (ஒளிவீசும் கோள்களின்) 

அம்ஶவோSஸ்யேத்யயமேவ கிரணங்கள் (அம்ஶ) அனைத்தும் பகவானுடையதே 

முக்ய: ஸஹஸ்ராம்ஶு: எனவே பகவான் அவற்றின்  முதன்மையானதான 'ஸஹஸ்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலிய (ஆயிரக்கணக்கான) ஒளிவீசும் கோள்கள் உண்மையில் பகவானின் ஒளியையே பிரதிபலிக்கின்றன. அவற்றின் கிரணங்கள் அனைத்தும் பகவானின் சக்தியேயாகும். எனவே பகவான் 'ஸஹஸ்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.   

ஸஹஸ்ராம்ஶு என்றால் ஆயிரக்கணக்கான கதிர்கள் என்று பொருள். நாம் புறக்கண்களால் காணும் கதிரவன் போன்ற ஒளியை உமிழும் கோள்கள் அனைத்தும் பகவனிடத்திலிருந்தே தமது ஒளியைப் பெறுகின்றன. எனவே, இவற்றின் மூலமான பகவான் ஆயிரக்கணக்கான கதிர்கள் (ஸஹஸ்ராம்ஶு) உடையவராகிறார்.

'யேன ஸூர்யஸ்தபதி தேஜஸேத்த:' (தைத்ரீய ப்ராஹ்மணம் 3.12.79.7)

தைத்ரீய ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது: எவருடைய ஒளியினால் தான் ஒளியூட்டப்பட்டு கதிரவன் சுடர்விடுகிறானோ...

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'யதாதித்யகதம் தேஜ:' (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலகமுழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்று உணர்).

இதி ஸ்ம்ருதேஶ்ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது. 

484. ஓம் விதாத்ரே நம:

விஶேஶேண தனது தனிப்பட்ட சக்தியால் 

ஶேஶ ஆதிசேடன் 

திக்கஜ இந்தப் ப்ரபஞ்சத்தை எட்டு திக்கிலிருந்தும் தாங்கும் எட்டு யானைகள் 

பூதரான் இந்த பூமியை தாங்கும் மலைகள் 

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும் 

தாத்ருண் தாங்கும் (இவற்றை) 

ததாதீதி தாங்குவதால் 

விதாதா பகவான் 'விதாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், பூமியையும் அதிலுள்ள உயிரினங்களையும் சேர்த்து தாங்கும் ஆதிசேடன், எட்டு யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்), மலைகள் ஆகியவற்றை பகவான் தனது தனிப்பட்ட சக்தியால் தாங்குகிறார். எனவே, அவர் 'விதாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

485. ஓம் க்ருதலக்ஷணாய நம:

நித்ய என்றுமுள்ள 

நிஶ்பன்ன முழுமையான 

சைதன்ய அறிவுமயமான ஆன்மா (பரமாத்மா) 

ரூபத்வாத் வடிவினராய் இருப்பதால் 

க்ருதலக்ஷண: பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றுமுள்ள, முழுமையான, அறிவுமயமான ஆன்மாவின் வடிவினராய் (பரமாத்மாவாக) இருப்பதால் அவர் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்ருதானி இயற்றினார் (உருவாக்கினார்) 

லக்ஷணானி ஶாஸ்த்ராணி 'லக்ஷணம்' அதாவது சாத்திரங்களை 

அனேன இதி வா குற்றம் குறைகள் அற்றவையான 

க்ருதலக்ஷண: பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, குற்றம், குறைகள் அற்றதான (லக்ஷணங்கள் என்றழைக்கப்படும்) பற்பல சாத்திரங்களை உருவாக்கியதால் (இயற்றியதால்) பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வேதா ஶாஸ்த்ரானி விஞ்ஞானம் ஏதத் ஸர்வம் ஜனார்தனாத்' (ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமம் 139) 

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது: வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் விஞ்ஞானம் அனைத்தும் பகவான் ஜனார்தனரே (ஜனார்தனராலேயே உருவாக்கப்பட்டவை).

இத்யத்ரைவ வக்ஷ்யதி | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (ஃபல ஶ்ருதியில்) கூறப்பட்டுள்ளது. 

ஸஜாதீய தம்மை போன்றவற்றிலிருந்தும் 

விஜாதீய தம்மை அல்லாத மற்ற பொருட்களிடமிருந்தும் 

வ்யவச்சேதகம் லக்ஷணம் 'லக்ஷணங்கள்' அதாவது (அந்தந்த பொருட்களை) தனித்துக் காட்டும் வேறுபாடுகளை     

ஸர்வபாவானாம் அனைத்து பொருட்களிலும் 

க்ருதமனேனேதி வா உருவாக்கியதால் 

க்ருதலக்ஷண: பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பொருட்களும் தத்தம் வகுப்பிலிருந்தும், மற்ற வகுப்பிலிருந்தும் வேறுபட்டு தோன்றுகின்றன. இந்த லக்ஷணங்களை (வேறுபாடுகளை) உருவாக்கியதால் பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஜாதீய வேறுபாடுகள்: தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவை தோற்றம் முதலியவற்றில் வேறுபட்டு உள்ளன.

ஸஜாதீய வேறுபாடுகள் - பூக்கள் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் மல்லிகையும், செம்பருத்தியும் உருவம், மணம் போன்ற வெவ்வேறு தன்மைகளை கொண்டுள்ளன. மனிதர்களுக்குள்ளேயும் உருவம் முதலிய வேறுபாடுகள் உள்ளன. 

ஸ்ரீவத்ஸலக்ஷணம் 'ஸ்ரீவத்ஸம்' என்னும் மருவை 

வக்ஷஸி தனது திருமார்பில் 

தேன க்ருதமிதி வா கொண்டுள்ள காரணத்தினால் 

க்ருதலக்ஷண: பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, 'ஸ்ரீவத்ஸம்' என்னும் மருவை தனது திருமார்பில் கொண்டுள்ளபடியால் பகவான் 'க்ருதலக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!