புதன், ஆகஸ்ட் 31, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - ஃபல ஸ்ருதி (இந்த ஸ்தோத்திரத்தின் பலன்கள்)

லக்ஷ்மிநரசிம்ம சரணாப்ஜ மதுவ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுககரம் புவி சங்கரேன |
ஏதத் படந்தி மனுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத் பத சரோஜம் அகண்ட ரூபம் ||


லக்ஷ்மிநரசிம்ம - லக்ஷ்மிநரசிம்மரின், சரணாப்ஜ (சரண+அப்ஜ) - திருவடித் தாமரையிலிருந்து, மதுவ்ரதேன - தேனை பருக விரும்பும், ஸ்தோத்ரம் க்ருதம் - இந்தத் துதியை இயற்றினேன், ஸுககரம் புவி - உலகனைத்திற்கும் நன்மையை அளிக்கக்கூடிய,சங்கரேன - ஆதிசங்கரரான நான், ஏதத் - இதை, படந்தி - ,படிக்கும், மனுஜா - மனிதர், ஹரிபக்தி யுக்தா: - பகவான் ஹரியிடம் பக்தி கொண்டு, தே யாந்தி - அவர்கள் அடைவார்கள், தத் பத சரோஜம் - பகவானின் திருவடித் தாமரைகளை, அகண்ட - மிகப்பெரிய (இந்த பிரபஞ்சம் அனைத்தையும் வ்யாபிக்கும்), ரூபம் - உருவம்.


பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் திருவடித்தாமரையிலிருந்து வழியும் தேனை நுகரும் வண்டான ஆதிசங்கரரான நான், உலக நன்மைக்காக இயற்றிய இந்தத் துதியை தினமும் ஓதுபவர்களுக்கு, பகவானிடம் பக்தி உண்டாகி (அல்லது பெருகி), இந்த ஸம்ஸாரத்திலிருந்து பகவானால் கைக்கொடுத்துத் தூக்கப்பட்டு, தன்னுருவால் இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் நிறைந்து வ்யாபிக்கும் பகவானின் திருவடித் தாமரைகளை சென்றடைவர்.

எந்த ஒரு துதியின் முடிவிலும் அதனை ஓதுவதால் எற்படும் நற்பலன்களை கூறுவது மரபு. அவ்வாறே, இந்த லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்திரத்தை படிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை இந்த துதியில் குறிப்பிடுகிறார் ஆதிசங்கரர்.  அதற்கு முன் தன்னைப் பற்றியும், இந்தத் துதியை தான் எதற்காக இயற்றினார் என்பதையும் முதலிரண்டு அடிகளில் விளக்குகிறார்.

ஆதிசங்கரர்: ஆசார்யர் தம்மை ஞானியாகவோ, பக்த சிரோண்மணியாகவோ கூறிக்கொள்ளவில்லை. பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து வழியும் தேனை நுகர விரும்பும் ஒரு வண்டாகவே தன்னை விவரித்துக் கொள்கிறார்.

இந்தத் துதியை இயற்றியது எதற்காக? உலகனைத்தின் (உலக மக்கள் அனைவரின்) நன்மைக்காகவே இந்தத் துதி இயற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ஆசார்யர். இந்த துதி முழுவதிலும் ஸம்ஸாரம் என்னும் இந்தப் பிறவியில் நாம் எவ்வாறு வீழ்ந்தோம், அதில் உள்ள துன்பங்கள் எத்தகையவை என்பதை பல வழிகளாலும் விளக்கி, பகவானே நம்மை இந்த ஸம்ஸாரத்திலிருந்து கைக்கொடுத்து தூக்கி அருள வேண்டும் என்றே மீண்டும், மீண்டும் வேண்டிக்கொண்டிருந்தார் ஆதிசங்கரர். பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் அருளால், நாம் இந்த பிறவித் தளையிலிருந்து விடுபடுவதையே இங்கு உலக மக்களின் நன்மை என்று ஆசார்யர். 

இந்தத் துதியை ஓதுவதால் ஏற்படும் நற்பயன்கள்:
இந்த பிறவித் தளையிலிருந்து எவ்வாறு விடுபடுவோம், எங்கு சென்றடைவோம் என்பதை பின்னிரு வரிகளில் விவரிக்கிறார். எவரொருவர் இந்தத் துதியை நம்பிக்கையோடு ஓதுகின்றனரோ, அவர்களுக்கு முதலில் பகவானிடம் பக்தி உண்டாகிறது (இதுவே, இந்தத் துதியை ஓதுவதால் கிடைக்கும் முதல் பயனாகும்). அந்த பக்தி கனிந்து, அதனால் இந்தப் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் தன்னுருவால் வ்யாபித்திருக்கும் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் திருவடித் தாமரைகளை சென்றடைவார்கள் என்று வாழ்த்துகிறார் ஆதிசங்கரர் (இதுவே, இந்தத் துதியை ஓதுவதனால் ஏற்படும் முடிவான பயனாகும்).

இந்தத் துதியை வெறுமனே ஓதாது ஜகத்குருவான ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதரை வணங்கி ஓத வேண்டும். குருவருள் இன்றித் திருவருள் கிடைக்காது. எனவே, நாமும் ஆச்சார்யரின் தாள் பற்றி, அவர் இயற்றிய இந்த துதியை தினமும் ஓதிப் பயன் பெறுவோமாக!!!

ஸ்ரீகுருப்யோ நம: |
ஸ்ரீகுரு சரணாரவிந்தாப்யாம் நம: |
அஸ்மத் குரவே ஸ்ரீசங்கராசார்ய பர்யாய நம: |

குரு பரம்பரை ஸ்லோகம்:
ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்|

ஆதிசங்கரரைப் போற்றும் ஸ்லோகம்:
ஸ்ருதி ஸ்ம்ரிதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம்! லோக சங்கரம்!!
   

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 14 (அடியவரின் உள்ளத்தில் உறைபவர் - வாஸுதேவர்)

ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக 
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ |
பக்தானுரக்த பரிபாலன பாரிஜாத 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (14)

ப்ரஹலாத, நாரத, பராசர, புண்டரீக, வ்யாஸாதி - ப்ரஹலாதன்,  - நாரதர், பராசரர் (வேத வ்யாஸரின் தந்தை), புண்டரீக மஹரிஷி, வ்யாஸர் முதலிய, பாகவத - அடியவர்களின், புங்கவ - தலைசிறந்த, ஹ்ருந்நிவாஸ - உள்ளத்தில் உறைபவரே, பக்தானுரக்த - உன் அடியவர்களை, பரிபாலன - காத்து அருள்வதில், பாரிஜாத - வேண்டியதை வழங்கும் பாரிஜாத மரம் போல, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

ப்ரஹலாதன், நாரதர், (விஷ்ணு புராணத்தை மைத்ரேயருக்கு உரைத்தவரும், வேத வ்யாஸரின் தந்தையுமான) பராசர மஹரிஷி, புண்டரீக மஹரிஷி, (வேதங்களைத் தொகுத்தவரும், பதினெண் புராணங்களைத் தொகுத்தவரும், ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தை இயற்றிய) வேத வ்யாஸர் போன்ற தலைசிறந்த அடியவர்களின் உள்ளத்தில் உறைபவரே. உனது அடியவர்களை (அவர்களிடம் கொண்ட பேரன்பினால்) காத்தருளி, அவர்கள் வேண்டியதை பாரிஜாத மரம் போல வழங்குபவரே! திருமாமகளை என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே! எனக்குக் கைக்கொடுத்து அருளுங்கள்.

இந்த துதியை நாம் பகவானின் 'வாஸுதேவ' (அனைத்துயிர்களின் உள்ளத்திலும் உறைபவர்என்ற திருநாமத்தின் விளக்கமாகக் கொள்ளலாம்.

பகவான் அடியவர்களின் உள்ளத்தில் உறைபவர். அவர் அனைவரின் உள்ளத்தில் உறைபவராயினும், அவரே கதியென்றிருக்கும் பரம பாகவதர்களின் உள்ளத்தில் விரும்பி உறைகிறார் (ஸ்ரீமத்  பகவத் கீதை 7.19 - வாஸுதேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:). பரப்ரஹ்மத்தை முற்றும் உணர்ந்தவர் ஆதிசங்கரர். பகவானின் தலை சிறந்த அடியவர்களுள் ஒருவர். அவரைப்போன்ற மஹாத்மாக்கள் பிறப்பதும் அரிது. அவரே, இந்த துதியில் ஒரு சிலரைக் குறிப்பிட்டு, இவர்கள் பாகவதோத்தமர்கள் என்று கூறுகிறார் என்றால் அத்தகையோரின் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமோ?

ப்ரஹலாதன்: ப்ரஹலாதனைக் குறிப்பிடாது நரசிம்மாவதாரம் முழுவடையாது. பிறப்பால் அஸுர சிறுவனாய் இருப்பினும் கருவிலேயே திருவுடையவனாய், பகவானே கதி என்றிருந்தவன் ப்ரஹலாதன்.

நாரதர்: சீடனைப் பற்றி குறிப்பிட்ட ஆதிசங்கரர், அடுத்ததாக, ப்ரஹலாதனுக்கு பகவானைப் பற்றி உபதேசித்த அவனது குரு நாரதரைக் குறிப்பிடுகிறார்.
நாரதர் ப்ரஹலாதனின் குரு: ப்ரஹலாதனின் தந்தை ஹிரண்யகசிபு தன் தமையன் ஹிரண்யாக்ஷனின் இறப்பிற்கு பழிவாங்க ப்ரஹ்மாவைக் குறித்து தவம்புரிய சென்ற பொழுது, அவனது மனைவி கயாது கருவுற்றிருந்தாள். பிறக்கும் குழந்தையும் தனக்கு எதிரியாக இருக்கக்கூடும் என்று நினைத்த இந்திரன் கயாதுவைக் கொல்வதற்காக அவளைத் தூக்கிச் சென்றபொழுது, நாரதர் அவனைத் தடுத்து கயாதுவை தனது ஆஸ்ரமத்திற்குக் கூட்டிச் சென்று ஹிரண்யகசிபு தவம் முடித்து வரும்வரை அவளை பாதுகாத்தார். அப்பொழுது அவளுக்கு பகவானின் கதைகளையும், திருநாமங்களையும் கூறிவந்தார். அவள் கேட்காவிடினும், அவளது கருவில் இருந்த ப்ரஹலாதன் அவற்றைக் கேட்டு பக்த சிரோண்மணியாக வளர்ந்தான்.  எனவே, நாரத மஹரிஷி அவனுக்கு குருவாகிறார்.

பராசரர்: வசிஷ்டரின் பெயரான பராசரர் தனது சீடரான மைத்ரேயர் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைக்கையில் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அருளியவர். மேலும், மீனவப் பெண்ணான சத்யவதியின் மூலம் கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வ்யாஸரைப்  பெற்றெடுத்தவர்.

புண்டரீகர்: இந்த மஹரிஷியைப் பற்றி புராணங்களில் அதிகக் குறிப்புகள் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள (திருக்கடல்மல்லை என்ற புராணப் பெயர் கொண்ட) 108 திவ்யதேசத்தில் ஒன்றான ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் ஸ்தல புராணத்தில் புண்டரீகர் என்னும் மஹரிஷிக்கு பகவான் காட்சி தந்ததாக அந்தக் கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது.

வ்யாஸர்: இவர் பெருமையை இந்த சிறு பதிவில் கூறிவிட முடியாது. இவர் பகவானின் ஆவேச அவதாரம் (வ்யாஸாய விஷ்ணு ரூபாய, வ்யாஸ ரூபாய விஷ்ணவே). வைவஸ்வத மன்வந்தரத்தில் நமக்காக வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் மஹாபாரதத்தை இயற்றியவர். பதினென் புராணங்களை அளித்தவர் (விஷ்ணு புராணம் போன்ற ஒரு சில புராணங்களை மற்றவர்கள் இயற்றி இருப்பினும் அவற்றையெல்லாம் தொகுத்து தன் சீடர்கள் மூலம் எங்கும் பரப்பியவர் வேத வ்யாஸரே).
வ்யாஸர் என்பவர் நாம்  நினைப்பதைப் போல ஒரு தனிப்பட்ட நபர் அல்ல. வ்யாஸர் என்பது ஒரு பதவியாகும். ப்ரஹ்மாவின் ஒரு நாளில் 14 மனுக்கள் ஆட்சி செய்கின்றனர். (மன்வந்தரம் என்றழைக்கப்படும் ) ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒவ்வொருவர் "வ்யாஸராகத்" தேர்வு செய்யப்படுகின்றனர். இன்றைய (வைவஸ்வத) மன்வந்தரத்தில், கிருஷ்ண த்வைபாயனர் வ்யாஸராக உள்ளார். இதற்கு முந்தைய மன்வந்தரத்தில் கிருஷ்ண த்வைபாயனரின் தந்தை ஸ்ரீபராசர மஹரிஷியே வ்யாஸராக இருந்து வேதங்களைத் தொகுத்தளித்தார்.     

மேற்சொன்ன பாகவதோத்தமர்கள் மட்டுமல்லாது நம் போன்றோரையும் பகவான் காக்கிறார். தேவலோகத்துத் தோட்டங்களில் பாரிஜாத மரம் என்ற மரம் ஒன்று உண்டாம். அதன் அடியில் நின்று நாம் என்ன நினைக்கின்றோமோ அதை அந்த மரம் வழங்குமாம்அவ்வாறுஅடியவர்கள் விரும்புவதை பாரிஜாத மரம்போல பகவானே அள்ளி வழங்குகிறார் (இங்கு விருப்பம் என்பது, தர்ம சாஸ்திரங்களுக்கு உட்பட்ட நியாயமான விருப்பங்களைக் குறிக்கும்).

இவ்வாறு, திருமகளுடன் என்றும் இணைபிரியாதுதன்னை அண்டிய அடியவர்களை காக்கும் பகவான் லக்ஷ்மிநரசிம்மர், தமக்கு (நமக்குகைக்கொடுத்து இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுவித்து அருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார். 

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 13 (பகவானின் திருநாமங்கள் - நாமாவளி)

லக்ஷ்மீபதே! கமலநாப! சுரேஷ! விஷ்ணோ!
வைகுண்ட்ட! க்ருஷ்ண! மதுசூதன! புஷ்கராக்ஷ! |
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தன! வாஸுதேவ!
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம்* ||

* - "தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்" 
(ஒரு சில பதிப்புக்களில் கடைசி வரி இவ்வாறு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது)


திருமகள் கேள்வனே! உந்தித் தாமரை உடையோனே! தேவர்களின் தலைவரே! எங்கும் நிறை பரம்பொருளே! வைகுண்டத்தில் உறைவோனே! கார்மேகக் கண்ணனே! மது என்ற அசுரனை அழித்து தேவர்களைக் காத்தவரே! செந்தாமரைக் கண்ணனே! ப்ரஹ்மத்தை உணர்ந்தோரின் உற்ற தோழரே! அழகிய திருமுடி உடையவரே! தீயோரை அழிப்பவரே (அடியவருக்கு நேரும் தீங்கினை போக்குபவரே)! எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே! திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!

லக்ஷ்மீபதே - திருமாமகள் கேள்வரே, கமலநாப - தாமரையைப் போன்ற திருவயிற்றை உடையவரே (அல்லது, தனது உந்தியிலிருந்து உதித்தத் தாமரையில் நான்முகனைப் படைத்தவரே), சுரேஷ - தேவர்களின் (அடியவர்களின்) தலைவரே, விஷ்ணோ - எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவரே, வைகுண்ட்ட - வைகுண்டத்தைத் தமது இருப்பிடமாக உடையவரே, க்ருஷ்ண - கார்மேகக் கண்ணனே, மதுசூதன - மது என்ற அசுரனை வதைத்தவரே, புஷ்கராக்ஷ - தாமரை இதழ் போன்ற அழகிய திருக்கண்கள் உடையவரே, ப்ரஹ்மண்ய - ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்களுக்கு உற்றத் தோழரே, கேசவ - அழகிய திருமுடியை உடையவரே (அல்லது, கேசி என்னும் அசுரனை அழித்தவரே), ஜனார்தன - தீய மனிதர்களை அழிப்பவரே (அல்லது, மனிதர்களிடம் உள்ள தீயதை அழிப்பவரே), வாஸுதேவ - அனைத்து உயிர்களுக்குள்ளும் நிறைந்து வசிப்பவர், லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து. 

கடைசி வரியின் மாற்றுப் பதிப்பின் விளக்கம்:
தேவேச - தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமே, தேஹி - அருளுங்கள், க்ருபணஸ்ய - தங்களின் கருணையின் வடிவாக, கராவலம்பம் - கைக்கொடுத்து.

ஸம்ஸாரமென்னும் இப்பிறவியில் நமக்கு நேரும் துன்பங்கள் அனைத்தையும் மற்றும் இந்தப் பிறவியே ஒரு துன்பமென்பதையும் விவரித்த ஆதிசங்கர பகவத்பாதர் இந்தத் துதியில் லக்ஷ்மி நரசிம்மரை அவரது பல திருப்பெயர்களை இட்டழைத்து, நான் கூறவேண்டிய அனைத்தையும் கூறிவிட்டேன். இனி, தமக்கு (நமக்கு) வேறு சரண் இல்லை என்று உணர்த்துகிறார். பல்லாலும், கைகளாலும் தனது புடைவையைப் பிடித்துக்கொண்டிருந்த திரௌபதி முடிவில் அனைத்தையும் விட்டு, கைகளை மேலே உயர்த்தி "த்வாரக நிலையாச்யுதா கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷ மாம் சரணாகதம்" என்று கூறியதுபோலவே இந்த ஸ்லோகமும் உள்ளது என்றால் அது மிகையாகாது (அவ்வாறு, அவள் கை தூக்கிய உடனே அவளது புடவை முடிவின்றி சுரந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்).

பகவான் திருமகள் கேள்வன் (லக்ஷ்மிபதி). எவ்வாறு ஒரு தாயின் பரிவான வார்த்தைகளால் கட்டுண்ட தந்தை தமது குழந்தையின் தவறுகளைப் பொறுத்துக் கொள்கிறாரோ அவ்வாறே பகவானும், திருமகள் நமக்காகப் பரிந்துரைக்க, அதனை ஏற்று நம்மைக் காக்கிறார். அவர் தனது உந்தித் தாமரையில் நான்முகனையும், அவர் மூலம் இவ்வுலகனைத்தையும் படைத்தவர் (கமலநாபர்). படைத்த அவருக்கு நம்மைக் காத்து, இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து எளிதில் விடுவிக்க இயலும். அவர் நல்லோர்களின் தலைவர் (சுர+ஈச = சுரேஷ), எங்கும் உறைபவர் (விஷ்ணு). 

வைகுண்ட - வைகுண்ட நாதர். இந்தத் திருநாமத்திற்கு பல பொருட்கள் உண்டு. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 405வது திருநாமம் 'வைகுண்ட'. இதற்கு உரை எழுதியுள்ள ஆதிசங்கரர் "விவிதா குண்டா கதே: ப்ரதிஹதி:', அதாவது பக்தர்களில் (அவர்களது ஆன்மீகப்) பாதையில் வரும் தடைகளை நீக்குபவர் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பொருளும் இந்த துதிக்கு நன்றாகப் பொருந்துகிறது. இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து நாம் முக்தியை நோக்கி முன்னேறும் வழியில் வரும் தடைகளையெல்லாம் பகவான் தகர்த்து விடுகிறார்.

அவரே, கிருஷ்ணனாக அவதரித்தார். கிருஷ்ணாவதாரத்தில் பகவான், நண்பன், பகைவன் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நற்கதியை அளித்துள்ளார். காமத்தால் கோபியரும், பயத்தால் கம்சனும், வெறுப்பால் (த்வேஷத்தால்) சிசுபாலன் முதலியவர்களும், உறவுமுறையால் யாதவர்களும், நட்பால் பாண்டவர்களும், பக்தியால் நாரதர் முதலியோரும் பகவானைப் பற்றியே நினைத்து நற்கதி அடைகின்றனர் (ஸ்ரீமத் பாகவதம் 7.1.31). 

மது என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காத்து, மதுசூதனன் என்ற பெயர் பெற்றவர். தனது பக்தர்களின் துன்பங்களையும் போக்கி நம்மை காப்பார். அவர் தாமரைக் கண்களோடும் (புஷ்கராக்ஷர்), அழகிய திருமுடியோடும் (கேசவன்), ப்ரஹ்மத்தைத் தேடும் முமுக்ஷுக்களுக்கு உற்ற தோழராய் இருப்பவர் (ப்ரஹ்மண்யர்), அடியவர்களின் துன்பங்களை அழிப்பவர் (ஜனார்தனர்), அனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்து, நிறைந்திருப்பவர் (வாஸுதேவர்) - எனவே, அவருக்கு நாம் படும் துன்பங்கள் அனைத்தும் தெரியும்.

திருமாமகளோடு என்றும் இணைபிரியாதிருக்கும் லக்ஷ்மிநரசிம்மர் தமக்கு (நமக்கு) கைக்கொடுத்து இந்த ஸம்ஸாரத் தளைகளிலிருந்து தம்மை (நம்மை) விடுவித்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார் ஆதிசங்கரர்.

புதன், ஆகஸ்ட் 24, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 12 (காலனால் நேரும் துன்பங்கள்)

பத்வாகளே யமபடா பஹு தர்ஜயந்த 
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர்யுதம் மாம் |
ஏகாகினம்* பரவசம் சகிதம் தயாளோ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (12)
* - ஏகாகினம் என்பதற்கு பதிலாக ஆகாமினம் என்று சில பதிப்புக்களில் உள்ளது  


பத்வா - மிகுந்த (மிக அதிக அளவில்), களே - கழுத்தை, யமபடா - யமனின் தூதர்கள், பஹு தர்ஜயந்த - பயமுறுத்தியும், திட்டித் துன்புறுத்தியும், கர்ஷந்தி யத்ர - இங்கும், அங்கும் இழுத்து, அலைக்கழித்து, பவபாச - இந்த ஸம்ஸாரத்தில் நான் கொண்டுள்ள பற்றுதல் எனும் கயிற்றால், சதைர்யுதம் - நூற்றுக்கணக்கான, மாம் - என்னை, ஏகாகினம் - (துணையின்றி) தனியே, பரவசம் - மற்றவர்களின் (யம தூதர்களின்) கட்டுப்பாட்டில், சகிதம் - நடுங்குகிறேன், தயாளோ - கருணையே வடிவான, லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.  

காலனின் தூதர்கள், மரணமடையும் தருவாயில், என்னை பற்றுதல் என்னும் கயிற்றினால் கட்டி, திட்டித் துன்புறத்தி, இங்கும் அங்கும் அலைக்கழித்து இழுத்துச் செல்கின்றனர். யம தூதர்களில் கட்டுப்பாட்டில், எவ்வித உதவியும் இன்றி தனித்து விடப்பட்டுள்ள நான், மிகவும் அச்சத்தில் உள்ளேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்த ஸ்லோகத்தை இரு விதமாய் பொருள் கொள்ளலாம். ஒன்று - இந்த ஸம்ஸாரத்தை விட்டு நம் உயிர் பிரியும் தருணத்தில் நாம் படும் துன்பங்களை விவரிப்பது. மற்றொன்று - இந்தப் பிறவியே நமக்கு மரணகாலத்தில் யம தூதர்களால் வரக்கூடியத் துன்பத்தைப் போன்றது.

முதல் பொருள்: 
இந்தப் பிறவியில் நாம்  பற்பல இன்பங்களை அனுபவிக்கிறோம் (அனுபவிப்பதாக எண்ணிக்கொள்கிறோம்). ஆனால் இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்து யமனின் உலகத்தை அடையும் வரை நாம் பற்பல துன்பங்களை அனுபவிக்கிறோம் (யமனின் உலகை அடைந்த பின்னும் துன்பங்கள் தொடரும்). ஆத்ம ஞானம் அடைதலே முக்திக்கு வழி. அவ்வாறு, ஆத்மஞானம் அடையாது அகக்கண்களைத் தொலைத்த நம்மை, யம தூதர்கள், ஸம்ஸாரத்தில் நாம் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பற்றுதல்களைப் போன்ற நூற்றுக்கணக்கான பாசக் கயிற்றுக்களை நம் கழுத்தினில் கட்டி, நம்மை திட்டியும், அங்கும், இங்கும் இழுத்துக் கொண்டு துன்புறுத்தியும் அழைத்துச் செல்வர். உதவிக்கு யாருமின்றி தனியே அந்த யம தூதர்களின் கட்டுபாட்டினில் துன்புறுவோம். முக்தியை அடைந்த ஆத்மாக்கள் இந்த துன்பங்களை அடைவதில்லை. எனவே, கருணையே வடிவான திருமகள் நாதன் லக்ஷ்மி நரசிம்மர் தமக்கு (நமக்கு) இந்த துன்பங்கள் நேராது முக்தியை தந்தருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

மற்றொரு பொருள்: 
இந்தப் பிறவியே நமக்கு யம தூதர்கள் தருமாப் போல் பற்பல இன்னல்களைத் தருகிறது. இந்த ஸம்ஸாரத்தில் நாம் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசைகளும், பற்றுக்களுமே யம தூதர்களும், அவர்களின் பாசக்கயிறுமாகும். இவற்றால் நமது கழுத்து இறுக்கப்பட்டு, இந்த ஆசாபாசங்களினால் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்படுகிறோம். பிறரின் தேவைகளை தீர்க்காத போது வசைமொழிகளையும் கேட்க நேரிடுகிறது. நாம், நம்மை சுற்றி பலர் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் நாம் தனித்தே இருக்கிறோம். நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கின்றோம். ஆனால், இந்த ஆசாபாசங்களின் கட்டுப்பாட்டிலேதான் உழல்கிறோம். இதிலிருந்து விடுபட முக்தி ஒன்றே வழி. அதை அதுவும், பகவானின் கருணையினால் தான் நமக்குக் கிடைக்கும். எனவே, கருணையே வடிவான திருமகள் நாதன் லக்ஷ்மி நரசிம்மர் தமக்கு (நமக்கு) இந்த ஸம்ஸாரத் தளையிலிருந்து முக்தியை தந்தருள வேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 11 (பிறவிக் குருடர்கள் நாம்)

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதனஸ்ய 
சோரை: ப்ரபோ பலிபிரிந்த்ரிய நாமதேயை: |
மோஹாந்த கூப குஹரே வினிபாதிதஸ்ய 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (11)


அந்தஸ்ய மே - குருடனான நான், ஹ்ருத விவேக - மனதை அடக்கும் "விவேகம்" என்னும், மஹாதனஸ்ய - பெரிய சொத்தை, சோரை: - திருடிவிட்டதால்,  ப்ரபோ - அனைத்து சராசரங்களையும் ஆளும் நாதனே, பலிபி: - திருடர்கள், இந்த்ரிய நாமதேயை: - புலன்கள் என்னும் பெயர் கொண்ட, மோஹ - மோஹமென்னும், அந்த கூப - இருண்ட பாழுங் கிணற்றுக்குள், குஹரே - பள்ளத்துக்குள், வினிபாதிதஸ்ய - விழுந்து விட்டேன், லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

புலன்கள் என்னும் திருடர்கள் எனது அறிவையும், விவேகமென்னும் சொத்துக்களைத் திருடிவிட்டனர். இதனால், அகக்கண் குருடாகி, பிறவியென்னும் இருண்ட பாழும் கிணற்றினுள் விழுந்துத் தவிக்கின்றேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

முன்பே நான்காவது ஸ்லோகத்தில் ஆதிசங்கர பகவத்பாதாள் இந்த பிறவியென்னும் பாழுங்கிணற்றைப் பற்றி வர்ணித்திருக்கிறார். நஞ்சு தோய்ந்த பற்களுடன் கூடிய பாம்புகள் நிறைந்துள்ள ஆழம் காண இயலா பெரும்பள்ளம் இது. இந்தக் கிணற்றினுள் நாம் எவ்வாறு விழுந்தோம் என்று ஆச்சார்யர் இங்கே விளக்குகிறார்.

நாம் புறக்கண்கள் இல்லாதவர்கள்தான் குருடர்கள் என்று தவறாக நினைத்துள்ளோம். நாம் இந்த உடல் அல்ல, அதனுள் வினைப்பயனால் சிக்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மா என்ற உண்மையான ஆன்மீக அறிவு (அகக்கண்கள்) இல்லாத நாம் அனைவருமே பிறவிக் குருடர்களே. இந்த அகக்கண்கள் மூலமாகவே பகுத்தறிவைப் பெறுகிறோம்.
"உண்மையில் நாம் யார்? அறிவுள்ள (சித் தத்துவமான) இந்த ஆத்மா ஏன் அறிவற்ற (அசித் தத்துவமான) உடலுக்குள் சிறைப்பட்டுள்ளது? இதிலிருந்து விடுதலைப் பெறுவது எவ்வாறு? நாம் கடைத்தேற உதவுபவை யாவை? நாம் கடைத்தேற தடையாயிருப்பவை யாவை?" என்று பகுத்தறிந்து கொள்வதையே பகுத்தறிவு என்று இங்கு குறிப்பிட்டுள்ளேன். போலியாக நாத்திக வாதம் பேசிக்கொண்டு ஸனாதன தர்மத்தை (இந்து மதத்தை) மட்டும் இழிவுபடுத்தும்  ஈனப் பிழைப்பைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.

எவ்வாறு நாம் நமது அகக்கண்களை இழந்தோம்? அவற்றை நாமாக இழக்கவில்லை. மாறாக, நம்மிடமிருந்து அவை திருடப்பட்டுள்ளன. புலன்கள் என்னும் திருடர்கள் அதை நம்மிடமிருந்து திருடிவிட்டனர். நமக்கு அடங்கி நாம் இட்ட வழக்கில் நடக்கவேண்டிய புலன்கள், நம் அறிவை திருடுவது ஏன்? ஏனெனில், நாம் மனதை அடக்கத் தவறிவிட்டோம். கட்டுப்பாடற்றுத் திரியும் மனம், புலன்களுக்கு .அடிமையாகிறது. புலன்கள் நமது மனதை கைக்கொண்டு, "எது நன்மை? எது தீமை?" என்று பிரித்தறிய வேண்டிய நமது அகக்கண்களை மூடிவிடுவதன் மூலம் நம் அறிவைத் திருடுகிறது. இவ்வாறு, அகக்கண்களையும், அதினின்று வரும் பகுத்தறிவையும் இழந்த நாம், இந்தப் பிறவியென்னும் பாழுங்கிணற்றுக்குள் விழுந்து தவிக்கிறோம்.

பகவான், ஸ்ரீமத் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தில் இதைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் (கீழ்க்கண்டவை பாரதியாரின் பகவத்கீதை தமிழாக்கத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன): 
2.62: மனிதன் விஷயங்களைக் கருதும்பொழுது அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
2.63: சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.

இந்த புத்தி நாசத்தையே ஆதிசங்கரர் இந்த ஸ்லோகத்தில் விவரித்துள்ளார்.

இந்த ஆழங்கான இயலா பாழுங்கிணற்றுக்குள்ளிருந்து நம்மைக் காப்பது யார்?
நாம் (அவனது) குடிமக்கள் - பகவான் ப்ரபு (ஆள்பவன்)
நாம்  குருடர்கள் - பகவான், (தன் இயற்கையான ஞானத்தால்) அனைத்தையும் உள்ளபடி அறிபவன்
நாம் இருண்ட கிணற்றில் உள்ளோம் - பகவான், தனது அறிவு ஒளி வீச, மேலான இடத்தில் உள்ளவன்.

அனைத்தையும் அடக்கி ஆளும் அந்தப் பரம்பொருளால் மட்டுமே நம்மைக் காக்க இயலும். அந்தப் பரம்பொருளான லக்ஷ்மி நரசிம்மரை, நம் அறிவுக்கண்களைத் திறந்து, நாம் இழந்த சொத்தான பகுத்தறிவை மீட்டுத்தந்து, நம்மை பிறவியென்னும் இந்த இருண்ட கிணற்றிலிருந்து கைக்கொடுத்து வெளியேற்றுமாறு ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 10 (பிறவியென்னும் மத யானை)

ஸம்ஸார பீகர கரீந்த்ர கராபி காத 
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷ  ஸகலார்த்தி நாச |
ப்ராண ப்ரயாண பவ பீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (10)

ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், பீகர - அச்சமூட்டும், கரீந்த்ர - மத யானை, கராபி காத - தனது துதிக்கை மற்றும் தந்தங்களால், நிஷ்பிஷ்ட - முட்டி, மிதித்து (என்னைத் துன்புறுத்தி), மர்ம வபுஷ - எனது மர்ம உறுப்புக்களைத் தாக்கி, ஸகலார்த்தி நாச - அனைத்துத் துன்பங்களையும் போக்குபவரே, ப்ராண ப்ரயாண பவ பீதி - மரணமடையும் தறுவாயில், ஸம ஆகுலஸ்ய - (உள்ளது போன்ற) துன்பத்தை அனுபவிக்கின்ற என்னை, லக்ஷ்மி நரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியென்னும் மத யானை ஒன்று, என்னை தனது துதிக்கை மற்றும் தந்தங்களால் முட்டி, மிதித்து எனது மர்ம உறுப்புக்களைத் தாக்கித் துன்புறுத்துகிறது. மரண தசையைப் போன்று துன்பத்தில் பீடிக்கப்பட்டுள்ள என்னை திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே!!! கைக்கொடுத்து அருளுங்கள்!!!  

ஆதி சங்கரர், இந்த ஸ்லோகத்தில் நமது பிறவியை ஒரு மதம் கொண்ட யானையாக உருவாக்கப்படுத்துகிறார். இந்த யானையின் தோற்றமே மிகுந்த அச்சத்தை விளைவிப்பதை உள்ளது. தனது பெருத்த துதிக்கைகளாலும், கூறிய தந்தங்களாலும் அது நம்மை முட்டி, மிதித்துத் துவைக்கிறது. மேலும் நமது மர்ம உறுப்புக்களைத்* தாக்கித் துன்புறுத்துகிறது.

* மர்ம உறுப்புக்களைத் தாக்கினால் நமக்கு அதிக துன்பம் விளையும். மேலும், மர்ம உறுப்புக்களைக் காத்துக்கொள்வது என்பது கடினம். இந்த ஸம்ஸாரத்தில் நாம் இதில் மிகுந்த பற்று வைக்கின்றோமோ, அதுவே நம் துயரத்திற்குக் காரணமாய்  அமைகின்றது. "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு" என்றாரே திருவள்ளுவரும். இவ்வாறு நாம் கொள்ளும் பற்றையே நமது மர்ம உறுப்புக்களாக ஆதிசங்கரர் உருவகித்துள்ளார் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த (பிறவியென்னும்) யானையிடம் நாம் படும் துன்பமானது மரணத் தருவாயில் உள்ளவன் படும் துன்பத்தை ஒத்துள்ளது. இதைத் தாங்க முடியாது மரணமடைந்து விட்டால் இதிலிருந்து விடுதலைப் பெறுவோமோ? என்று எண்ணினால், அதுவும் கைகூடுவதில்லை. (புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று ஆச்சார்யர் தமது பஜ கோவிந்தத்தில் கூறியுள்ளதைப் போல) நமது வினைப்பயன்கள் நம்மை மீண்டும், மீண்டும் இந்தப் பிறவி சுழற்சியில் கொண்டு தள்ளுகிறது. இதனால், துயருற்றிருக்கும் நம்மை, தன் அடியவர்களின் அனைத்துத் துயரங்களையும் களைந்தெறிவதில் வல்லவரான லக்ஷ்மிநரசிம்மரே தன்னைக் கைக்கொடுத்துக் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார் ஆதிசங்கர பகவத்பாதாள்.

லக்ஷ்மிநரசிம்மர் யானையிடமிருந்து தன் அடியவனை காத்தருளிய வரலாறு:
பக்தர்களுக்குள் மிகச் சிறந்தவனாக ப்ரஹலாதனை கொல்வதற்கு அவன் தந்தை பல வழிகளில் முயன்றான். இந்தப் ப்ரபஞ்சத்தை எட்டு திக்குகளில் தாங்கும் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகளைக் கொண்டு ப்ரஹலாதனை மிதிக்க வைத்தான். இந்தப் ப்ரபஞ்சங்களையே தாங்கும் சக்தி வாய்ந்த யானைகள் மிதித்தும், பகவான் ஹரியையே எப்பொழுதும் த்யானித்துக் கொண்டிருந்த ப்ரஹலாதனுக்கு, பகவானின் அருளால் ஒன்றும் நேரவில்லை.

அவ்வாறே, நம்மையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மர், இந்தப் பிறவியென்னும் யானையிடமிருந்து காத்தருள்வார்.

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 9 (பிறவியென்னும் மாய வலை)

ஸம்ஸார ஜால பதிதஸ்ய ஜகந்நிவாஸ 
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாக்ர ஜஷோபமஸ்ய |
ப்ரோத்கண்டித ப்ரசுரதாலுக மஸ்தகஸ்ய 
லட்சுமிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (9)


ஸம்ஸார - இந்த பிறவியென்னும், ஜால - மாய வலையில், பதிதஸ்ய - விழுந்துவிட்டேன், ஜகந்நிவாஸ - இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே, ஸர்வேந்த்ரியார்த்த - ஐம்புலன்களென்னும், படிஷாக்ர - கூரிய தூண்டில் முனையில், ஜஷ - மீன், உபமஸ்ய - போன்று உள்ளேன், ப்ரோத் - குத்தி, கண்டித - துண்டிக்கப்பட்ட, ப்ரசுரதாலுக - பிரித்தெடுக்கப்பட்டு, மஸ்தகஸ்ய -  தலை, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

புலனின்பங்கள் என்னும் புழுவைத் தன் தூண்டிலில் வைத்து, இந்தப் பிறவி விரித்த மாய வலையில் நான் சிக்கித் தவிக்கின்றேன். புலனின்பங்களை நாடி, தூண்டிலில் விழுந்து தன் தலையை இழந்துள்ள ஒரு மீனைப் போன்று தவிக்கிறேன். இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்தப் பிறவி ஒரு மாய வலையை விரிக்கிறது. நமது ஐம்புலன்களுக்கும் இன்பம் தரவல்ல புலனின்பங்களே அந்தத் தூண்டில் நுனியில் உள்ள புழுவாகும். எவ்வாறு ஒரு மீனானது தூண்டிற்ப் புழுவைக்கண்டு, அதை சுவைக்கப் போய், தூண்டிலில் சிக்கித் தன்னையே இழக்கிறதோ, அவ்வாறே, நாமும் புலனின்பத்தை நாடி, அந்த மாய வலையில் வீழ்ந்து, தூண்டிலில் சிக்கி, தலை துண்டிக்கப்பட்ட மீனைப்போன்று துடித்துக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய துயரமான நிலையில் இருக்கும் நம்மை திருமகள் கேள்வனான நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று அழைக்கிறார்.

ஜகந்நிவாஸ: பகவான் உலகனைத்திலும் உள்ளான். உலகனைத்தும் அவனுள் உள்ளது.   ஆனால், அனைத்து அவதாரங்களிலும், நரசிம்ம அவதாரத்தில் தான் இந்த உண்மை அனைவரும் அறியும் வகையில் வெளிப்பட்டது. பகவான், சிறுவனான ப்ரஹலாதன், "ஹரி எங்கேயுள்ளான்?"  என்ற கேள்விக்கு எந்த இடத்தைக் கைகாட்டுவானோ என்று தெரியாது, பகவான் நரசிம்மர் அனைத்து இடங்களிலும் நிறைந்து மறைந்திருந்தார். ப்ரஹ்லாதன் ஒரு தூணைத்தான் கைக்காட்டினான். 'இன்றும் நரசிம்மர் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆனால், கைக்காட்டத்தான் ப்ரஹ்லாதன் இல்லை' என்று ஆன்றோர் கூறுவார். எனவே, 'அனைத்திலும் நிறைந்திருக்கும் பகவானுக்கு, நான் இந்த வலையில் சிக்கி தவிப்பது தெரியாமல் போகுமா?' என்ற பொருளிலேயே இங்கு "ஜகந்நிவாஸ" என்று அழைக்கிறார் ஆதிசங்கரர்.

வியாழன், ஜூலை 28, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 8 (பிறவியென்னும் காட்டுத்தீ)

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு 
ஜ்வாலா வலீபி ரதிதக்த தனூருஹஸ்ய |
த்வத்பாத பத்ம ஸரஸீ ருஹமாகதஸ்ய 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (8)


ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், தாவ - சுட்டெரிக்கும், தஹநாதுர - துன்புறுத்தும் நெருப்பு, பீகரோரு (பீகர உரு) - கொடூரமாக எனது துடைகள், ஜ்வாலா - தீப்பிழம்புகள், வலீபிர் - எனது மேனி, அதிதக்த - மிகவும் துன்புறுத்தப்பட்டு, தனு - உடல், உருஹஸ்ய - துடைகள், த்வத்பாத பத்ம - தங்களுடைய தாமரைப் போன்ற திருப்பாதங்கள், ஸரஸீருஹம் - பொய்கையில் இறங்க, ஆகதஸ்ய - வந்துள்ளேன், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியானது ஒரு கொடிய காட்டுத்தீப்போல என்னைத் துன்புறுத்துகிறது. தனது தீப்பிழம்புகளால் எனது மேனியையும்,  துடைகளையும் எரிக்கிறது. இதனால் துன்பமடைந்துள்ள நான், தங்களின் தாமரைப் பாதங்களாகியப் பொய்கையை நாடி வந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

இந்த துதியில், ஆதிசங்கரர் இந்தப் பிறவியை ஒரு கொடிய தீயாக உருவகப் படுத்துகிறார். கொழுந்துவிட்டெரியும் தீப்பிழம்புகள் தமது (நமது) துடைகளையும், சருமத்தையும் பற்றி, தமது (நமது) உடலையும், துடைகளையும் சுட்டெரித்து துன்புறுத்துகின்றன. இந்த துன்பத்திலிருந்து விடுபட ஒரு குளிர்ந்த தடாகம் தேவை. பகவானின் தாமரைப் பாதங்களே அந்த குளிர்ந்த நீருடைய பொய்கையாகும். அந்த குளிர்ந்த திருவடிகளை தமக்குத் தந்தருள வேண்டுமென்று திருமாமகள் கேள்வனாம் லக்ஷ்மி நரசிம்மரை வேண்டுகிறார் ஆதிசங்கரர். 

புதன், ஜூலை 27, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 7 (பிறவியென்னும் நச்சரவம்)

ஸம்ஸார ஸர்ப்ப கன வக்த்ர பயோக்ர தீவ்ர 
தம்ஷ்டிராகரால விஷதக்த விநஷ்ட மூர்த்தே |
நாகாரி வாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (7)

ஸம்ஸார - இந்தப் பிறவி, ஸர்ப்ப - அரவம் (பாம்பு), கன - பெரிய, வக்த்ர - வாய், பயோக்ர - மிகுந்த அச்சத்தை விளைவிக்கக் கூடிய, தீவ்ர - கூரிய, தம்ஷ்டிராகரால - பெரிய பற்கள், விஷதக்த - நஞ்சு நிறைந்த, விநஷ்ட - துன்பமுற்ற, மூர்த்தே - வடிவமாய், நாகாரி - அரவங்களின் (பாம்புகளின்) எதிரியான கருடன், வாஹன - (கருடன்) மீதேறி வருவோரே, ஸுதாப்தி -பாற்கடலில், நிவாஸ - வாழும், சௌரே - சௌர எனும் பெயர் பெற்ற, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவி கூறிய நஞ்சு நிறைந்த பற்களை உடைய ஒரு அரவமாகும் (பாம்பாகும்). இந்தப் பிறவியென்னும் அரவம் என்னைத் தன் நச்சுப் பற்களால் தீண்டித் துன்புறுத்துகிறது. (பாம்புகளின் எதிரியான) கருடன் மீதேறி வருபவரே!!! பாற்கடலில் வாழும் சௌரியே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

ஆதிசங்கரர் இந்த  துதியில், இந்தப் பிறவியை ஒரு கொடிய அரவமாக (பாம்பாக) உருவகப்  படுத்துகிறார். இந்தப் பிறவியை அடைந்த அனைவரும்  இருத்தல்,  பிறத்தல், வளர்த்தல், வளர்ச்சி நிறைவுறுதல், தேய்தல் மற்றும் இறத்தலாகிய ஆறுவகைத் துன்பங்களுக்கு மீண்டும், மீண்டும் உட்படுத்தப்படுகிறோம். இந்தப் பிறவித் துன்பத்தை, நஞ்சு நிறைந்த கூறிய பற்களுடனும், அச்சமூட்டும் பெரிய வாயுடனும் கூடிய (பிறவியென்னும்) அரவம் தீண்டியதால் ஏற்படும் துன்பத்தோடு ஒப்புமை கூறுகிறார். 

அரவத்தினால் துன்பமுறும் நம்மை அந்த அரவங்களின் பகைவனான கருடன் மீதேறி வந்து நம்மைக் காக்கவேண்டும் என்று பகவானை வேண்டுகிறார். கருடனைக் கண்டவுடனே அரவங்கள் ஓடிவிடுவது இயற்கையல்லவா? அவ்வாறே, கருடன் மீதேறி வரும் லக்ஷ்மிநரசிம்மரைக் கண்டதும் இந்தப் பிறவியெனும் அரவமும் நம்மை விட்டு ஓடிவிடும்.

அரவம் ஓடிவிட்டாலும் அதனால் தீண்டப்பட்டு துன்புற்றிருக்கிறோமே, அதற்கு மருந்து உண்டா? பரமனின் திருப்பார்வையே அந்தப் பாற்கடலின் அமுதம் போன்றது. அதுவே இந்தப் பிறவியென்னும் பாம்பு தீண்டியதற்கான மருந்து. எனவே தான், பகவான் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதை நினைவூட்டுகிறார்.

அந்த பகவான் எப்பேர்பட்டவரெனில், இவ்வாறு துன்பமடைந்திருப்போரைக் காப்பதில் வல்லவர் (சூரர்). எனவே, சௌரி என்று பெயர் பெற்றவர். அந்த திருமாமகள் கேள்வன், லக்ஷ்மிநரசிம்மன் தன்னைக் கைக்கொடுத்துக் காக்கவேண்டும் என்று ஆதிசங்கரர் வேண்டுகிறார்.

சௌரி என்னும் சொல் 'சூர' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. சௌரி என்றால்  சூரன், சூரத்தன்மை உடையவன் என்று பொருள். துன்பத்திலிருப்போரைக் காப்பதில் சூரன் பகவான்.

பகவான்  ப்ரஹலாதனையும், மீராவையும் நஞ்சிலிருந்து காத்தது:
பக்தர்களில் உத்தமர்களான ப்ரஹலாதனுக்கும், மீராவிற்கும் அவர்களைக் கொல்லும் பொருட்டு அவர்களின் உறவினர்களே உணவில் நஞ்சைக் கலந்து அளித்தனர். அந்த உணவை பகவானுக்கு நிவேதனம் செய்த பின் அவர்கள் உண்டனர். பகவான், தனது அடியவர்களை அந்த நஞ்சிலிருந்துக் காத்தான்.

குருவாயூர் தல வரலாற்றிலிருந்து:
ஒரு அரசனுக்கு அவனது ஜாதகத்தின்படி மரண கண்டம் நெருங்கியது. அவனது, குலகுருவின் அறிவுரைப்படி அன்றைய தினம் முழுவதும் குருவாயூர் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண த்யானத்தில் ஆழ்ந்தான். அன்றைய தினம் முடிந்ததும், தனக்கு கண்டம் ஏதும் நிகழவில்லையே என்று தன் குருவிடம் கேட்க, அதற்கு அவர் அவனது கால்களைக்  காட்டினார். அங்கு, பாம்பு தீண்டிய வடு இருந்தது. அவனது குலகுரு 'அந்த அரசனின் ஜாதகப்படி அவனை அரவம் தீண்டியது  என்றும், குருவாயூரப்பனின் அருளால் அவனுக்கு ஒன்றும் நேரவில்லை' என்பதையும் விளக்கினார்.

திங்கள், ஜூலை 18, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்ரம் - 6 (பிறவியென்னும் பெரும் மரம்)

ஸம்ஸாரவ்ருக்ஷ மகபீஜமனந்த கர்ம
சாகாஸதம் கரணபத்ரமனங்க புஷ்பம் |
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (6)

ஸம்ஸாரவ்ருக்ஷம் - பிறவியென்னும் பெரிய மரம், அக - பாவம், பீஜம் - விதை, அனந்த கர்ம - எண்ணிலடங்கா வினைப்பயன்கள், சாகா - கிளைகள், சதம் - நூற்றுக்கணக்கான, கரண - புலனுறுப்புக்கள், பத்ரம் - இலைகள், அனங்க - (தகாத) காமம், புஷ்பம் - மலர்கள், ஆருஹ்ய - ஏறினேன், துக்க பலிதம் - துன்பமென்னும் பழங்கள், பததோ - விழுந்துக் கொண்டிருக்கிறேன், தயாளோ - கருணையே வடிவானவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் ஒரு கொடிய விஷ மரத்தினில் ஏறிவிட்டேன். என்னுடைய பாவம் என்னும் விதியினால் முளைத்த இந்த மரத்தில், (என்னுடைய) எண்ணிலடங்கா வினைப்பயன்கள் என்னும் நூற்றுக்கணக்கான கிளைகளும், புலனுறுப்புக்கள் என்னும் இலைகளும், (தகாத) காமம் என்னும் மலர்களும், துன்பங்கள் என்னும் பழங்களும் உள்ளன. காமத்தின் (இந்த மரத்தின் மலர்கள்) வாசனையால் தூண்டப்பட்டு, துன்பங்கள் என்னும் பழங்களை சுவைத்தேன். அதனால், மேலிருந்து கீழ்நோக்கி தலைகீழாக விழுந்துகொண்டு இருக்கிறேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!! 

பிறப்பும், இறப்பும் மாறி மாறி வந்து நம்மை வருத்தும் இந்தப் பிறவியை மிகப்பெரியதொரு மரமாக ஆதிசங்கரர் உருவகப்படுத்துகிறார். நாம் பற்பல பிறவிகளாய் புரிந்துள்ள பாவங்களே இந்த மரத்தின் விதையாகும். பாவமென்னும் விதையிலிருந்து முளைக்கும் எண்ணிலடங்கா வினைப்பயன்களே இந்த மரத்தின் நூற்றுக்கணக்கான கிளைகள். நமது (கண், காது முதலான)  புலனுறுப்புக்கள் இந்தக் கிளைகளில் தோன்றும் இலைகளாகும். நமது முற்பிறவிக் கருமங்களின் விளைவால் அந்தப் பிறவிகளில் என்னென்னப் புலனின்பங்களில் ஈடுபட்டிருந்தோமோ, அதே புலனின்பங்களில் இப்பிறவியிலும் நாட்டம் வரும். இதற்கு "வாசனை" என்று பெயர். மரங்களில் வாசனையைத் தருவது மலர்கள். இந்த பிறவியென்னும் மரத்தில், தகாத காமத்தில் இச்சையே மலர்கள் (இந்த மலர்கள் நம் முற்பிறவிக் கருமத்தில் வாசனையைத் தூண்டும்). துக்கமும், துன்பமுமே இந்த மரத்தில் பழுக்கும் பழங்கள். இத்தகைய மரத்தில் ஏறிய நாம், வினைப்பயன்களால் நம் வாசனைத் தூண்டப்பட்டு இந்த துக்கமென்னும் பழத்தை உண்கிறோம். அதை உண்டதனால் இந்த மரத்திலிருந்து கீழே விழுகிறோம் (அதாவது, மீண்டும் மீண்டும் கருமங்களும், அதனால் வினைப்பயன்களும், அதனால் துக்கமும், அதனால் மேலும் கருமங்களும் என இந்தப் பிறவிச் சக்கரத்தில் சுழன்று, நரகமென்னும் குழியில் விழுவதை இவ்வாறு உருவகிக்கிறார்). இவ்வாறு துன்பத்திலிருக்கும் தம்மை (நம்மை), திருமகள் கேள்வனாம், கருணையே வடிவானவராம் லக்ஷ்மி நரசிம்மர் கைக்கொடுத்துக் காக்க வேண்டுமென்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார்.

நமது உபநிடந்தங்களிலும், பகவத் கீதையிலும் இந்தப் பிறவியானது தலைகீழாக உள்ள ஒரு மரமாக உருவகிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீமத் பகவத்கீதை 15-வது அத்தியாயத்தின் தொடக்கத்தில் பகவான் இந்தப் பிறவியை இவ்வாறு வர்ணிக்கின்றார் (தமிழாக்கம், பாரதியாரின் பகவத் கீதை உரையிலிருந்து எடுக்கப்பட்டது).

ஊர்த்வ மூலம்  அதஹ் சாகம் அஸ்வத்தம் ப்ராஹூர் அவ்யயம் 
சந்தாம்ஸி யஸ்ய பர்னானி யஸ் தம் வேத ஸ வேதவித் (15.1)
அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளும் உடையதோர் அரசமரத்தைப் போன்றது  என்பர். இதன் இலைகளே  வேதங்கள்.அதை அறிவோனே வேதமறிவோன்.

அதஸ் சோர்த்வம் ப்ரஸ்ர்தாஸ் தஸ்ய சாகா 
குண ப்ரவ்ருத்த விஷய ப்ரவாள:
அதஸ் ச மூலான்யனுசந்ததானி 
கர்மானுபந்தீனி மனுஷ்ய லோகே (15.2)
அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி, விஷயத்  தளிர்களுடன், பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.

இதை தலைகீழான மரமாக உருவகிக்கக் காரணம்: 'இந்தப் பிறவி எவ்வாறு உண்டாயிற்று என்ற கேள்வியில் தொடங்கி இந்த மரத்தின் மூலத்தை அறிய முற்படுபவன் மேலே உயருகிறான்; தலைகீழான மரத்தின் பழங்கள் கீழே இருக்கும். அதை சுவைக்க முற்படுபவன் தன்னிலையினின்றும் கீழ்நோக்கி வீழ்கிறான்'.

புதன், ஜூலை 13, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்ரம் - 5 (பிறவிப் பெருங்கடல்)

ஸம்ஸார ஸாகர விஷால கரால கால 
நக்ரக்ரஹ க்ரஹண நிக்ரஹ விக்ரஹஸ்ய |
வ்யக்ரஸ்ய ராக ரஸனோர்மி நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (5)

ஸம்ஸார - இந்தப்பிறவியானது, ஸாகர - பெருங்கடல், விஷால - கரை காண இயலாது பரந்து விரிந்துள்ள, கரால - அச்சமூட்டும், கால - காலமென்னும், நக்ரக்ரஹ - முதலைகளால் கடித்தும், க்ரஹண - பீடிக்கப்பட்டும்,  நிக்ரஹ - துன்புற்ற, விக்ரஹஸ்ய - நிலையில் (உள்ளேன்), வ்யக்ரஸ்ய - அலைக்கழிக்கப்பட்டு, ராக - உணர்ச்சி, ரசன - (புலனின்பங்களில்) சுவை, ஊர்மி - பேரலைகளால், நிபீடிதஸ்ய - துன்புறுகிறேன், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி -  அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியென்னும் கரை காண இயலாத பெருங்கடலில் வீழ்ந்து தத்தளிக்கிறேன். காலமென்னும் முதலைகள் என்னை பீடித்து, தனது கூறிய பற்களால் கடித்துத் துன்புறுத்துகிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, புலனின்பங்களின் சுவை என்னும் பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு மிகுந்த துன்பம் அடைந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

நமது இந்தப் பிறவியை வர்ணிக்க இந்த துதியை விட வேறு பொருத்தமான துதி கிடைப்பது அரிது. இந்தப் பிறவியானது அச்சமூட்டும், கரை காண முடியாத  பெருங்கடலாகும். காலமென்னும் முதலைகள் நம்மைக் தினமும் கடித்துக்கொண்டிருக்கின்றன.

இதனால் பீடிக்கப்பட்டிருக்கும் நாம், அதை உணர்வது கூட கிடையாது. அடக்க முடியாத உணர்ச்சிகள், புலனின்பங்களை சுவைத்துக் கொண்டு, அவற்றிலேயே பொழுதைப் போக்கிக்கொண்டு  இருக்கிறோம். ஆனால், இந்த உணர்ச்சிகளும், சுவையும் இந்தக் கடலில் உள்ள பேரலைகளாகும். அவற்றால் நாம் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய ஆபத்தான கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தம்மை (நம்மை), ஒரு படகு போன்று வந்து காக்கவேண்டும் என்று லக்ஷ்மிநரசிம்மரை ஆதிசங்கரர் வேண்டிக்கொள்கிறார் (பகவானை "பவாப்தி போத" என்று தொடக்கத்திலேயே ஆதிசங்கரர் கூறியுள்ளார்).

திங்கள், ஜூலை 11, 2016

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மக் கராவலம்ப ஸ்தோத்திரம் - 4 (பிறவியென்னும் பாழுங்கிணறு)

ஸம்ஸார கூபம் அதிகோரம் அகாதமூலம் 
ஸம்ப்ராப்ய துக்க ஸதஸர்ப்ப ஸமாகுலஸ்ய |
தீனஸ்ய தேவ க்ருபணா பதமாகதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (4)

ஸம்ஸார - இந்தப்பிறவியானது, கூபம் - பாழுங்கிணறு (அல்லது குழி என்றும் கொள்ளலாம்), அதிகோரம் - அச்சமூட்டும், அகாதமூலம் - ஆழங்காணமுடியாத, ஸம்ப்ராப்ய - அதில் விழுந்துள்ள எனக்கு, துக்க சத ஸர்ப்ப - துன்பங்கள் எனப்படும் நூற்றுக்கணக்கான அரவங்கள், ஸமாகுலஸ்ய - குழுமி இருக்கின்றன, தீனஸ்ய - (இவற்றால்) துன்பமடைந்துள்ள நான், தேவ - கடவுளே, க்ருபாணா - துன்பமான, பதம் - நிலையை அடைந்து, ஆகதஸ்ய - வருந்தும் என்னை, லக்ஷ்மிநரசிம்ம -  திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

இந்தப் பிறவியானது ஆழம் காண இயலாத ஒரு பாழுங்கிணறு. இதன் உள்ளே நூற்றுக்கணக்கான அரவங்கள் (பாம்புகள்) என்னைத் தீண்டுகின்றன. இவற்றால் துன்பமடைந்துள்ள எனக்கு திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!
  

இந்தப்பிறவியானது ஆழங்காண இயலா ஒரு பாழுங்கிணறாகும். இதில், நான் எனது வினைப்பயனால் விழுந்துவிட்டேன். அதனுள்ளே நூற்றுக்கணக்கான அரவங்கள் கூட்டம் கூட்டமாய் என்னைத் துன்புறுத்துகின்றன (நமது வினைப்பயனால் விளையும் துன்பங்களையே ஆதிசங்கரர் அரவங்களாக உருவாக்கப்படுத்துகிறார்). இவற்றால் பீடிக்கப்பட்டு, இந்த ஆழந்தெரியாத கிணற்றிலிருந்து மீண்டு வரும் வழி தெரியாது மிகவும் துன்பமான நிலையில் உள்ளேன். நாமோ ஆழந்தெரியாத கிணற்றுக்குழியில் விழுந்துள்ளோம். நம்மைக் காப்பாற்ற வேண்டுமெனில் அவர் மேலான இடத்தில் இருக்கவேண்டும். மேலும், அவருக்கு இந்தக் கிணற்றுக்குழியிலிருந்து வெளியேறும் வழிவகைத் தெரிந்திருக்க  வேண்டும். அத்தகையவர் நமது கடவுளான, கருணை வடிவான லக்ஷ்மிநரசிம்மர். எனவே, எனது கடவுளே!!! லக்ஷ்மிநரசிம்மரே!!! எனக்குக் கைக்கொடுத்து உதவி அருளுங்கள் என்று வேண்டுகிறார்.

நாம் ஏன் இந்த ஆழந்தெரியாக் கிணற்றுக்குள் விழுந்தோம்? இந்த அரவங்கள் நம்மை எவ்வாறு துன்புறுத்துகின்றன என்பதை பின்னர்  சில துதிகளில் ஆதிசங்கரர் விளக்குகிறார். நாம் இவை அனைத்தையும் ஒன்று சேர கற்று, இதன் உட்பொருளை உணரவேண்டும்.

வெள்ளி, ஜூலை 08, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 3 (பிறவியென்னும் பெருங்காடு)

ஸம்ஸார கோர கஹனே சரதோ முராரே 
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்தித்தஸ்ய |
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய  
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (3)

ஸம்ஸார - இந்தப் பிறவியென்னும், கோர - அச்சமூட்டும், கஹனே - இருண்ட காட்டினில், சரதோ - சென்றுகொண்டிருக்கிறேன், முராரே - முரன் என்னும் அரக்கனை அழித்தவரே, மார - (தகாத) காமமென்னும், உக்ர - தீவிரமான, பீகர - அச்சமூட்டும், ம்ருக - விலங்கு, ப்ரவர - கொடிய, ஆர்த்திதஸ்ய - துன்பத்தை விளைவிக்கும், ஆர்த்தஸ்ய - துன்புறுகிறேன், மத்ஸர - பொறாமை போன்ற குணங்கள், நிதாக - தீ, நிபீடிதஸ்ய - என்னை பற்றி இருப்பதால், லக்ஷ்மிநரசிம்ம - திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள், கராவலம்பம் - கைக்கொடுத்து.

பிறவியென்னும் அச்சமூட்டும் இருண்ட காட்டினுள் நான் சென்றுகொண்டிருக்கிறேன். (தகாத) காமமென்னும் கொடிய விலங்குகளாலும், பொறாமை போன்ற காட்டுதீயாலும் நான் மிகவும் துன்புறுத்தப் படுகிறேன். முரன் போன்ற பல அசுரர்களை கொன்றொழித்தவரே, திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

இந்தத் துதியிலிருந்துத் தொடங்கி அடுத்த பல துதிகளில் நாம் இருக்கும் இந்த உலகியல்வாழ்க்கையின் உண்மை நிலையை ஆதிசங்கரர் எடுத்துரைக்கிறார். இங்கு, இந்தப் பிறவியை ஒரு அச்சமூட்டும், இருண்ட காடாக உருவகப்படுத்துகிறார் (அஞ்ஞானம் அல்லது அறியாமையே இந்த இருள்). காடு என்றால் விலங்குகளும், காட்டுத்தீயும் இருக்குமல்லவா? நம்மால் அடக்கமுடியாத தகாத காமமே இந்த காட்டில் உள்ள கொடிய விலங்கு. நாம் மற்றவர் மீது கொண்டிருக்கும் பொறாமையே நம்மை எரிக்கும் காட்டுத்தீ. இந்த இருண்டக் காட்டினுள் இவ்வாறு விலங்குகளிடமிருந்தும், காட்டுத்தீயிலிருந்தும் நம்மைக் காக்க லக்ஷ்மிநரசிம்மரால் மட்டுமே முடியும். அவர் முன்பே (எவ்வாறு காடும், விலங்கும், காட்டுத்தீயும் நம்மை துன்புறுத்துகின்றதோ, அவ்வாறே முன்பு தேவர்களைத் துன்புறுத்திய) முரன் என்ற அரக்கனை அழித்தவர். எவ்வாறு, முன்பு தேவர்களைக் கர்த்தரோ, அவ்வாறே, தனது அடியவர்கள் துன்பமடைந்து, தன்னை சரண் புகுந்தால் அவர் காத்து அருளுவார். அந்த லக்ஷ்மிநரசிம்மர் இந்த பிறவிப்பெருங்கடலிலிருந்து கைக்கொடுத்து மீட்டு அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

வியாழன், ஜூலை 07, 2016

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 2 (தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவன்)

ப்ரஹமேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீட கோடி 
சங்கட்டித்தாங்க்ரி கமலாமல காந்தி காந்த |
லக்ஷ்மீலஸத் குச ஸரோருஹ ராஜஹம்ஸ 
லக்ஷ்மிநரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (2)


ப்ரஹ்ம - பிரமன் (நான்முகக்கடவுள்), இந்த்ர - இந்திரன் (தேவர்களின் தலைவன்), ருத்ர - பரமசிவன், மருத் - மருத் கணங்கள், அர்க்க - கதிரவன், கிரீட - மகுடங்கள், கோடி - கோடிக்கணக்கான, சங்கட்டித - குவிந்து, அங்க்ரி - திருப்பாதங்கள், கமல - தாமரை, அமல - தூய்மையான, காந்தி - ஒளியால், காந்த - மனங்கவர், லக்ஷ்மீலஸத் - திருமகளை அணைத்துக்கொண்டு, குச - தாயாரது திருமார்பாகிய, ஸரோருஹ - தாமரையில், ராஜஹம்ஸ - அன்னப்பறவை போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி - அருளுங்கள்கராவலம்பம் - கைக் கொடுத்து.

பிரமன், இந்திரன்,  பரமசிவன், மருத் கணங்கள், கதிரவன் போன்ற கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்கள் கூடி சேர்ந்து ஒளிவிடுவதால், மேலும் ஒளியூட்டப்பட்ட, தாமரை மலரைப்போன்ற சிவந்த, தூய்மையான, மனங்கவர் திருப்பாதங்களை உடையவரே!!! திருமகளை அணைத்துக்கொண்டு, தாமரை மலர் போன்ற அவரது (தாயாரது) திருமார்பகத்தில் மீது விளையாடும் ஒரு சிறந்த அன்னப்பறவையைப்போல இருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

பகவானின் பெருமைகளை முதல் துதியில் ஒருவாறு கூறிய ஆதிசங்கரர், இந்தத் துதியில் அதை மீண்டும் விரித்துரைக்கிறார். முதல் இரண்டு  அடிகளால், நரசிம்மரே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்கிறார். படைக்கும் கடவுள் பிரமன், அழிக்கும் கடவுள் பரமசிவனார், தேவர்களின் அரசனான இந்திரன், (அவனுக்குத்  துணையாக தேவர்களின் படையில் இருக்கும்) மருத் கணங்கள், இந்த பூமிக்கு ஒளி வழங்கும் கதிரவன் போன்ற மிகச்சிறந்த தேவர்களும் நரசிம்மரை பணிந்து வணங்குவர். அப்பொழுது அந்தக் கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்களிலிருந்து வீசும் ஒளியானது, நரசிம்மரின்  தாமரைப் போன்ற சிவந்த திருப்பாதங்களுக்கு மேலும் ஒளியூட்டும். அத்தகைய தூய்மையான பாதங்களை நாம் பற்றினால் நற்பேறு பெறலாம்.

அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமென்றால் நம் போன்றோர் அவரை அணுக இயலுமா? இதற்கு மூன்றாம் அடியில் விளக்கம் அளிக்கிறார். அவர் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் ஆயினும், நமக்கெல்லாம் தாயான திருமகள் கேள்வன். எவ்வாறு ஒரு அன்னமானது தாமரை மலரில் விளையாடுமோ, அவ்வாறே பகவான் தாயாரான திருமகளுடன் போகம் தூய்ப்பவர். திருமகளை முன்னிட்டு நாம் அவரைப் பணிந்தால் நம்மைக் கைவிடமாட்டார். எனவேதான், இந்த துதி முழுவதிலும் நரசிம்மரை மட்டும் குறிக்காது 'லக்ஷ்மீநரசிம்மரை' வணங்குகிறார் ஆதிசங்கரர்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - 1 (லக்ஷ்மிநரசிம்மரே சரணம்!!!)

ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ரபாணே 
போகீந்த்ர போக மணிரஞ்சித புண்யமூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மிநரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)

ஸ்ரீமத் - செல்வம் நிறைந்த, பயோநிதி - பாற்கடலில், நிகேதன -இருக்கின்ற, சக்ரபாணே - (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர - அரவங்களின் அரசன், போகமணி - (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித - ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்யமூர்த்தே - நற்கருமமே வடிவானவரே, யோகீச - யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத - என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி - பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப்பெருங்கடலை, போத - கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மிநரசிம்ம - திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம - எனக்கு, தேஹி -அருளுங்கள், கராவலம்பம் - கைக் கொடுத்து.

செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கியுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாகமணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலைநின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப்பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்துஅருளுங்கள்!!!

இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார். 

பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும்பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்). 

நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளிவீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.

நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத்தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.

கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணையிட்டு வழிநடத்தும் தலைவராக உள்ளார்.

இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில்தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்துவிடாமல் இருக்க, 'என்றென்றும் நிலைநின்று இருப்பவர்' என்று குறிப்பிடுகிறார்.

தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின்படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.

அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக்கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக்கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து 'லக்ஷ்மிநரசிம்மரின்' அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.

இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப்பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார். இந்த துதி முழுவதும், நம் கர்மவினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச்சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

திங்கள், ஜூலை 04, 2016

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் - முன்னுரை

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலைநிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி "ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்" ஆகும். இந்த துதி பிறந்த வரலாற்றை இந்தப் பதிவிலும் அதன் பொருளை பின்வரும் பதிவுகளிலும் காண்போமாக.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் 'கரம்' என்றால் 'கை' என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). 'அவலம்ப' என்றால் 'ஆதாரம்' அல்லது 'தாங்குதல்' என்று பொருள். 'கராவலம்பம்' என்றால் 'நம்மைக் கைக்கொடுத்துத் தாங்குதல்' அல்லது 'நமக்குக் கைக்கொடுத்து உதவுதல்' என்று பொருள் கொள்ளலாம். இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி, பகவான் 'ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை' இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கைக்கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதிசங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இருவேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.


1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் 'சுரேஷ்வராச்சார்யார்' என்று பெயர்பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார். ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபாயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில்பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்தவேண்டும் என்று மனுஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூணவேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்கவொண்ணாத உபயபாரதி, 'கணவனும் மனைவியும் இணைபிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்லவேண்டும்' என்று ஆதிசங்கரரிடம் கூறினாள். இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்லமுடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும்). இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆதிசங்கரர், தான் இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால்வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம்கொண்டாள். தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதிசங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படைவீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர். அதன்படி, வீரர்களும் ஆதிசங்கரரின் உடலுக்குத் தீவைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்துவிட்டது. தமக்கு 'கரங்கள்' (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த 'கராவலம்ப ஸ்தோத்திரம்' என்பது முதல் வரலாறு.
இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப்பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபயபாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதியையும் அதன் பொருளையும் பின்வரும் பதிவுகளில் காண்போம்.