சனி, ஜூன் 10, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 221

74. மனோஜவஸ்தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |

வஸுப்ரதோ வாஸூதேவோ வஸுர்வஸுமனா ஹவி: || 

இந்த எழுபத்து நான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

690. மனோஜவ:, 691. தீர்த்தகர:, 692. வஸுரேதா:, 693. வஸுப்ரத: |

694. வஸுப்ரத:, 695. வாஸுதேவ:, 696. வஸு:, 697. வஸுமனா:, 698. ஹவி: ||

690. மனோஜவாய நம:

மனஸோ மனதின் 

வேக இவ வேகத்தைப் போன்று 

வேகோSஸ்ய விரைவாக 

ஸர்வம் அனைத்தையும் 

கதத்வாத் கடக்கிறார் 

மனோஜவ: எனவே பகவான் 'மனோஜவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மனதின் வேகத்திற்கு ஒப்பான வேகத்தோடு அனைத்தையும் கடக்கிறார். எனவே அவர் 'மனோஜவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

691. தீர்த்தகராய நம:

சதுர்தஶவித்யானாம் பதினான்கு வகை வித்யைகளையும் (பரப்ரஹ்மத்தை அடையும் வழிகள்) 

பாஹ்யவித்யா வேதத்திற்குப் புறம்பான வழிமுறைகளையும் 

ஸமயானாம் பல்வகை சமயங்களையும் 

ப்ரணேதா உருவாக்கியவர் 

ப்ரவக்தா சேதி அவற்றை மற்றவருக்கு போதித்தவர் 

தீர்த்தகர: எனவே பகவான் 'தீர்த்தகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் 'தீர்த்தங்கள்' என்று அழைக்கப்படும் பதினான்கு வகை வித்தைகளையும், வேதத்திற்குப் புறம்பான வழிமுறைகளையும், பல்வகை சமயங்களையும் உருவாக்கி (கர்த்தா) அவற்றை மற்றவர்களுக்கும் போதித்தார். எனவே அவர் 'தீர்த்தகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஹயக்ரீவரூபேண ஹயக்ரீவ அவதாரத்தில் 

மதுகைடபௌ மது, கைடபர்கள் ஆகிய அசுரர்களை 

ஹத்வா கொன்று 

விரிஞ்சாய நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவிற்கு 

ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில் 

ஸர்வா: அனைத்து 

ஶ்ருதி: வேதங்களையும் 

அன்யாஸ்ச மற்ற 

வித்யா உபதிஶன் உபதேசித்தார் 

வேதபாஹ்யா வேதத்திற்குப் புறம்பான 

வித்யா: வித்தைகளை ஸுரவைரினாம் நல்லாருக்கு (தேவர்களுக்கு) எதிரிகளுக்கு 

வஞ்சனாய வஞ்சனையாக 

சோபதிதேஶேதி அவர்களுக்கு உபதேசித்தார் 

பௌராணிகா: புராணிகர்கள் (புராண கதைகளை காலக்ஷேபம் செய்பவர்கள்) 

கதயந்தி கூறுவர்.

ஒரு முறை ப்ரஹ்மா வேதங்களை மறந்த பொழுது, அவரது படைப்பு தொழில் நின்று போனது. ப்ரஹ்மாவின் வேண்டுதலை ஏற்று பகவான் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து மது மற்றும் கைடபர் என்ற அஸுரர்களை அழித்து ப்ரஹ்மாவிற்கு வேதங்களை மீண்டும் உபதேசித்தார். மேலும், வேதத்திற்கும், தேவர்களுக்கும் புறம்பான அரசர்களை திசை திருப்பும் பொருட்டு பகவான் புத்த, மற்றும் ஜைன அவதாரங்களை எடுத்து அவர்களுக்கு வேதத்திற்குப் புறம்பான கருத்துக்களையும் போதித்தார். இந்த சரித்திரங்கள் ஸ்ரீமத் பாகவத மற்றும் விஶ்ணு புராணங்களில் உள்ளது. பௌராணிகர்களால் காலக்ஷேபங்களில் கூறப்படுகிறது.

692. வஸுரேதஸே நம:

வஸு ஸுவர்ணம் 'வஸு' என்றால் தங்கம் 

ரேதோSஸ்யேதி 'ரேதஸ்' அதாவது வீரியத்தை உடையவராதலால் 

வஸுரேதா பகவான் 'வஸுரேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தங்கமயமான வீரியத்தை (ரேதஸை) உடையவராதலால் பகவான் 'வஸுரேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தேவ: பூர்வமப: ஸ்ருஶ்ட்வா தாஸு வீர்யமபாஸ்ருஜத் |

ததண்டமபவத்தைமம் ப்ரஹ்மண: காரணம் பரம் ||

அந்தப் பரம்பொருள் (பரப்ரஹ்மம்) முதலில் தண்ணீரை உருவாக்கி அதில் தனது வீரியத்தை வெளியிட்டார். அந்த வீரியம் தங்கமயமான அண்டமாக உருவெடுத்தது. அந்த அண்டத்துள் ப்ரஹ்மா தோன்றினார்.

இதி வ்யாஸ வசனாத் | இது பகவான் வ்யாஸ மஹரிஷியின் கூற்றாகும். 

693. வஸுப்ரதாய நம:

வஸு தனம் 'வஸு' என்றால் செல்வம் 

ப்ரகர்ஶேண நன்றாக (கைகளை திறந்து) 

ததாதி வழங்குவதால் 

ஸாஷாத்தனாத்யக்ஷோயம் நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன் கூட 

இதரஸ்து தத்ப்ரஸாதாத் பகவானை பிரார்த்தித்து அவரது அருளாலேயே 

தனாத்யக்ஷ இதி செல்வத்திற்கு அதிபதியானான் 

வஸுப்ரத: எனவே பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸு' என்றழைக்கப்படும் செல்வத்தை பகவான் தனது கைகளைத் திறந்து அனைவருக்கும் வாரி வழங்குகிறார். செல்வத்தின் அதிபதி என்றழைக்கப்படும் குபேரனும் கூட பகவானை பிரார்த்தித்து அவரது அருளாலேயே செல்வத்தை (செல்வத்திற்கு அதிபதி என்ற பதவியை) அடைந்தான். எனவே பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

694. வஸுப்ரதாய நம:

வஸு ப்ரக்ருஶ்டம் மோக்ஷாக்யம் 'வஸு' அதாவது மிகச்சிறந்த (உயர்ந்த) முக்தியை 

ஃபலம் பலனை 

பக்தேப்ய: தனது அடியவர்களுக்கு 

ப்ரததாதீதி வழங்குகிறார் 

த்விதீயோ வஸுப்ரத: எனவே பகவான் (இரண்டாவது முறையாக) 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு 'வஸு' என்றழைக்கப்படும் உயர்ந்த பலனாகிய முக்தியை அளிக்கிறார். எனவே அவர் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸ்ரநாமத்தில் பல திருநாமங்கள் இரண்டு முறை வந்துள்ளன. ஆனால், அடுத்தடுத்து ஒரே திருநாமம் வருவது இங்கு மட்டுமே.

'விஞ்ஞானமானந்த ப்ரஹ்மராதிர்தாது பராயணம் திஷ்டமானஸ்ய தத்வித:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.9.28)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: பரப்ரஹ்மம் விஞ்ஞான மயமாகவும் ஆனந்த மயமாகவும் உள்ளது. பரப்ரஹ்மம் செல்வத்தை அளிப்பதோடு, ப்ரஹ்மானந்தத்தில் நிலைபெற்றிருக்கும் ஞானிக்கும் புகலிடமாக உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ஸுராரீனாம் நல்லோரின் (ஸுரர்கள்) எதிரிகளின் (அஸுரர்களின்) 

வஸூனி செல்வத்தை 

ப்ரகர்ஶேண நன்றாக 

கண்டயன் அழிக்கிறார் 

வா வஸுப்ரத: எனவே பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அஸுரர்களின் (நல்லோரின் எதிரிகளின்) செல்வத்தை வளரவிடாது நன்றாக அழிக்கிறார். எனவே, பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

695. வாஸுதேவாய நம:

வஸுதேவஸ்யாபத்யம் வஸுதேவரின் புதல்வராக அவதரித்ததால் 

வாஸுதேவ: பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுதேவரின் புதல்வராக அவதரித்ததால் பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

696. வஸவே நம:

வஸந்தி பூதாநி தத்ர அவரிடத்தில் அனைத்து பூதங்களும் (பருப்பொருட்களும்) உறைகின்றன 

தேஶ்வயமபி வஸதீதி அவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறார் 

வஸு: எனவே பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடத்தில் அனைத்து ஜீவராசிகளும் (பருப்பொருட்களும்) உறைகின்றன. அவரும் அனைத்திற்குள்ளும் (அனைவருக்குள்ளும்) வசிக்கிறார் (உறைகிறார்). எனவே அவர் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸு என்ற திருநாமத்திற்கு முந்தைய விளக்கங்கள்: முன்னர் 104-வது திருநாமத்தில் இந்த உரையை அளித்திருந்தாலும் பகவான் அக்னியின் வடிவாக இருக்கிறார் என்று ஆச்சார்யாள் பொருளுரைத்திருந்தார். 270-வது திருநாமத்தில் பிறருக்கு அளிக்கப்படும் செல்வமாக இருக்கிறார், மாயையினால் தனது இயற்கையான உருவத்தை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார், வாயு பகவானின் வடிவத்தில் ஆகாயத்தில் மட்டுமே வசிக்கிறார் என்று மேலும் பல விளக்கங்களை ஆச்சார்யாள் அளித்துள்ளார். எனவே, இங்கு புனருக்தி தோஷம் இல்லை.

697. வஸுமனஸே நம:

அவிஶேஶேண எவ்வித வேறுபாடுமின்றி 

ஸர்வேஶு விஶயேஶு அனைத்து பதார்த்தங்களிலும் 

வஸதீதி நீக்கமற நிறைந்திருக்கும் பொருளுக்கு 

வஸு 'வஸு' என்று பெயர். 

தாத்ருஶம் இவ்வாறான (அனைத்திலும் உறையும்) 

மனோSஸ்யேதி மனதை உடையவராதலால் 

வஸுமன: பகவான் 'வஸுமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளுக்கு 'வஸு' என்று பெயர். இவ்வாறான (அனைத்திலும் உறையும்) மனதை உடையவராதலால் பகவான் 'வஸுமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 105-வது திருநாமத்தில் விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை 'மிகச்சிறந்த மனமுடையவர்' என்று ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார். வஸு மற்றும் வஸுமன: என்ற திருநாமங்கள் முன்பும் (104 மற்றும் 105வது திருநாமங்களாக) அடுத்தடுத்து வந்தன. இங்கும் இதே திருநாமங்கள் அடுத்தடுத்து வருவது சிறப்பு. 

698. ஹவிஶே நம:

'ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.24)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ப்ரஹ்மத்திற்கு அர்ப்பணமாக ப்ரஹ்ம ஹவியை (ப்ரஹ்மத்தால் ஹோமம் பண்ணுவோன், ப்ரஹ்மத்தின் செய்கையில் சமாதானம் எய்தினோன், அவன் ப்ரஹ்மத்தை அடைவான்).

இதி பகவத்வசனாத் ஹவி:

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவானின் இந்த கூற்றின்படி பரப்ரஹ்மமான பகவான் 'ஹவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!