ஞாயிறு, ஜூன் 13, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 184

37. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர: |

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

336. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |

342. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்: 

336. ஓம் அஶோகாய நம:

ஶோகாதிஶட்பிர்வர்ஜித: சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர் ஆதலால் 

அஶோக: பகவான் 'அஶோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர். எனவே அவர் 'அஶோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

337. ஓம் தாரணாய நம:

ஸம்ஸாரஸாகராத் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று 

தாரயதீதி (நம்மைத்) தாண்டுவிப்பதால் 

தாரண: பகவான் 'தாரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று தாண்டுவிக்கிறார். எனவே, அவர் 'தாரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் தாண்டுவித்தல் என்ற பொருளில் வருகிறது. 

338. ஓம் தாராய நம:

கர்ப (ஒரு தாயின் கர்ப்பத்தில்) உருவாதல் 

ஜன்ம பிறத்தல் 

ஜரா மூப்பு 

ம்ருத்யு இறத்தல் 

லக்ஷணாத் பயாத் (இவற்றால் நமக்கு ஏற்படும்) அச்சங்களைப் 

தாரயதீதி போக்குகிறார் 

தார: எனவே பகவான் 'தார:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது கர்ப்பவாசம், பிறத்தல், மூப்படைதல் மற்றும் இறப்பு ஆகிய (அதாவது பிறப்பு இறப்பென்னும் இந்தப் பிறவி சுழற்சிகளால் உருவாகும்) அச்சங்களைப் போக்குகிறார். எனவே, அவர் 'தார:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் காத்தல் என்ற பொருளில் வருகிறது. 

339. ஓம் ஶூராய நம:

விக்ரமணாத் மிகுந்த வீரமும், துணிவும் உடையவராதலால் 

ஶூர: பகவான் 'ஶூர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகுந்த வீரமும், துணிவும் உடையவர். எனவே, அவர் 'ஶுர: ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

340. ஓம் ஶௌரயே நம:

ஶூரஸ்யாபத்யம் ஸூரரின் மகனான 

வஸுதேவஸ்ய வஸுதேவரின் 

ஸுத: மகனாகப் பிறந்ததால் 

ஶௌரி: பகவான் 'ஶௌரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் ஸூரரின் மகனான வஸுதேவருக்கு மகனாக (ஸூர வம்ஸத்தில்) பிறந்ததால் 'ஶௌரி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுதேவரின் தந்தையின் பெயர் 'ஸூரர்'. அவரது பேரனாதலால் பகவான் 'ஶௌரி:' என்று அழைக்கபடுகிறார்.

341. ஓம் ஜனேஶ்வராய நம:

ஜனானாம் ஜந்தூனாம் 'ஜனங்கள்' அதாவது அனைத்து உயிரினங்கள் 

ஈஶ்வரோ அவை அனைத்தையும் ஆட்சி செய்பவராக இருப்பதால் 

ஜனேஶ்வர: பகவான் 'ஜனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் ஆளும் ஈஶ்வரராய் இருப்பதால் பகவான் 'ஜனேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

342. ஓம் அனுகூலாய நம:

ஆத்மாவேன ஹி உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார் 

ஸர்வேஶாம் அனைவரின் 

அனுகூல: எனவே, பகவான் 'அனுகூல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார், 

ந ஹி ஸ்வஸ்மின் ப்ராதிகூல்யம் தனக்குக் கெடுதலை விளைவிக்கும் செயல்களை 

ஸ்வயமாசரதி தானே எவரும் புரிவதில்லை.

பகவான் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார். எவரும் தனக்கு தானே கெடுதல் தரும் செயல்களைப் புரிவதில்லை. எனவே, பகவானும் நமக்கு உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் நமக்கு நன்மைகளையே செய்கிறார் (கெடுதல்களை அல்ல). எனவே, அவர் 'அனுகூல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

343. ஓம் ஶதாவர்த்தாய நம:

தர்மத்ராணாய அறத்தைக் காக்கும் பொருட்டு (அல்லது அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு) 

ஶதம் நூற்றுக்கணக்கான 

ஆவர்த்தனானி ப்ராதுர்பாவா அஸ்யேதி 'ஆவர்த்தனங்கள்' அதாவது அவதாரங்களை எடுக்கிறார் 

ஶதாவர்த்த: எனவே பகவான் 'ஶதாவர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தைக் காத்து, நிலைநிறுத்தும் பொருட்டு நூற்றுக்கணக்கான அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'ஶதாவர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

1. இங்கு ஆவர்த்தனம் என்ற சொல் 'அவதாரம்' என்ற பொருளில் விவரிக்கப்பட்டுள்ளது

2. ஆதிசங்கர பகவத்பாதாள் பகவானுக்கு தசாவதாரம் என்றில்லை; நூற்றுக்கணக்கான அவதாரங்கள் உள்ளன என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.

3. நாமெல்லாம் நன்கறிந்த ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்லோகம் இது: "பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஶ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே" 

நாடிஶதே நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில் 

ப்ராணரூபேண ப்ராணவாயுவின் வடிவில் 

வர்தத இதி வா வசிக்கிறார் 

ஶதாவர்த்த: எனவே, பகவான் 'ஶதாவர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில் ப்ராணவாயுவின் வடிவில் வசிக்கிறார். எனவே, அவர் 'ஶதாவர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது உடலில் 72000 நாடிகள் இருப்பதாக கூறுகின்றனர். மரண காலத்தில் நமது ஆத்மா இவற்றுள் எந்த நாடியின் வழியாகவும் வெளியேறலாம். ஆனால், முக்தி அடைவோரின் ஆத்மா ஸுஶும்னா எனும் நாடியின் வழியே நமது உச்சந்தலையிலுள்ள ப்ரஹ்மரந்தரத்தின் வழியே புறப்பட்டு செல்லும். 

344. ஓம் பத்மினே நம:

பத்மம் தாமரையை 

ஹஸ்தே கைகளில் 

வித்யத இதி ஏந்தியுள்ளார் 

பத்மீ எனவே பகவான் 'பத்மீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது கையில் தாமரையை ஏந்தியுள்ளார். எனவே அவர் 'பத்மீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

345. ஓம் பத்மநிபேக்ஷணாய நம:

பத்மநிபே தாமரையை ஒத்த 

ஈக்ஷணே த்ருஶாவஸ்யேதி 'ஈக்ஷணை' அதாவது இரண்டு கண்களை உடையவராதலால் 

பத்மநிபேக்ஷண: எனவே பகவான் 'பத்மநிபேக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை (தாமரை இதழ்களை) ஒத்த இரு கண்களை உடையவராதலால் அவர் 'பத்மநிபேக்ஷண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக