திங்கள், ஏப்ரல் 09, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 30

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்று கௌடபாத காரிகை, ஸ்ரீ விஶ்ணு புராணம் மற்றும் சில உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.


மனோத்ருஶ்யமிதம் த்வைதம் யத்கிஞ்சித் ஸசராசரம் |
மனஸோ ஹ்யமனீபாவே த்வைதம் நைவோபலப்யதே || (கௌடபாத காரிகா 3.32)
கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: இங்கு பல்வேறான மாற்றங்களாகத் தெரியும் அனைத்தும் மனத்தால் கற்பிக்கப்பட்டவைகளாகும். மனம் தனது கற்பனைகளிலிருந்து ஒடுங்கி லயமடையும் பொழுதும் இந்த வேற்றுமைகளும் மறைந்து விடுகின்றன.

ப்ரபஞ்சோ யதி வித்யேத நிவர்தேத ந ஸம்ய: |
மாயாமாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தத: || (கௌடபாத காரிகா 1.17)
கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: இதில் சந்தேகம் வேண்டாம். இங்கு பிரபஞ்சமாக தெரியும் அனைத்தையும் மனத்தால் நீக்கிவிட முடியும் (அனைத்தும் மனதின் கற்பனையே). ஏனெனில், இரண்டாகத் தெரியும் (வெவ்வேறாகத் தெரியும்) அனைத்தும் மாயையின் வடிவங்களாகும். (ஜீவாத்மாவும், பரமாத்மாவும்) ஒன்றே என்ற அத்வைதமே உண்மையாகும்.

யதா ஸ்வப்னே த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மன: |
ததா ஜாக்ரத்த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மன: || (கௌடபாத காரிகா 1.17)
கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு கனவில் பலவற்றை மனம் கற்பனை செய்கிறதோ, அதைப்போலவே, விழித்திருக்கும் பொழுதும் மாயையின் வசப்பட்டு பலவற்றை மனம் கற்பனை செய்கிறது.
இத்யாதி கௌடபாதே இவ்வாறு கௌடபாத காரிகையில் கூறப்பட்டுள்ளது.

தர்கேணாபி ப்ரபஞ்சஸ்ய மனோமாத்ரத்வமிஶ்யதாம் |
த்ருஶ்யத்வாத் ஸர்வபூதானாம் ஸ்வப்னாதிவியோ யதா||
நாம் காணும் அனைத்தும் கனவில் காணும் உருவங்கள் போலவேயாகும். எனவே, ஒரு வாதத்திற்காக உலகமும், வெவ்வேறு பொருள்களும் உண்டு என்றாலும், அதுவும் மனதின் கற்பனையேயாகும்.

த்விதீயாத் வை பயம் பவதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.2)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ப்ரஹ்மத்தைத் தவிர்த்து) இரண்டாவது ஒன்றைக் காணும்பொழுது நிச்சயமாக பயம் உருவாகிறது.

ஞாதே த்வாத்மனி நாஸ்த்யேதத் கார்யகாரணதாத்மன: |
ஆத்மாவை அறிந்த பிறகு அந்த ஆத்மாவின் காரண காரியங்கள் அனைத்தும் (அதன் தேவை முடிந்துவிடும் என்பதால்) நின்று விடும்.

ஏகோ தேவ: ஸர்வபூதேஶு கூட: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே. அவர் அனைத்து ஜீவராசிகளிலும் மறைந்துள்ளார்.

அஸங்கோ ஹ்யயம் புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.15)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே. அவர் அனைத்து ஜீவராசிகளிலும் மறைந்துள்ளார்.

இதி ச இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |
த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.84)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பல்வேறு தோற்றங்களே ஆகும். எனவே, அறிவுடையவர்கள் தமக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வேறுபாடுகள் காணமாட்டார்கள்.

ஸர்வத்ரதைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே தைத்யர்களே (அசுரர்களே)!!! வேற்றுமைகளை கைவிடுங்கள். மற்றவரிடம் வேற்றுமை பாராமையே பகவான் அச்யுதரை வழிபடுவதாகும்.

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |
பரமாத்மனி கோவிந்தே மித்ரா(அ)மித்ராகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.18.37)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தந்தையே!!! பகவான் கோவிந்தர் எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளார். அவரே இந்த ப்ரபஞ்சமாக உள்ளார். அவரே பரமாத்மா. அவரிடம் நட்போ விரோதமோ கொள்ளுதல் என்ற பேச்சிற்கே இடமில்லை (ஏனெனில் அனைத்தும் அவராகவே உள்ளபோது நண்பன் எது, விரோதி எது? இரண்டாவதான ஒன்று இருந்தால் தானே இவ்வாறு தோன்றும்?).

இதி விஶ்ணுபுராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக