திங்கள், ஏப்ரல் 30, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 42

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஶ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.


ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)
மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது 'ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது'

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத: |
அபூர்வோSனந்தரோSபாஹ்யோSநபர: ப்ரணவோSவ்யய’ || (மாண்டுக்ய காரிகா 1 | 26)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
(ஓம் என்னும்) ப்ரணவமே அபர (சகுண) மற்றும் பர (நிர்குண) ப்ரஹ்மம் ஆகும். ஓம் என்ற இந்த ப்ரணவத்திற்கு தொடக்கம் (காரணம்) இல்லை, அது தனித்தன்மை வாய்ந்தது, அதனின்றி வேறொன்றும் இல்லை, எந்த காரண காரியங்களுடனும் தொடர்பு அற்றது.

‘ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்தததைவ ச |
ஏவம் ஹி ப்ரணவம் ஞ்யாத்வா வ்யஶ்னுதே ததனந்தரம்’ || (மாண்டுக்ய காரிகா 1 | 27)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
(ஓம் என்னும்) ப்ரணவமே அனைத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவுமாகும். இந்த பிரணவத்தை இவ்வாறு அறிபவர் ஐயமின்றி அதையே (அந்த பிரணவமாகிய பரப்ரஹ்மத்தையே) அடைவர்.

‘ப்ரணவம் ஹீஶ்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதயே ஸ்திதம் |
ஸர்வவ்யாபினமோங்காரம் மத்வா தீரோ ந ஶோஶதி’ || (மாண்டுக்ய காரிகா 1 | 28)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
(ஓம் என்னும்) ப்ரணவமே அனைவரின் இதயத்தினுள்ளிருக்கும் இறைவனாக அறிவாய். இதை இவ்வாறு உணரும் பகுத்தறிவுடையவர் எக்காலத்திலும் வருத்தமுறுவதில்லை.

‘அமாத்ரோSனந்தமாத்ரஸ்ச த்வைதஸ்யோபஷம: ஶிவ: |
ஒம்காரோ விதிதோ யேன ஸ முனிர்நேதரோ ஜன:’ || (மாண்டுக்ய காரிகா 1 | 29)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
ஒலியற்றதும், அனைத்து ஒலியாக இருப்பதையும், இருமைகள் அற்றதாயும், மங்களகரமானதாயும் (ஓம் என்னும்) இந்த ப்ரணவத்தை அறிபவரே முனிவராவர். மற்றையோர் (முனிவர்) அல்ல.

இத்யந்தா மாண்டூக்யோபநித் இது ஈறாக மண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஓம் தத்ப்ரஹ்ம | ஓம் தத்வாயு: | ஓம் ததாத்மா | ஓம் தத்ஸத்யம் | ஓம் தத்ஸர்வம் | (நாராயண உபநிஶத் 68)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ஓம் என்னும்) ப்ரணவமே ப்ரஹ்மம், ப்ரணவமே வாயு (காற்று), ப்ரணவமே ஆத்மா, ப்ரணவமே உண்மைப்பொருள், ப்ரணவமே அனைத்துமாகும்.

இத்யாதி ஶ்ருதிபி: இவ்வாறு ஸ்ருதிகளான வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

‘ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.13)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
‘ஓம்’ என்ற ப்ரஹ்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

‘யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விந்தி யத்யதயோ வீதராகா: |
யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
எந்த நிலையை (ஓம் என்னும் அக்ஷரத்தை) வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், (மற்ற உலகியல் விஷயங்களில்) விருப்பமற்ற முனிவர் எதனுட் புகுவர், எதை விரும்பி ப்ரஹ்மச்சர்ய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

‘ரஸோSஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: |
ப்ரணவ: ஸர்வவேதேஶு ப்த: கே பௌரும் ந்ருஶு’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 7.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் ப்ரணவம்; வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

‘மஹர்ஶீனாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் |
யக்ஞானாம் ஜபயக்ஞோSஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
மஹரிஷிகளில் நான் ப்ருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம்.

‘ஆத்யம் ச த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மின் ப்ரதிஶ்டிதா |
ஏகாக்ஷரம் பரம் ப்ரஹ்ம ப்ராணாயாம: பரம் தப:’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.11)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
மூன்றெழுத்துடைய ப்ரஹ்மமே (ப்ரணவமாகிய ஓம்காரமே) ஆதியில் இருந்தது; இதில் (இந்த ப்ரணவத்தில்) மூன்று வேதங்களும் நிலைபெற்றிருந்தன. ஓரெழுத்தான ஓம்காரமே பரப்ரஹ்மம், ப்ராணாயாமமே சிறந்த தவமாகும்.

‘ப்ரணவாத்யாஸ்த்ரயோ வேதா: ப்ரணவே பர்யவஸ்திதா: |
வாங்க்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத்ப்ரணவமப்யஸேத்’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.9)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
மூன்று வேதங்களும் ப்ரணவத்தில் தொடங்கி ப்ரணவத்துடனே முடிகின்றன. அனைத்து சொற்களும் ப்ரணவ ரூபமேயாகும், எனவே ப்ரணவத்தையே நாம் உபாசிக்க வேண்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஶ்ச்ச விஶ்வஶப்தேனோங்காரோSபிதீயதே வாச்யவாசகயோரத்யந்தபேதாபாவாத் விஶ்வமித்யோங்கார ஏவ ப்ரஹ்மோத்யர்த்த: |
இவ்வாறு ஸ்ம்ருதிகளிலிருந்தும் ‘விஶ்வ’ எனும் நாமத்திற்கு ஓம்காரம் என்ற பொருளே நிரூபிக்கப்பட்டுள்ளது. சொல்லும், பொருளும் இணைபிரியாது இருத்தல்லால், விஶ்வம் அல்லது ஓம்காரமே ப்ரஹ்மம் என்பதே இதன் தேர்ந்த கருத்தாகும்.

‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலானிதி சாந்த உபாஸீத’ || (சாந்தோக்ய உபநிஶத் 3.14.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
ஐயமின்றி இங்கு அனைத்தும் ப்ரஹ்மமேயாகும்; அனைத்தும் அதனின்றே உருவாகி, அதனுள்ளேயே லயமடைந்து, அதிலேயே செயல்புரிகின்றன, எனவே, அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இவ்வாறு, அமைதியான மனத்துடன் ப்ரஹ்மத்தை உபாஸிப்போமாக!!

இதி ஏததுக்தம் பவதி யஸ்மாத் ஸர்வமிதம் விகாரஜாதம் ப்ரஹ்ம தஜ்ஜத்வாத்தல்லயத்வாத்ததனத்வாச்ச | ந ச ஸர்வஸ்யைகாத்-மத்வே ராகாதய: ஸம்பவந்தி | தஸ்மாச்சாந்த உபாசீத இதி ஶ்ருதே: |

இந்த ஸ்ருதி வாக்கியத்திலிருந்து, “இங்குள்ள அனைத்தும் மாற்றங்களும் ப்ரஹ்மத்தில் இருந்தே உருவாவதாலும், ப்ரஹ்மத்திலேயே லயமடைவதாலும், ப்ரஹ்மத்திலேயே அனைத்து செயல்களையும் புரிவதாலும், (இங்குள்ள) அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இங்கு அனைத்தும் (இரண்டின்றி) ஒன்றாகவே இருப்பதால், இதில் (ப்ரஹ்மத்தில்) விருப்பு, வெறுப்பாகிய தோஷங்கள் இல்லை. எனவே, அமைதியான உள்ளத்துடன் இந்த ப்ரஹ்மத்தை உபாசிப்பாயாக.” என்ற கருத்து புலனாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக